பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 91 - பெண்வழிச் சேறல்
குறள் - 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
விளக்கம் :- மனைவிக்கு அஞ்சி நடப்பவன் நல்லவர்களுக்கு எப்பொழுதும் நல்ல செயல்களைச் செய்ய அச்சப்படுவான்.
அறத்துப்பாலில் மனைத் தக்க மாண்புடையள் என்று பெண்ணை பெருமைப்படுத்துகின்றார். இன்பத்துப்பாலில் பலவாறாக போற்றி உயிராக உயர்விக்கின்றார். அப்படிப் பட்டவர் பெண்ணைப் பற்றித் தவறாகக் கூறுவாரா?
இன்பத்துப்பாலில் காதலனாக வாழ்கின்ற தலைவன் அறத்துப்பாலில் அறவோனாக ஒழுகி, பொருட்பாலாகிய பொது வாழ்க்கையில் குடும்பம் மற்றும் சமூக கடமைகளை சரிவர நிறைவேற்றும் கடமை வீரனாக செயலாற்ற வேண்டும்.
காதலியாகவும், நல்ல வாழ்க்கைத் துணையாகவும் இருக்கும் குடும்பத் தலைவி தன் கணவன் ஆற்றும் நல்ல கடமைகளுக்கு உறுதுணையாக இருப்பவளாக இருக்க வேண்டும்.
தற்காத்து தற்கொண்டானைப் போற்றும் வாழ்க்கைத் துணையாக இருப்பவளே இல்லற வாழ்விற்கு ஏற்புடையவள்.
ஆனால் அப்படிப்பட்ட மாண்புடைய மங்கையாக இல்லாமல் தன் பெருமையையும், சிறப்பையுமே பொருளாகக் கருதி கணவனது பொறுப்புகளைப் பற்றி சிறிதும் உணராமல் அவனையும் செயலாற்ற விடாமல் செய்கின்ற சிறுமதி படைத்த மனைவிக்கு பயந்து வாழ்பவன் எப்போதும் நல்லவர்களுக்கு நல்லது செய்ய இயலாது. மனைவிக்கு பயந்து தன் பெற்றோருக்கும், உடன் பிறந்தாருக்கும் கூட உரிய கடமைகளைச் செய்ய இயலாது அஞ்சியே வாழ்வான்.
அவளைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே அவன் கடமையாகும். அதை விடுத்து அவள் மீது கொண்ட மோகத்தால் அவளுக்கு இணங்கி அஞ்சி நடத்தல் பெருமையற்ற செயலாகும். அவனால் நல்லவர் போற்றும் நற்காரியங்களைச் செய்ய இயலாது.