Tuesday, September 4, 2018

குருதட்சணை















ஆசிரியர் தின வணக்கங்களும்
நல் வாழ்த்துகளும்

ஆசிரியராய்ப் பணியைத் துவங்கி
அளப்பரிய அரும்பணியாற்றி
ஆட்சி பீடந் தன்னிலே
அருமைமிகு குடியரசுத் தலைவராய்
ஆட்சி செய்து
ஆசிரியர் இனத்திற்கே
அளவிலா பெருமை சேர்த்த
டாக்டர் .இராதாகிருஷ்ணன் 
அவர்களின் பிறந்த தினம்
ஆசிரியர் இனத்திற்கோர்
அரிய தினம்.

அறிவெனும் அற்புத உளி கொண்டு
ஆயிரமாயிரம் களிமண் பொம்மைகளை
ஆன்ற கலை நயத்துடன் உயிர்ப்பித்திடும்
அற்புத வரம் பெற்ற கலியுக பிரம்மாக்கள்.-தம்
ஆயுட்காலத்தில்
அநேக உயிர்ச் சிற்பங்களை
அன்றாடம் அற்புதமாகச் செதுக்கிடும்
ஆற்றல்மிகு சிற்பக்கலை வல்லுனர்கள்.

உயிரோவியங்களை உன்னதமாய் 
உருவாக்கிடும் சொல்லோவியங்கள்
ஊரார் பிள்ளைகட்குக் கல்வியை
ஊட்டி வளர்த்து - அவர்தம்
உயர்வைக் கண்டு பேருவகை கொள்ளும்
தாய் மனங்கொண்ட தவசிகள்

ஈரைந்து மாதங்கள்
இன்பச் சுமையேற்று
உயிரும் மெய்யும் தந்து கருவிற்கு
உரு கொடுத்தவள் ஈன்ற தாய் .
உள்ளொளி பெருகச் செய்து
உயிரும் மெய்யும் கற்பித்து
கருணையுற்றதால்
அக இருள் நீக்கிய
ஆசான் மாண்புக்குரிய மற்றொரு தாய்.
நானிலம் போற்றும் அவர்தம்
கனிவான சேவைக்கு
நாள்தோறும் அல்லவா
நன்றி விழா நடத்தப்பட வேண்டும்?

நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவப் பெருந்தகையின்
நல்வாக்கினை நவின்றவர்களே' 
நல்வாழ்வுக்கு வழிகாட்டிய
நன்மணிகளே கண்மணிகளே
குருவருள் மறந்தால்
திருவருள் கிடைக்குமோ?

உய்வித்த உம்மை
உளமார நினைந்து - நீர்
செய்திட்ட நன்மையை
நெஞ்சார உணர்ந்து
யானும் ஒரு ஆசிரியர்
எனை ஈன்றவரும் ஒரு ஆசிரியர்
என்னவரை ஈன்றவரும் ஒரு ஆசிரியர்
என்ற பெருமிதத்தோடு
குரு கொடுத்துதவிய
கூர்த்த மதியினால்
கொடுத்தேன் இவ்வலங்கலை காணிக்கையாக .

அலங்கல் - பூமாலை

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 175















பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 18 - வெஃகாமை.
குறள் - 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய  செயின்.

விளக்கம் :-பிறர் பொருளை விரும்பி எவரிடத்தும் அறிவில்லாத செயல்களைச் செய்தால், நுணுகி ஆராய்ந்து பெற்ற அறிவினால் ஆகும் பயன்யாது?

பிறர் பொருளைக் கண்டு பொறாமைப்படுதலே குற்றமானபோது, பிறர் பொருளை வெளவக் கருதுவது குற்றம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அன்புடையவர்கள் தம் பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுவாரேயன்றி, பிறர் பொருளைக் கைக்கொள்ளக் கருதார்.

தம் பொருள் போல் பிறர் பொருளையும் போற்றுவதே நடுவு நிலைமையுடையவர் கொள்கையாகும்.
நுட்பமாய் அமைந்து பல நூல்களையும் கற்றதால் விரிந்த அறிவு பெற்றவர்கள் பிறர் பொருளை விரும்பாமல் வாழ வேண்டும். அவர்களும் பிறர் பொருளை விரும்பி அதற்காக நெறியற்ற செயல்களைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அந்த அறிவினால் என்ன பயன்? யாதொன்றுமில்லை. அவர்கள் அறிவில்லாதவர்களாகவே கருதப்படுவர்.

நெஞ்சமெல்லாம் நீயே














உள்ளம் நொறுங்கி உடையும் வேளை
அழுகை வருவதன் நியாயமென்ன?
இமைகளை மூடி உனை நினைந்தால் - என்
சுமைகள் மறைந்திடும் மாயமென்ன?

அருகில் இல்லா சிறு பொழுதும்
அனலாய் நெஞ்சில் தீமூட்டும்
மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும்
மனதில் இன்ப நீருற்றும்.

சோலையின் குளுமை உன் வரவு
பாலையின் கொடுமை உன்பிரிவு
இரவும் பகலும் என்உணவு
இதயங் கலந்த உன்நினைவு.

மேனியாழை நீ மீட்டுகையில்
மேகமாய்க் கண்கள் மழைபொழியும்
இருவிழி தனிலே நீயிருந்தால்
இதயம் எப்படிதுயில் கலையும்?


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சொந்தம்














கல்விக்கு வாணி சொந்தம்
கலைவாணிக்கு வீணை சொந்தம்
கவிதைக்கு கம்பன் சொந்தம்
கண்ணுக்கு இமைகள் சொந்தம்.

வானுக்கு நிலவு சொந்தம்
நிலவுக்கு இரவு சொந்தம்
பகலுக்கு பரிதி சொந்தம்
முகிலுக்கு மழைதான் சொந்தம்.

குழலுக்கு கண்ணன் சொந்தம்
குறளுக்கு வள்ளுவன் சொந்தம்
மயிலுக்குத் தோகை சொந்தம்
குயிலுக்கு கீதம் சொந்தம்

மலருக்கு வாசம் சொந்தம்
மங்கைக்கு நாணம் சொந்தம்
மலைக்கு சிகரம் சொந்தம் - தமிழ்
மொழிக்கு ழகரம் சொந்தம்.

பாட்டுக்கு ராகம் சொந்தம்
கூட்டுக்கு பறவை சொந்தம்
பாலுக்கு வெண்மை சொந்தம்
காலுக்குச் சலங்கை சொந்தம்.

கடலுக்கு அலைகள் சொந்தம்
கைகட்கு வளைகள் சொந்தம்
சோலைக்குக் கிளிகள் சொந்தம்
சோலையவள் எனக்கே சொந்தம்

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...