Friday, August 31, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 905














பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 91 - பெண்வழிச் சேறல்
குறள் - 905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

விளக்கம் :- மனைவிக்கு அஞ்சி நடப்பவன் நல்லவர்களுக்கு எப்பொழுதும் நல்ல செயல்களைச் செய்ய அச்சப்படுவான்.

அறத்துப்பாலில் மனைத் தக்க மாண்புடையள் என்று பெண்ணை பெருமைப்படுத்துகின்றார். இன்பத்துப்பாலில் பலவாறாக போற்றி உயிராக உயர்விக்கின்றார். அப்படிப் பட்டவர் பெண்ணைப் பற்றித் தவறாகக் கூறுவாரா?

இன்பத்துப்பாலில் காதலனாக வாழ்கின்ற தலைவன் அறத்துப்பாலில் அறவோனாக ஒழுகி, பொருட்பாலாகிய பொது வாழ்க்கையில் குடும்பம் மற்றும் சமூக கடமைகளை சரிவர நிறைவேற்றும் கடமை வீரனாக செயலாற்ற வேண்டும்.

காதலியாகவும், நல்ல வாழ்க்கைத் துணையாகவும் இருக்கும் குடும்பத் தலைவி தன் கணவன் ஆற்றும் நல்ல கடமைகளுக்கு உறுதுணையாக இருப்பவளாக இருக்க வேண்டும்.
தற்காத்து தற்கொண்டானைப் போற்றும் வாழ்க்கைத் துணையாக இருப்பவளே இல்லற வாழ்விற்கு ஏற்புடையவள்.
ஆனால் அப்படிப்பட்ட மாண்புடைய மங்கையாக இல்லாமல் தன் பெருமையையும், சிறப்பையுமே பொருளாகக் கருதி கணவனது பொறுப்புகளைப் பற்றி சிறிதும் உணராமல் அவனையும் செயலாற்ற விடாமல் செய்கின்ற சிறுமதி படைத்த மனைவிக்கு பயந்து வாழ்பவன் எப்போதும் நல்லவர்களுக்கு நல்லது செய்ய இயலாது. மனைவிக்கு பயந்து தன் பெற்றோருக்கும், உடன் பிறந்தாருக்கும் கூட உரிய கடமைகளைச் செய்ய இயலாது அஞ்சியே வாழ்வான்.
அவளைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே அவன் கடமையாகும். அதை விடுத்து அவள் மீது கொண்ட மோகத்தால் அவளுக்கு இணங்கி அஞ்சி நடத்தல் பெருமையற்ற செயலாகும். அவனால் நல்லவர் போற்றும் நற்காரியங்களைச் செய்ய இயலாது.

குறள்வழிச் சிந்தனைகள் - 911














பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 92 - வரைவின் மகளிர்
குறள் - 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்கு தரும்.

விளக்கம் :- அன்பினால் விரும்பாமல், பொருளால் விரும்பும் பொது மகளிர் பேசும் இனிய சொற்கள் இழுக்கையே தரும்.

மன உறுதியும், அறிவுத் தெளிவும் இல்லாத மக்கள் நாடுகின்ற பொருட்கள் சில உண்டு. அவை பொது மகளிர் , கள், சூது, என்பவை.
பெண்வழிச் செல்கின்றவன் எவ்வாறு பொதுக் கடமையை புறக்கணிப்பானோ, அவ்வாறே வரைவின் மகளிரையும் கள்ளையும் சூதையும் நாடுகின்றவனும் பொதுக் கடமையைப் புறக்கணிப்பான்.பொது வாழ்விற்குத் தகுதியற்றவனாகிறான்.

அறமல்லாத செயல்களான வரைவின் மகளிர், கள், சூது இவற்றை அறத்துப்பாலில் வைக்காமல் பொருட்பாலில் வரிசையாக வைத்து கடிந்துரைக்கிறார். இவை மூன்றுமே பொருட்செல்வத்தை அடியோடு அழிப்பன.
இம்மூன்றையும் ஒரு சேரக் கடிந்து கூறிய பெருமகனார் நம் தமிழகத்தில் தமிழ்ப் புலவர் வள்ளுவரே ஆவார்.

