Wednesday, August 29, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 782


பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 79 - நட்பு
குறள் - 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

விளக்கம் - அறிவுடையார் நட்பு பிறைமதி வளரும் தன்மை போன்றது. அறிவில்லாத பேதைகளின் நட்பு நிறைமதி தேய்ந்து குறையும் தன்மை போன்றது.

நட்பு என்பது பொழுது போக்கிற்காக அமைவது அன்று. உண்பது, தின்பது, ஆடல், பாடல், கேளிக்கைகளில் பங்குகொள்ள மட்டும் ஏற்படுத்திக் கொள்வது அன்று.
நட்பு நெஞ்சத்தில் ஊறியதாக இருக்க வேண்டும். உணர்வின் ஒற்றுமையால் பிறப்பதாக இருக்க வேண்டும்.

பொழுது போக்கிற்கு மட்டும் துணையாக இருந்து கெடுக்காமல், வாழ்க்கையின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, தவறு செய்யும்போது திருத்த வல்லதாக இருக்க வேண்டும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்  


1. இணக்கமறிந் திணங்கு.
2. சேரிடமறிந்து சேர்.
3. கூடிப் பிரியேல்.
4. பாம்பொடு பழகேல்.
5. மூர்க்கரோ டிணங்கேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்

1. சேரத் தக்க நல்லவர்களை ஆராய்ந்து நட்பு செய்.
2.. நட்பு பாராட்டுதற்குரிய நற்செய்கைகளை ஆராய்ந்தறிந்து நட்பு செய்.
3. ஆராய்ந்து நட்பு கொண்டு விட்டுப் பிறகு பிரிந்து செல்லாதே.
4. பால் தருகிறவருக்கும் விடத்தைக் கொடுக்கின்ற பாம்பினைப் போன்றவரோடு பழகாதே.
5. மூர்க்கத்தன்மை உள்ளவரோடு நட்பு செய்யாதே.

நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்

ஆராய்ந்து நட்பு கொள்ளவில்லையானால் அத்தகைய வேண்டாத நட்பு துன்பத்தையே கொடுக்கும்.

1. நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்.
2. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.
3 . துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்.

அறிவுடையோர் நட்பைக் கொள்ளுதல் வேண்டும். அறிவிலார் நட்பை விலக்குதல் வேண்டும்.

நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

நல்லோர் செய்யும் நட்பு நாள்தோறும் நன்றாக வளரும். கள்ள மனமுடைய தீயோர் செய்யும் நட்பு தேய்ந்து அழியும். ஒரு நன்மையும் பயக்காது.


ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே .

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

ஒரு நாள் பழகினாலும் உயர்ந்தோரின் நட்பு வேரூன்றி நிலைத்து நிற்கும்.

எத்தனை காலம் பழகினாலும் கீழ் மக்களின் தொடர்பு நீர்ப்பாசி போல் வேரூன்றாது. நிலைத்து நிற்காது.

பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்து.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

நண்பர்களை நல்வழியில் செலுத்தி நன்மை செய்யும் நேரம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்து நல்வழியில் உயர்த்துதலே நட்பாகும்.
அத்தகைய நட்பினைக் கொள்ள வேண்டும்.

நாளும் பிறைமதி போல் பெருகுவார் நட்பைக் கொள்ளுதல் வேண்டும்.
நிறைமதி போல் தேயும் நட்பை விடுதல் வேண்டும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...