Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 242




பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 25- அருளுடைமை
குறள் - 242

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை 

விளக்கம் :- நல்ல பல நெறிகளால் ஆராய்ந்து அருள் உடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளுடைமையே உயிர்க்குத் துணையாக விளங்குகின்றது.

வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை வழங்கும் ஐந்தாம் உடைமை அருளுடைமை.
உலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தமக்கு ஏதாவதொரு உறவு முறையால் தொடர்புடையார் மாட்டு இயற்கையாக அன்பு தோன்றும். இவ்வன்பு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி தம் மக்கள், தன் சுற்றம் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி எல்லாரிடத்தும் , எல்லா உயிர்களிடத்தும் நெஞ்சம் நெகிழ்ந்து, கசிந்துருகிச் செலுத்தப்படும் போது அருளாக மலர்கின்றது.

அன்பின் முதிர்ச்சியே அருள். பிறர்க்குதவும் உயர்ந்த உள்ளமும், பிறர் துன்பம் கண்டு நெக்குருகி , அவரது துன்பம் துடைத்து உளம் மகிழ்வதே அருளாளர்களின் சீரிய பண்பாகும்.

அரசன் மகனாய்ப் பிறந்து, ஆடம்பரத்திலே வளர்ந்த சித்தார்த்தர் அரச வாழ்வையும்,வீடு மனைவி மக்கள் என அனைத்தையும் துறப்பதற்குக் காரணமாயிருந்தது அவரது அருள் உள்ளமே.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

வெள்ளைக் கில்லை கள்ள சிந்தை
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

களங்கமற்ற அருளுடை மனமுடையவன் இடத்தில் வஞ்சக எண்ணம் இல்லை.

அருளில் பிறக்கும் அறநெறி
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

அறநெறிகள் அனைத்தும் அருளின் வாயிலாகத் தான் தோன்றும்.

"அருளான் அறம் வளரும் "

"நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் "
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்,

அருளால்தான் எல்லா அறங்களும் வளரும்.

நல்லறமே எனது தந்தை, அறிவே எனது தாய், நன்மையை உணர்வதற்குக் காரணமாகிய கல்வியே எனக்கு உற்ற தோழன் என்கிறார் முனைப்பாடியார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
- வள்ளலார்.

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.
_ தாயுமானவர்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரும்,
எல்லாவுயிர்களையும், தம்முயிர்போல எண்ணிய அருட் சிந்தனையுடைய தாயுமானவரும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடும், அருளுள்ளத்தோடும் திகழ்ந்தனர்.

இவர்கள் மட்டுமா?

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.

இமையவரும் வியப்படையுமாறு புறாவின் துயர் துடைக்க தன் தசையைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, பசுவின் கண்ணீரைத் துடைக்க தன் அரும் பெறல் புதல்வனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் ஆகியோர் பறவைகள், விலங்குகளிடத்தும் அருள் உள்ளத்தோடு நடந்து கொண்டனர்.

வாடிய முல்லைக் கொடிக்குத் தேரீந்த பறம்பு மலையின் கோமானாம் பாரிவள்ளல், குளிரால் நடுங்குவதாக எண்ணி மயிலுக்குப் போர்வை தந்த பேகன், தமிழுக்குத் தலை தந்த குமண வள்ளல் ஆகியோரும் அருளாளர்களாகவே இருந்திருக்கின்றனர்.

பகைவர்க்கும் இரங்கிய பண்பாளர்கள் தான் அண்ணல் காந்தி, இயேசு நாதர், மெய்ப்பொருள் நாயனார் போன்றவர்கள்.

அருள்நெறியே வாழ்க்கைக்குத் தேவையான முதன்மையான நெறியாகும்.
கருணையுள்ளத்தோடு, பிறர் துயர் துடைக்கும் தூய எண்ணம் மேலோங்கி, பகைவர்க்கும் இரங்கும் பண்புள்ளமே அருளுடையோரின் அன்புடை அருளுள்ளமாகும்.