குறள்வழிச் சிந்தனைகள் - 1041














பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 105 - நல்குரவு
குறள் - 1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

விளக்கம் :- வறுமையைப் போல் துன்பம் உடையது எது என்றால், வறுமையைப் போல் துன்பமானது வறுமையே ஆகும்.
வறுமையைப் போலக் கொடியது வறுமை ஒன்றே.

குடிமக்களுக்கு வேண்டிய பல நல்ல இயல்புகளையும் கூறிய வள்ளுவர், குடி மக்களிடம் வறுமை இருக்கக் கூடாது. இரந்து வாழும் வாழ்க்கை இருக்கக் கூடாது. இரந்து வாழ அஞ்சுகின்ற அச்சம் வேண்டும், மக்கட் பண்புக்கு மாறான கயமை இருக்கக் கூடாது என்கிறார்.
நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் நான்கு அதிகாரங்களையும் பொருட்பாலில் இறுதியாக வைத்து குடிமக்களுக்குத் தகாதவற்றை எடுத்துக் கூறி கடிகின்றார்.
அவற்றுள் வறுமையே பெரும்பாலும் இரவுக்கும், கயமைக்கும் காரணம் ஆகையால் நல்குரவு என்ற இந்த அதிகாரத்தில் வறியவர்களின் வாழ்வை நினைந்து உருகிய உணர்வோடு வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துகின்றார்.

வள்ளுவர் பிறந்து வாழ்ந்து காலமுதி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகும், அந்த வறுமை இன்னும் அதே நிலையில் அல்லது அதைவிடக் கொடிய நிலையில் இருந்து வருவது வருத்தத்திற்குரியது.
வறுமை ஒழிந்தால் தான் பொது வாழ்வு சீர்பெறும் என்று எண்ண வேண்டிய நிலைமை இன்றும் உள்ளது.
வறுமை போல் பொல்லாதது வறுமையே. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதனுடைய கொடுமையும், வலியும், வேதனையும் தெரியும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 166














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 17- அழுக்காறாமை
குறள் - 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

விளக்கம் :-பிறருக்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப் படுகின்ற குணம் இருப்பின் அது அவனை மட்டுமன்றி அவன் உறவினரையும் உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி அழித்து விடும்.

அன்புடையவர்கள் பிறர் நன்றாக வாழும் போது அதைக் கண்டு மகிழ்வார்கள். அதுவே அன்பின் நெறியாகும். பிறர் சீருடன் வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் பொறுக்காமல் புழுங்குவது அன்பு இல்லாத குறையையே காட்டும்.
பிறருடைய இன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காத தன்மையே பொறாமை ஆதலின், ஒருவர் மற்றவர்க்கு உதவியாகப் பொருள் கொடுப்பதைக் கண்டாலும் பொறாமை ஏற்படுவதுண்டு. அவ்வாறு பொறாமை கொள்கின்றவன் தான் அழிவதும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்கள் அழிவதற்கும் காரணமாவான்.

இரக்கமற்ற ஈனர்களே
















பெண் சிசுவதை

காமத்துப்பால் மிகுந்து
காதலால் ஈன்ற
பெண்பாற் குழவியை
கொஞ்சி மகிழாமல்
கொண்டாடித் திரியாமல்
ஆண்பால் இல்லையென்று
அடியோடு வெறுத்து
பொருட்பால் இன்மையென்று
அறத்துப்பால் தர்மம்மீறி
தாய்ப்பால் கொடுக்காமல்
தாலாட்டுப் பாடாமல்
கள்ளிப் பாலூற்றி
கழுத்தினை நெரிக்கச்சொல்லி
முப்பாலில் மொழிந்தானா
முனிவன் வள்ளுவன்தான்
எப்பாலில் கண்டீர்கள்
இரக்கமற்ற ஈனர்களே ?




நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை

















அன்னை மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை


முன்னூறு நாள்சுமந்து
முகவரியைத் தருவதற்கு
அங்கமெலாம் நொந்து
அவதிகள் தான்பட்டு
பிரசவ வலியாலே
புழுவாக துடிதுடித்து
மரணத்தின் வாயில்சென்று
மறுபிறவி எடுத்தவள்.

உதிரத்தைப் பாலாக்கி
உயிரூட்டி வளர்த்தவள்
துன்பங்கள் பலவுற்று - கண்
துஞ்சாது காத்தவள்
வாந்தியும், மலசல
அசுத்தமும் சகித்தவள் _ பிள்ளை
வாழ்வே சதமென்று
சகலமும் பொறுத்தவள்.

தேவர்க்கும் கிட்டாத
தாலாட்டு படித்தவள்
தேனினும் இனியநம்
மழலையை இரசித்தவள்
தியாக தீபமாய்
மெழுகெனத் தேய்ந்தவள்
தன்சுகம் பாராது
உழைத்துழைத்து ஓய்ந்தவள்.

ஈரைந்து மாதபந்தம்
ஈடில்லா நமது சொந்தம்
எல்லையில்லா அன்புகாட்டி
கொள்ளைகொண்ட இனியகாந்தம் - அந்தக்
கருணைப் பெருங்கடலை
கண்கண்ட தெய்வத்தை
காப்பகத்தில் விடுபவர்கள்
கண்ணிருந்தும் குருடர்களே!


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

Thursday, August 30, 2018

காணாமற் போன பாக்குவெட்டி














காணாமற் போன பாக்குவெட்டி 

விறகு தறிக்கக் கறிநறுக்க வெண்சோற் றுப்புக்கடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலா றாகப் பிளந்துகொள்ளப்
பறகு பறகென்றே சொறிய பதமா யிருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்துப் போவதுண்டோ எடுத்தீர் ஆயின் கொடுப்பீரே!

- இராமச்சந்திர கவிராயர்.



இச்செய்யுளில் கவிராயரின் வறுமை நிலையும், காணாமல் போனது சிறு பாக்கு வெட்டியாயினும் அது எவ்வாறெல்லாம் தனக்கு உதவியது என்பதை கவி நலத்துடனும், சோகத்துடனும் சொல்கின்றார்.


பாக்கு வெட்டி சிறிய விறகுகளை நறுக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன் பட்டதாம். கையில் காசு இல்லாத போது அதனை அடகு வைத்து உப்பு முதலிய பொருட்கள் வாங்கப் பயன்பட்டதாம்.பாக்கு கிடைத்தால் அதனை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்கப் பயன்பட்டதாம். இவை தவிர உடம்பில் அரிப்பெடுத்தால் பறகு, பறகு என்று சொறிந்து கொள்ளவும் பயன் பட்டதாம். இவ்வாறெல்லாம் பலவாறாகப் பயன்பட்டுக் கொண்டிருந்த அந்த பாக்குவெட்டி காணாமல் போய் விட்டதே. இறகு முளைத்துப் பறந்து போய் விட்டதோ என்று வருந்துகிறார். அதை யாராவது எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சுகிறார்.

கவிதைப் பொருளாக அமைந்தது சிறிய பாக்கு வெட்டி எனினும் எவ்வளவு கவிதைச்சுவையோடும், சோக உணர்வோடும் சொல்கிறார் பாருங்கள்.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


கவி ஆண்ட கண்ணதாசன்-3














தொடர்ச்சி...

