Saturday, June 11, 2022

சிப்பி தொடா நித்திலமே!

 




சிப்பி தொடா நித்திலமே!
சிற்ப உடல் அற்புதமே!

பாவலரும் பாடவொண்ணா 
காவனத்துப் பூவணமே!

ஓவியனும் கீறவொண்ணா 
ஒய்யார மானினமே!
 
தேன் பொதிந்தச்சொல்லினமே!
தேவருண்டக் கள்ளினமே!

பட்டினமே! சிட்டினமே!
நித்தமுந்தன் சொப்பனமே!

வட்டவிழிப் பார்வையினால் 
வட்டெறிந்த வல்லினமே!

மேகவுடை போட்டுவந்த 
மெலிதான மெல்லினமே!

இறைமறுப்புவார்த்தை சொல்லும் 
இனிதான இடையினமே!

மண்சுமந்த அண்ணலவன்
பெண்சுமந்த செய்தியினை 
நீயறியச் சொல்லவந்தேன்
கேளடி என் கோகிலமே!

மண்சுமக்கத் தோளுமுண்டு 
பெண்சுமக்கும் நாளுமென்று 
நித்திரையும் கெட்டதடி 
இரணந்தீர்ப்பாய் இரத்தினமே!

ஏறெட்டுப் பார்க்காமல் 
ஏக்கமது தீர்க்காமல் 
ஏதுமற்ற ஏதிலியாய்
ஏங்கவிட்ட பெண்ணினமே!

மோகமென்றும் முத்தமென்றும் 
மெத்தையிலே யுத்தமென்றும் 
விரகத்தில் விளிக்கவில்லை
காத்திடுவேன் கண்ணியமே.

சொல்லால் அடிபோட்டு 
சொப்பனத்தில் முடிபோட்டு
அம்மி மிதித்தாங்கு
அருந்ததியும் நாம்பார்த்து
பஞ்சணையும் பலகடந்து
பவளவிழா கண்டபின்பும் 
நீ காலணிந்தக் கொலுசொலிதான்
என் காதோர மோகனமே!

என்று பலக்கனவு கண்டு 
ஏழையாகி இறங்கிவிட்டேன்.

முத்துநகைப் பெட்டகமே!
மூச்சுவிடும் சித்திரமே!

பிரம்மனவன் வித்தகமே!
எனைப் பேதலிக்க விட்டிடுமே.

பந்திமுடிந்த பின்பும் பசித்து  
நிற்கும் என் மனதில் 
பாவையுன்னை பலகாலம் 
பதியம் போட்டு வைத்துவிட்டேன்

போட்ட விதை  என்மனதில் 
விருட்சமாகி நிற்குதடி 

காற்றோ? பெருமழையோ?
காடழிக்கும் கொடுந்தீயோ?
ஆழிப்பேரலையோ?
அலியார் தம் செய்வினையோ?
ஏதோ விரைந்துவந்து 
இவ்விருட்சத்தைச் சாய்க்காதோ?

செத்துப்பிழைக்குதடி மனம்      
சரவெடியாய் வெடிக்குதடி

குத்திக்கிழிக்குதடி உள்ளம் 
குமுறி அழுகுதடி 

வெட்டவெளிப் பட்டிணமாய்
விரிந்திருந்த என்மனது 

வெடிவிழுந்த ஈழமண்னாய்
ஓலமிட்டுக் கத்துதடி

அரிசியென்று அள்ளிப்பார்க்க 
ஆள்யாரும் இல்லையடி 

உமியென்று ஊதிப்பார்க்க
உற்றவரும் இல்லையடி 

பற்றிவிட்ட உன்நினைவோ 
விட்டுப் போகுதில்லையடி

சப்பிவிட்டுச் செத்துப்போக 
சையனைடும் இல்லையடி 

ஏக்கப்பட்டு ஏக்கப்பட்டு
எத்தனைநாள் வாழுவது 

தூக்குப்போட்டுச் சாகுறேன்டி
துளிநேரம் பார்த்திடடி. 

_ குறிஞ்சிக் கொற்றவன் 
   


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...