மனிதர் என்றால்
இருக்க வேண்டும்
அருள் உள்ளமே _ அதில்
மடை திறந்து
பாய வேண்டும்
அன்பு வெள்ளமே !

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 653



பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 66. - வினைத்தூய்மை
குறள் - 653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

விளக்கம் :-மேன்மேலும் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள், தம் மதிப்பு கெடுதற்குக் காரணமான தகாதசெயல்கள் செய்தலை தவிர்க்க வேண்டும்.

சில நேரங்களில் நல்ல நோக்கத்திற்காக சிறு தவறுகள் செய்ய நேர்தல் உண்டு. அப்போது விளையும் நன்மையைக் கருதி அதைச் செய்வது நல்லதா? அல்லது குற்றத்தைக் கருதிக்கை விடுவது நன்றா? என்று வெவ்வேறு வகையாகக் கருதுபவர்கள் உண்டு.
திருவள்ளுவரின் கருத்து தெளிவானது.
தன் மதிப்பு கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்தல் கூடாது. அது நம் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குலைக்க வல்லது. அத்தகு தகாதசெயல்களை செய்யாது தவிர்த்தல் வேண்டும் என்கிறார்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

தூக்கி வினை செய்.
_ ஆத்திசூடி - ஒளவையார்.

நல்ல செயலை சீர்தூக்கி முடிக்கும் உபாயத்தை அறிந்து செய்ய வேண்டும்.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

ஒரு செயலின் விளைவில் இருந்தே ஒருவர் செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.

பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம்.
_ உலகநீதி - உலகநாதர்.

புகழ் அடைவதற்குக் காரணமான நல்ல செயல்களைச் செய்யாது விலக்க வேண்டாம்.

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துத் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பல புள்ளிகளையுடைய, சிவந்த கண்களையுடைய புலி ஏறானது மிகுந்த பசி கொண்டும் பசுங்கொல்லைகளில் உள்ள பசிய பயிர்களைத் தின்னாது. அதுபோல நன்னெறி ஒழுகுதலில் உறுதியாக நின்றவர்கள் வறுமையுற்றாலும் முறையல்லாதவற்றைச் செய்வதற்கு மனங்கொள்ள மாட்டார்கள்.


நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லோரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமற் றதுவே.
- புறநானூறு - நரிவெரூஉத்தலையார்.

நல்ல செயல்கள் செய்ய மாட்டீராயினும், தீயவற்றைச் செய்யாது விலக்குங்கள். யாவரும் புகழ்வதற்கும், நல்வழியில் செலுத்தி உய்யுமாறு செய்வதற்கும் அதுவே ஏற்ற வழியாகும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.
- கணியன் பூங்குன்றனார்.

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
-நல்வழி - ஒளவையார்.

புண்ணிய செயல்களால் இன்பமும், பாவத்தால் அழிவும் நேரும். எல்லா சமயத்தினர் சொல்வதும் இதுவன்றி வேறில்லை. எனவே தீயவற்றைச் செய்யாது நன்மையே செய்தல் வேண்டும்.

இசைகுன்றா வினைபுரிந்து 
வசைநீங்கி வாழ்க!

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 1021




பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 103 - குடி செயல் வகை.
குறள் - 1021

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

விளக்கம் - பிறந்த குடிப் பெருமையை உயர்த்த தான் மேற்கொண்ட செயலில் சோர்வடைய மாட்டேன் என்னும் பெருமையைக் காட்டிலும் பெருமை மிக்கது வேறு எதுவும் இல்லை.

ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பைப் பொதுவாக உணர்ந்து கடமையைச் செய்தால்தான், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய நிலைமை வரும். உலகம் முழுதும் ஒரு குடும்பமாக நெருங்கிச் சுருங்கி வருவதையும் உணர வேண்டும்.