ஒரு பெரும் கவிஞனின் ஆற்றல் என்னவென்றால் அவன் எத்துறை சார்ந்தும் சிந்திக்கக்கூடியனாகவும், சிறந்த சொல்லாற்றலும், நிறைந்த கருத்துச்செறிவும், மிகுந்த கற்பனை வளமும் கொண்டவனாக இருக்க வேண்டும் இவை அனைத்தும் வாய்க்கப்பெற்ற கவிஞர்களின் வரிசையில் கண்ணதாசனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.

கண்ணதாசன் எழுதிய பல்சுவைப்பாடல்களை இன்று பார்க்கலாம்.

இனமேது என்ற தலைப்பில் கவிஞர் தந்த கவிதை பிரிவினை பாராட்டும் பித்தர்களுக்கு சிறந்த பதிலாக இருக்கும்.

சுடுகா ட்டெலும்புகளைச்
சோதித்துப் பார்த்தத்திலே
வடநாட் டெலும்பென்று
வந்தஎலும் பில்லையடி!
தென்நாட் டெலும்பென்று
தெரிந்தஎலும் பில்லையடி!
எந்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!   
ஒருநாட்டு மக்களுக்குள் 
ஓராயிரம் பிரிவை 
எரியூட்ட வில்லையெனில் 
எந்நாளும் துன்பமடி! 

காதலையும், கன்னியரையும் மட்டுமல்ல காய்கறிகள் பற்றியும் பாடுகிறார்.
அது அனுபவம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

முளைக்கீரை, மணத்தக் காளி
முருங்கைக்காய், வெள்ளரிக் காய்,
உளிப்பூண்டோ  டகத்திக் கீரை,
உயர்ந்த தக்காளி, கோசு,
காளியோடு நெய், பருப்பு,
கத்தரி, வெண்டை, பீட்ரூட்,
நெளிகின்ற புடலை, நெல்லி,
நீள்கொத் தவரைக்கா  யோடு,
பூசணி, சுரை, பறங்கி,
பூக்கோசு, பசலைக் கீரை,
பேசவோர் விலையில் லாத
பிஞ்சான பிரண்டை, வேலித்
தூசியில் முளைத்த கொவ்வை,
தொண்டங்காய், குப்பைக் கீரை,
ஊசிபோற் கொத்த மல்லி,
உண்ணுவாய் பொதினா வோடு!

இறந்து போனவர்களுக்கு இரங்கற்பா பாடுவதுண்டு கவிஞர் வாழும் காலத்திலேயே தனக்குத்தானே இரங்கற்பா பாடினார்.

இருந்து பாடிய இரங்கற்பா என்ற தலைப்பில் அந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
   கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
   வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
   சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
   என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
   செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
   வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
   மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
   போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
   தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
   கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
   காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
   எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
   சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
   இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
   கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
   கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
   கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
   கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
   என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
   நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
   பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
   வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
   தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
   பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
   என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
   என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
   படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
   அவன்பாட்டை எழுந்து பாடு!

ஞானம் என்ற தலைப்பில் கவிஞர் எழுதிய கவிதை அதி அற்புதமானது.
உயிர் குணமான காமத்தை கடக்காத மட்டும் ஞானம் கிட்டாது என்ற பெருஞானத்தை கவிதையில் கொடுத்த அழகு வியக்கத்தக்கது.

காதலெனும் போதையுற்று
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் – இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!

காய்த்தெழந்து விம்மிநின்று
வாய்த்த இளம் கொங்கைதன்னில்
சாய்த்த முகம் உண்டதொரு பானம் – தலை
சாயுமுனம் வந்ததடி ஞானம்!

நூலிடையின் கீழுந்தி
ஆலிலையின் மேல்விழுந்து
ஆயகலை கொண்டதொரு காலம் – இன்று
நோய்வழியில் வந்ததடி ஞானம்!

முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம் – இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!

