Friday, September 28, 2018

மின்னல் வெட்டு இன்னல் நீக்கும்

















கடுங் கதிர்நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர்சினைஈன _ கொடுங் குழாய்
இன்னே வருவர் நமர்என்று எழில் வானம்
மின்னும் அவர்தூது உரைத்து.

- கார் நாற்பது - கண்ணங் கூத்தனார்.


தெளிவு:- 
வளைந்த காதணிகளை அணிந்துள்ள தலைவியே,
கொடிய கதிரை உடைய கதிரவன் வறுமையுறவும், கார்காலம் வளத்தை அடையவும், நெடிய காடெல்லாம் மிக்க மலர் அரும்புகளை ஈனவும், எழுச்சியை உடைய மேகம் உன் தலைவர் இப்போதே வருவார் என்று அவரின் தூதராய் வந்து அறிவித்து மின்னல் வெட்டுகிறது.
எனவே தலைவர் வந்து விடுவார் நீ கலங்காதே என்று தோழி தலைவியை நோக்கிச் சொன்னது.

கார் நாற்பது என்னும் இந்நூல் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. 
இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனார்.

இந்நூல் அகப்பொருளைச் சார்ந்தது. ஐந்து திணைகளுள் முல்லைத் திணைக்கு உரியது. இந்நூலில் 40 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார்காலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. எனவே இந்நூல் கார் நாற்பது எனப் பெயரிடப்பட்டிருத்தல் வேண்டும்.

விடலை தாய்






















புறநானூறு - பாடல் - 295.
பாடியவர் - ஒளவையார்.
திணை - தும்பைத் திணை
துறை - உவகைக்கலுழ்ச்சி


கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுகைத் தெழூதரூஉத் துரந்து எறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்து சிதைந்துவே றாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.


தெளிவு - கடலே வந்தாற் போன்ற பாசறையமைந்த 
போர்க்களத்தின் இடையே ,வேக வைத்துக் கூர்மையாக 
வார்க்கப்பட்ட வேலைப் பகைவர்மேல் திருப்பித் தன் 
படையை ஏவித் தானும் எழுந்து சென்று போர்க்களத்தில் 
பகைத்துவரும் படையைப் பிளந்து வாய்ப்பாகப் 
போரிடுமாறு இடமாக்கிக் தடுத்து படையின் ஊடுகளத்தில்
 துண்டுபட்டு வேறு வேறாகிக் கிடந்த சிறப்பான வீரனின் 
பெருமிதத்தைக் கண்டு வற்றிப் போன மார்புகள் 
பாலூறிச் சுரந்தன அந்த புறமுதுகிடாக் கொள்கை 
வீரனைப் பெற்ற தாய்க்கு.


குறள்வழிச் சிந்தனைகள் - 751















பால் - பொருட்பால்
இயல் - அங்க இயல்
அதிகாரம் - 76 - பொருள் செயல் வகை
குறள் - 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

விளக்கம் :- ஒரு பொருட்டாக மதிக்கப்படாதவரையும் பொருளாக மதிக்கச் செய்வது பொருள்.

மக்கள் வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. வாழ்வில் வரும் இடர்ப்பாடுகளைப் போக்கக் கூடிய ஆற்றல் பொருளுக்கே உண்டு.
அறிவை அற்றம் காக்கும் கருவி என்பர். துன்பத்தை நீக்குவதற்கு அறிவு மட்டும் போதாது. பொருளும் தேவை.ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும் பொருளாக மதிக்கச் செய்வது பொருளே. இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது செல்வம்.

மதிக்கச் செய்யும் பொருளானது பிறருக்கும் பயன்பட வேண்டும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 517














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 52 - தெரிந்து வினையாடல்
குறள் - 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

விளக்கம் :-இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்க வல்லன் என்று ஆராய்ந்து அச்செயலை அவனிடத்தே விடல் வேண்டும்.

எண்ணிய செயலை முடித்தல் என்பது மனிதர்களின் தலையாய கடமை ஆகும். எடுத்துக் கொண்ட செயலில் இடையீடு இன்றி மனதைச் செலுத்தினால் தான் அச்செயல் முழு வெற்றியடையும். இல்லையெனில் எடுத்துக் கொண்ட செயலும் நிறைவேறாது போகும். பழியும் வந்து சேரும்.
நன்மை விளையும் செயல் ஒன்றைத் தொடங்கி முயன்று முடிக்கும் போது தான் பெருமை வந்து சேரும்.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...