என் கடமையாகிய தொழிலைச் செய்வதற்கு நான் தளர மாட்டேன் என்னும் முயற்சிப் பெருமையைப் போல் சிறப்புடையது வேறு இல்லை.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூம் திங்கள்போல்
செல்லாமை செல்வன் நேர்நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.

_ நாலடியார் -சமண முனிவர்கள்.

தனது ஒரு பாகம் பாம்பினால் பிடிக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு பாகத்தால் அழகிய இடத்தையுடைய பெரிய பூமியை விளக்கும் பூரண சந்திரன் போல, உயர்குடியில் பிறந்தவர்கள் வறுமை நன்றாகத் தம்மிடம் நேர்ந்து நின்றாலும், பிறருக்கு உபகாரம் செய்வதற்குத் தளர மாட்டார்கள்.

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயின் சிதைந்து.
_ நாலடியார்.

கரும்பை வாயால் கடித்தும், கணுக்கள் நொறுங்கும்படி ஆலையில் இட்டுச் சிதைத்தும், உலக்கை,கல் முதலியவற்றால் நொறுக்கியும் இரசத்தைக் கொண்டாலும் அக் கருப்பஞ்சாறு இனிய சுவையே உடையதே. அது போல உயர்குடியில் பிறந்தவர்கள் நல்ல நிலைமை கெட்டு தங்கள் வாயினால் தீயவற்றைச் சொல்ல மாட்டார்கள்.

குடிப் பெருமை உயர்வதற்குரிய காரியத்தைச் செய்வார்களேயன்றி சிதையக் கூடியவற்றைச் செய்ய மாட்டார்கள்.

சால்பினில் தோன்றும் குடிமையும்
- திரிகடுகம்-நல்லாதனார்.

நற்குணச் செய்கைகளின் நிறைவில் உயர் குடிப் பிறப்பின் பெருமை விளங்கும்.

குணத்தினால் குலநலந் தெரியலாம்.
-அறப்பளீசுர சதகம் _ அம்பலவாணக் கவிராயர்

ஒருவரது குண நலன்களால் அவரது குடிப் பெருமையை அறியலாம்.

கோடி கொடுத்தும் குடிபிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.
- ஒளவையார்,

கோடி பொருளைக் கொடுத்தாகிலும் குடிப் பெருமை காக்கும் உயர்குடியில் பிறந்தவரோடு கூடியிருப்பதே கோடி பெறும்.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப _ நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் - குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.
- பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்.

கரிகாற் பெருவளத்தானிடம் இரு முதியவர்கள் ஒரு வழக்கை எடுத்து வந்தனர். அவனுடைய இளமையைக் கண்டதும், 'இவன் இளமைப் பருவத்தான் வழக்கிற்கு முடிவு சொல்ல அறியான் என்று கருதினர். அதனை அறிந்த கரிகாலன் முதியவனாகத் தன்னை ஒப்பனை செய்து கொண்டு வந்து, வந்த முதியவர்கள் மனம் மகிழுமாறு வழக்கினைக் கேட்டு நியாயம் வழங்கினான். இதனால் குலத்திற்கே உரிய அறிவுச் செழுமை இயல்பாக வந்து படியும் என்பது புலனாகிறது. சரியாக நீதி வழங்கி தன் குலப் பெருமை குன்றாமல் நீதி வழங்கினான் கரிகாற்சோழன்.

குடிப் பெருமை உயரப் பாடுபடுவதே சிறந்ததாகும். அதற்கு ஒரு போதும் தளரக்கூடாது. குடிப் பெருமையை உயர்த்துவதை விட மேன்மை தரக்கூடியது வேறு இல்லை.

பிறந்த குடி உயர்த்த
பெருஞ்செயல் செய்ய
மறவேன் மனந்தளரேன் _ என்ற
பெருமை பீடு தரும்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 728




பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 73 - அவை அஞ்சாமை 
குறள் - 728 

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.