 கவிதை முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



தொடரும்...
நன்றிகளுடன் இல்மீ

முத்தான மூன்று














ஆறிரண்டு திங்களடி அஞ்சுகமே நீயெனக்கு

சித்திரை நிலவே
தத்தையின் மகளே
வைகாசிக் கனியே
வந்துவிடு தனியே
ஆனி முத்தே
அன்பேஎன் சொத்தே
ஆடிப்பொன் தேரே
அணைக்க வா நேரே .
புரட்டாசி வெயிலே
பொங்கும் புனலே

ஐப்பசி மழையே
அம்மான் மகளே
கார்த்திகை விளக்கே
கரும்பு நீயெனக்கே
மார்கழிப் பனியே
மாதுளங் கனியே
தைத்திரு மகளே
தாவணிக் குயிலே
மாசிப் பிறையே
மல்லிகை முகையே
பங்குனி மலரே
பாவை என்னுயிரே.























புறப்படு பெண்ணே புயலாக...

அஞ்சி நடக்கவும்-காலில்
மிஞ்சி அணியவும்
தஞ்சம் சரண் என்று
கெஞ்சிப் பழகவும்
பஞ்சு மெத்தையில்
கொஞ்சிக் குலவவும்
எஞ்சியதை உண்ணவுமா
வஞ்சியராய்ப் பிறந்தோம்?
புறப்படு பெண்ணே புயலாக
உழவுமுதல் நிலவுவரை - நம்
முத்திரையை பதிப்போம்.


















பி(இ)றப்பின் சிறப்பு

கருணை உள்ளம்
கடவுளின் இல்லம்
இரங்கா மனங்கள்
இடுகாட்டுப் பிணங்கள்
வாழ்நாட் காலம்
வகுத்தவன் கோலம்
வசைநீங்கி வாழ்வான்
இசைவாணன் ஆவான்.

ஆவிபோம் நாள்
அறியோம் எவரும்
பாவி இவனெனப்
பலர்தூற்ற வாழ்தலின்
பரிவுடைத் தெய்வம்
பாரில் இவனென்று
பலரும் போற்றிட
வாழ்தலே சிறப்பு.

உயிர் போனாலும்
உறவுகள் தானழும்
உறவுகள் அழுவது
உடைமைக்கும், கடமைக்கும்
ஊரில் உள்ள
சனத்திறள் முழுவதும்
ஓலமிட் டழுவதே 
பி (இ)றப்பின் சிறப்பு.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 643














பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 65 - சொல்வன்மை
குறள் - 643

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

விளக்கம் :- தன் பேச்சைக் கேட்போரை தன்வயப்படுத்தும் சிறப்பினை உடையதாகித் தன் பேச்சைக் கேளாதவரையும் எப்போது கேட்போம் என்று விரும்புமாறு பேசுவதே சொல்வன்மையாகும்.

கல்வி என்பது கற்றவர் மட்டும் பயன் பெறுவதற்கன்று. மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும்.
தாம் இன்புற்றதை உலகு இன்புறச் செய்ய வேண்டும். கற்கும் போது தெளிவாகக் கற்று உணர்ந்தால் அந்தத் தெளிவு நெஞ்சில் இருக்கும்.அது வேண்டிய போது அழகாக வெளிப்படும். உள்ளத்தின் தெளிவு பேச்சில் வெளிப்படும். தானறிந்ததை பிறர் மனங்கொள்ளுமாறு கேட்பவர்களை கவரக்கூடிய வகையில் சொல்ல வேண்டும். கேளாதவரும் கேட்க வேண்டும் என்று விரும்பக்கூடியதாகச் சொல்ல வேண்டும். அதுதான் சொல்வன்மையாகும்.

Wednesday, August 29, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 932
















பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 94 - சூது
குறள் - 932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

விளக்கம் :- ஊதியமாக ஒன்றினைப் பெற்று பிறகு நூற்றினை இழக்கும் சூதாடிகளுக்கு, நன்மையைப் பெற்று வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? இவர்கள் நன்மை பெற்று வாழ வழி இல்லை.