விளக்கம் :- கற்றறிந்த சான்றோர்கள் கூடியிருக்கும் அவையில் தான் கற்றுணர்ந்தவற்றை பிறர் மனங்கொள்ளுமாறு எடுத்ததுரைக்க மாட்டாதவர்கள் நூல் பல கற்றறிந்தும் பயனில்லாதவர்களே ஆவர்.

கற்றோர் நிறைந்திருக்கும் மன்றத்திலும், மற்ற கூட்டங்களிலும் அச்சப்படாமல் பேசுவது ஒரு தனித்திறமையாகும். போர்க்களத்தில் அஞ்சாது போர் புரியும் திறமையை விட அவைக்களத்தில் அஞ்சாமல் பேசும் திறமை மிகவும் சிறந்தது.

நன்மை தரக்கூடிய ஒரு பொருளை எடுத்துச் சொல்வதானால் கேட்பவர் ஆர்வத்தோடு கேட்கும்படி, அவரது மனதில் பதியும்படி சொல்ல வேண்டும். அவ்வாறு அழகுற எடுத்துரைக்கும் ஆற்றலின்றி அவைக்கு அஞ்சுபவர் பல நூல்கள் கற்றிருந்தாலும் ஒரு பயனும் இல்லை.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் _சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.

- மூதுரை - ஒளவையார்.

கிளைகளும், கொம்புகளும் உடையனவாகி காட்டினுள்ளே தழைத்து நிற்கின்ற மரங்கள் நல்ல மரங்களாகா. கற்றோர் நிறைந்த சபைக்கு அஞ்சி வாசிக்க மாட்டாமல் நின்றவனும், குறிப்பறியமாட்டாதவனும் நல்ல மரங்களாம்.

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் _ நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

கற்றோர் அவைக்கு அஞ்சி உடல் நடுங்குவோருடைய கல்வியறிவும், கல்வியறிவில்லாதவரின் அவைக்கு அஞ்சாத ஆரவாரச் சொற்களும், கொடுத்துண்ணாதார் செல்வமும் , வறியவர்களுடைய ஈகை முதலான இனிய தன்மைகளும் தோன்றாதிருத்தலே ஒன்று.
கற்றோர் அவைக்கு அஞ்சும் கல்வி பயன்படாது.

கண்ணுக் கினிய சபைக்குமணி கற்றோனே.
விண்ணுக் கினியமணி வெய்யோனே.

- நீதிவெண்பா

வானிற்கு நல்ல மணி கதிரவனே. அதுபோல கண்ணுக்கினிய கற்றறிந்தார் அவைக்கு சிறந்த மணி போன்றவன் கற்றறிந்து அவைநடுவே சொல்லவல்லவனே.

தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும்
திரிகடுகம்-நல்லாதனார்.

பல்வகை நூலோரும் கூடியிருக்கும் நல்ல அவையிடத்தே எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துகளால் தாமாகவே பெருமை விளங்கும்.

புத்தகமே சாலத் தொகுத்தும் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறேபொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

_ நாலடியார் -சமண முனிவர்கள்.

நூல்களையே மிகச் சேர்த்தும் அவற்றின் பொருளை உணராதவர், அவற்றைக் கொண்டு வீடு முழுவதும் நிறைத்தாலும் , அந்நூல்களைப் பாதுகாக்கும் புலவர்களும் வேறே. அவற்றின் பொருளை ஆராய்ந்தறிந்து பிறர்க்கு அறிவுறுத்துகின்ற புலவரும் வேறேயாவர்.

கற்றறிந்தார் அவையில் மனங்கொள்ளுமாறு சொல்ல மாட்டாதவர் எவ்வளவு நூல்களைக் கற்றிருந்தாலும் பயனிலரேயாவர்.