சூதாட்டம் அறிவைக் கெடுக்க வல்லது. கடமையைப் புறக்கணிக்கச் செய்வது.பொது வாழ்விற்கு இடையூறானது.தனி வாழ்விற்கும் நன்மையற்றது. சூதாட்டத்தில் வெற்றி உண்டு என்று கூறலாம். ஆனால் ஒன்றினைப் பெற்று நூறினை இழக்க வேண்டி வரும். சூதாட்டத்தால் நம் செல்வம் அழிவது மட்டுமன்றி மானம், மரியாதையையும் இழக்க வேண்டி வரும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 882


















பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 89. - உட்பகை
குறள் - 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

விளக்கம் :- வாளைப் போன்று வெளிப்படையான பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டாம். உறவினர் போல் இருந்து கொண்டு உட்பகை கொள்வோர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.

புறத்தே வெளிப்படையாகத் தோன்றும் பகையை விடக் கொடியது உள்ளத்தில் பகை கொண்டு மேலுக்கு உறவு கொள்ளும் பகையாகும். அதுவே உட்பகை.
உட்பகை உடையவர்களை உணராமல் நம்மவர் என்று நம்பிக் கொண்டு ஏமாந்திருப்பது அறியாமையே.உட்பகை நமக்குத் தீமையே தரும்.

வெளிப்படையான பகைவரிடம் இருந்து ஒதுங்கி நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். உறவு போல் நடித்து உள்ளன்பு இல்லாமல் பழகி உட்பகை கொண்டவர்கள் நம்மை துன்புறுத்தத்தான் விழைவர்.

குறள்வழிச் சிந்தனைகள் - 782


பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 79 - நட்பு
குறள் - 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

விளக்கம் - அறிவுடையார் நட்பு பிறைமதி வளரும் தன்மை போன்றது. அறிவில்லாத பேதைகளின் நட்பு நிறைமதி தேய்ந்து குறையும் தன்மை போன்றது.

நட்பு என்பது பொழுது போக்கிற்காக அமைவது அன்று. உண்பது, தின்பது, ஆடல், பாடல், கேளிக்கைகளில் பங்குகொள்ள மட்டும் ஏற்படுத்திக் கொள்வது அன்று.
நட்பு நெஞ்சத்தில் ஊறியதாக இருக்க வேண்டும். உணர்வின் ஒற்றுமையால் பிறப்பதாக இருக்க வேண்டும்.

பொழுது போக்கிற்கு மட்டும் துணையாக இருந்து கெடுக்காமல், வாழ்க்கையின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, தவறு செய்யும்போது திருத்த வல்லதாக இருக்க வேண்டும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்  


1. இணக்கமறிந் திணங்கு.
2. சேரிடமறிந்து சேர்.
3. கூடிப் பிரியேல்.
4. பாம்பொடு பழகேல்.
5. மூர்க்கரோ டிணங்கேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்

1. சேரத் தக்க நல்லவர்களை ஆராய்ந்து நட்பு செய்.
2.. நட்பு பாராட்டுதற்குரிய நற்செய்கைகளை ஆராய்ந்தறிந்து நட்பு செய்.
3. ஆராய்ந்து நட்பு கொண்டு விட்டுப் பிறகு பிரிந்து செல்லாதே.
4. பால் தருகிறவருக்கும் விடத்தைக் கொடுக்கின்ற பாம்பினைப் போன்றவரோடு பழகாதே.
5. மூர்க்கத்தன்மை உள்ளவரோடு நட்பு செய்யாதே.

நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்

ஆராய்ந்து நட்பு கொள்ளவில்லையானால் அத்தகைய வேண்டாத நட்பு துன்பத்தையே கொடுக்கும்.

1. நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்.
2. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.
3 . துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்.

அறிவுடையோர் நட்பைக் கொள்ளுதல் வேண்டும். அறிவிலார் நட்பை விலக்குதல் வேண்டும்.

நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

நல்லோர் செய்யும் நட்பு நாள்தோறும் நன்றாக வளரும். கள்ள மனமுடைய தீயோர் செய்யும் நட்பு தேய்ந்து அழியும். ஒரு நன்மையும் பயக்காது.


ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே .

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

ஒரு நாள் பழகினாலும் உயர்ந்தோரின் நட்பு வேரூன்றி நிலைத்து நிற்கும்.

எத்தனை காலம் பழகினாலும் கீழ் மக்களின் தொடர்பு நீர்ப்பாசி போல் வேரூன்றாது. நிலைத்து நிற்காது.

பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்து.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

நண்பர்களை நல்வழியில் செலுத்தி நன்மை செய்யும் நேரம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்து நல்வழியில் உயர்த்துதலே நட்பாகும்.
அத்தகைய நட்பினைக் கொள்ள வேண்டும்.

நாளும் பிறைமதி போல் பெருகுவார் நட்பைக் கொள்ளுதல் வேண்டும்.
நிறைமதி போல் தேயும் நட்பை விடுதல் வேண்டும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

Tuesday, August 28, 2018

இன்பம் இன்பம்




செந்நெல் மணிகள் சிட்டுக் கின்பம்

மட்டவிழ்மலர்கள் வண்டுக் கின்பம்

புலவரின் பாக்கள் புரவலர்க்கின்பம்

புரவலர்க்கொடையே இரவலர்க் கின்பம்.

ஒளவைக் கின்பம் அதியனின் நெல்லி

தெளவைக் கின்பம் தரித்திரம், வறுமை

கொவ்வைக்கனிகள் கிளி கட் கின்பம்

கொழுநனைச்சேறல் கோதையர்க் கின்பம்.

நெஞ்சுக் கின்பம் நினைவின் அலைகள்

கண்ணுக்கின்பம் கவினுறு கலைகள்

சிற்பிக்கின்பம் செதுக்கிய சிலைகள்

செவிகட்கின்பம் மதலையின் குதலை.

முகிலுக் கின்பம் மயூர நடனம்

முளரிக்கின்பம் இரவியின் வருகை

அழகொளி வீசும் அம்புலி காணின்

அமுத வாவியின் குமுதம் மலரும்.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


கவி ஆண்ட கண்ணதாசன்-2



தொடர்ச்சி...

 வித்தாரக்கவி நெஞ்சில் முத்தாரமான தமிழில் முக்காலத்திலும் அழியா சத்தான கவி படைத்த கண்ணதாசனை பாராட்டவே ஒரு பெரும் தகுதி வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது எனக்கு.
காரணம் கண்ணதாசனை பாராட்டியுள்ளார் ஒரு பெரியவர் அவர் யார் தெரியுமா?

கடல் கடந்து, கண்டங்கள் கடந்து தன் நாவன்மையால் சைவத்தையும், தமிழையும் பரப்பிய ஆன்மீகக்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் கண்ணதாசனை தன் கவிதையால் வாழ்த்துகிறார்.
அதனை ஒரு நேரிசை வெண்பாவாக வடிக்கிறார்.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளை 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் - சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து.


குறள்வழிச் சிந்தனைகள் - 1222


பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 123 - பொழுது கண்டு இரங்கல்
குறள் - 1222

புன்கண்ணை வாழி மருள் மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

விளக்கம் - மயங்கிய மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக. நீயும் என்னைப் போல் துன்பப்படுகின்றாயே. உன் துணையும் என் தலைவனைப் போல் இரக்கம் அற்றதோ?
மாலைப் பொழுதே நீ ஏன் இப்படி கொடுமை செய்கிறாய்?