ஆயிரம் கற்றறிந்தும்
அவையில் எடுத்து
அழகுறச் சொல்லாதார்
அறிவினால் ஆவதுண்டோ?
நாறா மலரென்று
நம்ஐயனே வைதிட்டார்
நல்லவற்றை நலமாய்
நல்லவையுள் எடுத்துரைத்து
நறுமண மலராவீர்!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 980



பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 98 - பெருமை
குறள் - 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

விளக்கம் :- பெருமை மிக்க குணமானது பிறருடைய குறைகளை மறைக்கும்.சிறுமைப் பண்பு பிறருடைய குணத்தை மறைத்து குற்றத்தையே பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

பிறப்பால் பெருமை சிறுமை இல்லை. செய்கின்ற தொழில்களிலும் பெருமை சிறுமை என்பதில்லை.
வசதி வாய்ப்புகளை வைத்தும் பெருமை அளந்தறியப்படுவதில்லை.

பெருமைக்குரிய நல்லியல்புகளான அன்பு, கருணை, ஈகை, விட்டுக் கொடுத்தல் , பணிவு, பொறுமை, முதலான பெருந்தன்மையான குணங்கள் வாய்த்தவரே பெருமைக்குணம் உடையவர் ஆவார்.அத்தகு சான்றோர்கள் மற்றவர்களின் நன்மையைப் பாராட்டி குற்றங் குறைகளை மறைப்பார்கள்.

இந்த நற்குணங்கள் எதுவுமே இல்லாத சிறுமதி படைத்தவர்கள் மற்றவர்களின் நன்மைகளை திரையிட்டு மறைத்து சிறு குறைகளைக் கூட பெரிதாக்கி பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.

- நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.

உருவத்தால் பெரியவர் எல்லோரும் பெருமை உடையவர் ஆகார் . உருவத்தால் சிறியவர் எல்லோரும் சிறுமையுடையவர் ஆகார் .
அறிவிலும், அருள் குணத்திலும் பெரியவரே பெருமைக்குரியவர் ஆவர்.

பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் .
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

சிறுமைக்குணம் கொண்ட கீழ் மக்களிடத்தில் சிறந்த ஒழுக்கம் காணப்படுவதில்லை.

பீடு பெற நில்.
- ஆத்திசூடி -

பெருமை தரும் படியான நல்ல வழியிலே நடப்பாயாக.

வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்மகட்கு
கல்லினும் வல்லெனும் நெஞ்சு.

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்

எவ்வளவு தான் நன்வழிகளைக் கேட்டாலும் கீழ்மக்கள் நெஞ்சில் நல்லறங்கள் புகாது. அவர்களின் மனம் கல்லை விட வலியதாகவே இருக்கும்.

சிறுமை தன்னை வானளாவ புகழ்ந்து கொள்ளும். தன் துதிபாடும். தன் குற்றங்களை மறைத்து அயலாரின் சிறுகுறைகளைக் கூட ஊதிப் பெரிதாக்கி பலர் முன் அவமானப்படுத்தும்.

ஆனால் பெருமைக்குணம் பெரிய தவறுகளையும் மன்னித்து, மற்றவர் அறியாமல் மறைக்கும்.

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர் பிறர் 
சீரெல்லாந் தூற்றி சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.

_ நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

மற்றவர் தம்மை மதிப்பதற்கான நன்மதிப்பை விரும்புபவன் மறவாமல் செய்யத்தக்கது என்னவென்றால், பிறருடைய பெருமைகளையெல்லாம் மற்றவர் அறியுமாறு வெளியே பரப்பி, அவர் தம் தீமைகளை வெளியே பரப்பாமல் காத்து வணக்கமான மொழிகளையே பேசி வருதலாகும்.

தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியனுலகின் வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்.

- பழமொழி நானூறு _ முன்றுறையரையனார்.

தம்பால் அமைந்திருக்கும் சிறுமை குணங்களை நீக்காதவராகிய ஒருவர், பிறர் குறைகளைச் சுட்ட முனைந்து இடைபுகுதல் பொருந்தாததாகும். வெள்ளாடானது தனது வாத நோயைப் போக்கிக் கொள்ளாது. பிறரது வாத நோயைத் தீர்க்க உதவும்.

தன் குறைகளை நீக்காத ஒருவர் மற்றவர் குறைகளை நீக்க முயலுதல் பொருந்தாது என்பது கருத்து .

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.

- நல்வழி- சமண முனிவர்கள்.

கீழ்மைக் குணம் பொருந்திய நற்குணம் இல்லாதவரிடத்து, நட்புக் கொண்ட அளவும் துன்பமேயாம்.
நடுங்குவதற்குக் காரணமாகிய தீச்செயல்களை விளையாட்டாகவும் பிறருக்குச் செய்ய விரும்பாத பெருமைக்குணம் கொண்ட பெரியோரிடத்துக் கொண்ட பகையும் பெருமையடையும்.

நல்லார் இடத்தும்
குறை யொன்றே
காணும் சிறுமை.
அல்லார் இடத்தும்
நிறை யொன்றே
காணும் பெருமை!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 388




பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 39 - இறைமாட்சி.
குறள் - 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம் :- அறநூல்களும், நீதி நூல்களும் சொல்லும் நெறிப்படி முறை செய்து மக்களைப் பாதுகாத்து வரும் அரசன் மக்களுக்கெல்லாம் இறைவன் என்று சிறப்பாக மதிக்கப்படுவான்.

இப்போது மன்னராட்சி இல்லை. நாம் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தலைமைகள், அதிகாரப் பொறுப்பில் உள்ள தலைமைகள், நிறுவனப் பொறுப்பில் உள்ள தலைமைகள் என பொதுவாகவே எடுத்துக் கொள்ளலாம்.

பொது வாழ்வின் நன்மையைக் கருதி , தவறு செய்பவர்களைத் தண்டித்தல் தலைவனின் கடமை. ஆனால் அவனே தன் கடமைகளையும், பொறுப்பையும் மறந்து தனது அதிகாரத்தையும், ஆற்றலையும் நீதியற்ற, முறையற்ற வழியில் செலுத்தி நிர்வகித்தால் அது கொடுங்கோல் ஆட்சியே ஆகும். 

மக்களை வருத்தப்பட வைக்காமல் முறையாக நீதி தவறாமல் நல்லாட்சி நடத்துபவனே இறைவனுக்கு சமமானவன் ஆவான்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவன் கல்வி கேள்விகளில் மட்டுமன்றி பண்பிலும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்.
சர்வாதிகாரம் செய்பவனாக அல்லாமல் சாந்தகுணம் உடையவனாக இருக்க வேண்டும்.
வருத்தி எடுப்பவனாக இல்லாமல் அனைவரும் வாயார வாழ்த்தும்படி நடப்பவனாக இருத்தல் வேண்டும்.
ஈகை, கருணை, எளிமை, நீதி தவறாமை, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவனாக இருத்தல் வேண்டும்.

தலைவன் என்ற ஆணவத்தையும், அதிகாரத்தையும் மறந்து கடை நிலை ஊழியனையும் காப்பவனாக இருக்க வேண்டும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

கொற்றவனறிதல் உற்றிடத் துதவி.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

அரசனானவன் அறிதல் ஒருவனுக்கு உரிய நேரத்தில் உதவி செய்தல் ஆகும்.

வணங்கி வழியொழுகி மாண்டார் சொற்கொண்டு
நுணங்கிய நூனோக்கி நுழையா - விணங்கிய
பானோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூனோக்கி வாழ்வான் நுனித்து.

- ஏலாதி - கணிமேதையார்

பிறர்க்குப் பணிந்து வணங்கி நடக்கக்கூடியவனாய், போற்றத்தக்க செந்நெறியிலே நடந்து, சான்றோர்களின் அறிவுரைகளை மேற்கொண்டு, மதிநுட்பமும் அறிவும் ஒழுக்கமும் உடைய நூல்களை ஆராய்ந்து, அந் நூல்களில் கூறியபடி வாழ்பவன் பழியற்ற தலைவனாய் பெருவாழ்வு வாழ்வான்.