காதலி மாலைப் பொழுதைக் கண்டு வருந்துகிறாள். அதுவும் தன்னைப்போல் துணையின்றி மயங்கித் துன்புறுவதாக எண்ணுகின்றாள். அதனால் தான் மாலைப் பொழுதே நீயும் என்னைப் போல் துன்புறுகின்றாயோ? என் துணையைப் போல் உன் துணையும் இரக்கம் அற்ற தோ என்று கேட்கின்றாள்.

குறள்வழிச் சிந்தனைகள் - 1254
















பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 126நிறையழிதல்
குறள் - 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

விளக்கம் :- நான் இதுவரை நிறையுடையேன் என என்னை நான் நினைத்திருந்தேன். ஆனால் காமம் என்னுள் மறைந்து இருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

நம்மை வெறுத்தவர்களை நாமும் வெறுக்க வேண்டும். நம்மைப் புறக்கணித்தவர்களை நாமும் புறக்கணிக்க வேண்டும் என்று உலகம் சொல்கின்றது. ஆனால் புறக்கணித்தவர்களையே மீண்டும் மீண்டும் நாடும் மனத்தால் அன்பு வளரும். மானம் இழந்தாலும் அன்பு வளரும் என்று காதல் வாழ்க்கை கற்பிக்கின்றது.
அன்பு வளர்ந்த நெஞ்சிற்கு மானம் என ஒன்று இல்லை, வெறுப்பு என்பது கிடையாது, வெறுப்பாக நெருங்கினாலும் விரும்புவதாகவே முடியும் என்று காதல் வாழ்க்கை கற்பிக்கின்றது.

காதல் வாழ்க்கையில் வெறுப்பும் துறவும் கொள்ள முடியாது. தம்மை நீங்கியவரை வெறுத்து ஒதுக்குவது காதல் துன்பம் உற்றவர்களுக்குத் தெரியாது. எவ்வளவு தான் நிறையுடன் மறைத்து வைத்தாலும் மன்றம் அறிய வெளிப்பட்டு விடும்.

கவி ஆண்ட கண்ணதாசன்-1

காலத்தை வென்று இன்றளவும் சிலாகித்து இரசிக்கப்படுகிறது கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்.

தனி வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்த கண்ணதாசன் அவர்கள் கவலையோடு வாழாமல் கவிதையோடு வாழ்ந்தார் என்பது வெள்ளிடைமலை.

அவர் கவிதைகளைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் வைரமுத்து அவர்களின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.

"பொருக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித்தொடுத்த நேர்த்தியான சித்திரம்" என்று தான் கூறவேண்டும்.

காலக்கணிதம் என்ற தலைப்பில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதை இங்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.




              




கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!




மதுரை மீனாட்சியம்மன் மீது கவியரசர் எழுதிய அவிவேக சிந்தாமணி 
அவர்தம் மேதாவிலாசத்தை நிறுவுகிறது.




















திருடனும் அரகரா சிவசிவா,
என்றுதான் திருநீறு பூசுகிறான்!
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின்
பேர்சொல்லி  சீட்டை புரட்டுகிறான்;
முரடனும் அரிவாளில் காரியம்
பார்த்தபின் முதல்வனை கூவுகிறான்,
முச்சந்தி மங்கையும் முக்காடு
நீக்கையில் முருகனை வேண்டுகிறாள்;
வருடுவாருக்கு எல்லாம் வளைகின்ற தெய்வம்
என் வாழ்க்கையைக் காக்கவில்லையே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டிடும்
மதுரை மீனாட்சி உமையே!


தான்பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம்
என்றுதான் தாயன்று மாண்டு போனாள்!
தந்தையும் இப்பிள்ளை உருபடாது என்றுதான்'
தணலிலே வெந்து போனான்!
ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்,
உயரத்தில்  ஒளிந்து கொண்டான்!
உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டும்தான்
கருவாக வந்து நின்றாள்!
வார்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே,
வைகையில் பூத்த மலரே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டும் 
மதுரை மீனாட்சி உமையே!

தொடரும்....

நன்றிகளுடன் இல்மீ









சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...