வையம் இன்புறின் மன்னன் இன்புறும்
வெய்யது ஒன்றிறின் தானும் வெய்துறும் .

- சூளாமணி - தோலாமொழித் தேவர்.

தன் குடிமக்கள் மகிழ்ந்தால் தலைவன் தானும் மகிழ்வான். மக்கள் துயருற்றால் மன்னனும் துயருறுவான்.

கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே.

நீதியற்ற கொடுங்கோலன் வாழ்கின்ற நாட்டைக் காட்டிலும், கொடிய புலி வாழ்கின்ற காடே நல்லது.

குடியலைத் திரந்து வெங்கோலொடு நின்ற
முடியுடை யிறைவனா மூர்க்கனும் பதரே.

- நறுந்தொகை .

குடிகளை வருத்திப் பொருள் வாங்கும் தீய கொடுங்கோலரசன் பதரேயாவான்.

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.
- பாஞ்சாலி சபதம் - பாரதியார்.

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப_ இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

நீர் செல்லும் வழியே செல்லும் தெப்பம் .அதுபோல அரசனது ஆணை வழியே குடிகள் ஒழுகுவர்.

குடி படையில பிமானம்
மந்திரா லோசனை
குறிப்பறிதல் சத்ய வசனம்
கொடைநித்தம் அவரவர்க்கேற்ற மரியாதை ...

- குமரேச சதகம் -குருபாததாசர்.

குடிமக்கள் மீது அபிமானம் உள்ளவனாகவும், மதிநுட்பமுள்ளவனாகவும், குறிப்பறிந்து நடக்கவல்லவனாகவும், உண்மையே பேசுபவனாகவும், கொடையுள்ளம் கொண்டவனாகவும், அவரவர் திறமைக்கும், தகுதிக்கும் மதிப்பளிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

ஆளும் தலைவனுக்குரிய இயல்புகள் பல. அறநெறி தவறாது ஒழுக வேண்டும். தீநெறிகளை அறவே விலக்க வேண்டும். ஆளும் தலைவன் வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.

எல்லோரும் தன்னையே துதிபாட வேண்டும் என்று எண்ணுபவனாக இருத்தல் கூடாது. இட்டதே சட்டம் என்று இறுமாந்திருப்பவனாக இருத்தல் கூடாது. எளிமையும், இன்சொல்லும் கொண்டு அன்பு வழியிலும், அறவழியிலும் நடப்பவனாக இருத்தல் வேண்டும்.
தன்னைக் குறை கூறினால் பொறுத்து தன் மக்களையும், நாட்டையும் குறை கூறினால் புறக்கணிக்காத மானம் உடையவனாயிருத்தல் வேண்டும்.
அப்படிப்பட்ட தலைவனே கண்கண்ட கடவுள்.

அல்லல்பட வைக்காத
அறநெறி தவறாத
ஆட்சியாளர்களைத் தான்
அகிலமே எதிர்பார்க்கிறது அன்றும் இன்றும் என்றும்!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 355



பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 36- மெய்யுணர்தல்
குறள் - 355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


விளக்கம் - எப்பொருள் எத்தன்மை கொண்டு புறத்தே தோன்றினாலும் அப்பொருளின் உண்மையான இயல்பினைக் கண்டு உணர்வதே மெய்யுணர்வாகும்.

வாழ்க்கையில் அறியாமையும், எல்லாம் அறிந்தது போல் காட்டிக் கொள்ளும் போலியறிவும் உள்ளவரையிலும், இல்லாத துன்பமெலாம் இருப்பதாகக் கொண்டு கவலையும், அச்சமும் மிகுந்து துயருற நேர்கின்றது. உற்ற துயரைப் போக்கிக் கொள்ள வழியறியாது திகைக்கவும் நேர்கின்றது. ஆகவே நலவாழ்விற்கு மயக்க உணர்வு நீங்கி மெய்யுணர்வு ஓங்க வேண்டும்.

மெய்ப்பொருள் அல்லாதவற்றையெல்லாம் மெய்ப்பொருள் என்று நினைப்பதே மயக்க உணர்வு. அந்த மயக்க உணர்வால்தான் துன்பமான பிறவியும், துன்பமான வாழ்க்கையும் ஏற்படுகிறது.

எதுவாயினும் உண்மை இயல்பினை உணர்ந்து நடக்கும் மெய்யறிவு பெற்றால் எப்போதும் துன்பமில்லை.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


கற்றுத்துறை போய காதலற்கு கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்தவெலாம் துன்பமலா தில்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

கற்க வேண்டியவற்றைக் கற்று அதன்படி நடக்கும் கணவனுக்கு கற்புள்ள மனைவி பெற்றுக் கொடுத்த தலைமகனைப் போல், இருவகைப் பற்றினையும் அறவே ஒழித்த ஞானிகளுக்கு மெய்யுணர்வில் தோன்றும் இன்பமே மிகுந்த இன்பம் தருவதாகும்.

பொய்ப்புலன் களைந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் _ துப்பிற்
சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் றுரும்பு.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

சுழற்காற்றானது சிறிய துரும்பை சுழற்றும். அதுதன் வலிமையால் கல் துணை சுழற்றியடிக்காது. அதுபோல பொய்யாகிய ஐம்புலன்களும் இதன் தன்மை இத்தகையது என்றுணர்ந்த மெய்யுணர்வாளர்களை துன்பப்படுத்தாது.

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

-நல்வழி _ ஒளவையார்.

ஆராய்ந்து பார்க்கின் இவ்வுடம்பு புழுக்களும், பிணிகளும் நிறைந்த புல்லிய குடிசை என்பதை மெய்யறிவாளர்கள் அறிந்திருப்பர். ஆதலால் தாமரை இலை தண்ணீர் போல் எதிலும் ஒட்டாது பற்றற்றிருப்பார்கள்.

பட்டைக்கிழித்து பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து
முட்டச் சுருட்டியென் மொய்குழலால்கையில் முன்கொடுத்துக்
கட்டியிருந்த கனமாயக் காரிதன்காம மெல்லாம்
விட்டுப்பிரிய என்றோ இங்ஙனேசிவன் மீண்டதுவே.

- பட்டினத்தார்.

பட்டுத்துணி கிழித்து பருத்த ஓர் ஊசியுள் அதை வைத்துச் சுருட்டி அடர்ந்த கூந்தலையுடைய மனைவியின் கையில் கொடுத்தருளி, என்னைப் பற்றிய மாயையின் ஆசைகள் என்னை விட்டோடின என்று இப்பிறவியில் உண்மை தெரிந்து உணரும் படிக்கே கையில் காதற்ற ஊசியைக் கொடுத்து விட்டார்.

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற் றுழி .

_ நாலடியார் -சமண முனிவர்கள்.

உடலாகிய பொருளின் இழிவை அறியாமல், பூசப்பட்ட சந்தனத்தையும் மாலையையும் பார்த்து மயங்கி, அவ்வுடம்பைக் கொண்டாடுபவர்கள், முடை நாற்றம் வீசும் இவ்வுடலாகிய வண்டி, உயிராகிய அச்சுமரம் முறிந்த இடத்து, அதனைக் கழுகுகள் நெருங்கி குத்தித் தின்னுதலைப் பார்த்திருக்க மாட்டார்களோ?

புறத்தன்மையை வைத்து மதிப்பிடாமல் உண்மை இயல்பினை உணரும் அறிவே மெய்யறிவாகும்.

போலியைக் கண்டு மயங்கி
புத்தியை இழப்பது புல்லறிவு.
உண்மை நிலையினை உணர்ந்து
உணர்வில் தோன்றுவதே மெய்யறிவு !



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...