Saturday, September 1, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 420














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 42 - கேள்வி
குறள் - 420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

விளக்கம் -செவியால் கேட்டுச் சொற்களின் சுவை உணராமல் கேள்வி இன்பத்தை அறியாமல் வாயின் உணர்வை மட்டும் உடைய மக்கள் இறந்தால் என்ன?உயிருடன் வாழ்ந்தால் தான் என்ன?

கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும். படிக்காதவராக இருப்பினும் கற்றறிந்த ஆன்றோர்களின் மொழியை செவியாறக் கேட்டுச் சிறப்புற வேண்டும்.

நல்ல நூல்களை படிக்க முடியாமல் போகலாம். அல்லது கல்வியறிவே இல்லாதவர்களாகவே இருந்தாலும், கற்றறிந்தவர்கள் சொல்லும் பொருளைக் கேட்டாவது அறிய வேண்டும். செவி இன்பத்தை நுகர வேண்டும். 

செவியால் கேட்டறியும் சுவையை உணராது வாய்ச் சுவைக்கு, உணவின் சுவைக்கு முக்கியத்துவம் தருபவர்களை இறந்தென்ன? இருந்தென்ன என்று வன்மையாக கடிந்துரைக்கின்றார்.

கேள்விச் செல்வத்தை வலியுறுத்தும் தொடர்புடைய சில பாடல்களைப் பார்ப்போம்.

நடராசப்பத்து




சிதம்பரம் நடராசர் மீது சிறுமணவூர் முனுசாமி அவர்களால் பாடப்பட்ட மிக உயர்வான போற்றுதலுக்குரிய பாடல்கள் இவை.

இதன் பாடல்கள் உள்ளத்தை நெகிழச்செய்யும் தன்மைவாய்ந்தது.
விருத்த வகையைச் சேர்ந்த பத்துப் பாடல்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.

திருமுறைகளுக்கு அடுத்தபடியாக சிவ ஆலயங்களுள் பாடப்படும் மிக அற்புதமான பாடல்கள் இவை.

உரிமையாக தந்தையிடம் ஏதேனும் ஒன்றை வாங்கிக்கிட்டு வம்பு செய்யும் குழந்தையாய் அமைந்த பாடலையும் கொண்டுள்ளது.




இப்பாடல்கள், ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே என முடிவதாக அமைந்துள்ளன. இப்பாடல்களை இயற்றிய முனுசாமி முதலியார், திருவள்ளூர் தாலுக்காவில் தற்போது சிறுமணைவை என வழங்கப்படும் ஊரிலே சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் ஆவார். 


மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
பிறவும்நீ ஒருவநீயே,
பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
பெற்றதாய் தந்தைநீயே,
பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                             1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                                2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                            3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                            4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,
விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                             5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                               6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
வனோ தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                            7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                           8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                                9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                             10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியனிவரை,
சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                               11



குறள்வழிச் சிந்தனைகள் - 422














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 43 - அறிவுடைமை
குறள் - 422

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

விளக்கம் :-மனம் போன போக்கில் போக விடாமல் தடுத்து தீயவற்றினின்றும் விலக்கிக் காத்து நல்லதன்பால் செலுத்தி அறம் வளரச் செய்வது அறிவாகும்.

அறிவு மனிதனுக்கு அரிய, பெரிய ஓர் அதிசய உடைமையாய் அமைந்திருக்கிறது.
அறிவு இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இரு நிலைகளில் உள்ளது.

பிறப்புரிமையில் இயல்பாய் அமைந்தது இயற்கையறிவு.

கல்வி, கேள்வி, சிந்தனை முதலிய பயிற்சிகளால் விளைந்து விரிந்தது செயற்கை அறிவு.

அறிவுடையவன் ஆற்றல்களை வளர்த்துக் கொள்கிறான் -சாலமன்.

மணிக்கு ஒளி போல் மனிதனுக்கு அறிவு பெருமை தருகிறது. ஒளியிழந்த மணி இழிவுறுதல் போல அறிவிழந்த மனிதன் கழிவுறுகிறான்.

குறள்வழிச் சிந்தனைகள் - 1002














பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 101 - நன்றியில் செல்வம்.
குறள் - 1002

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம் - பொருளால் எல்லாம் உண்டாகும் என்று கருதிப் பிறருக்குக் கொடுக்காமல் உலோபம் செய்யும் மயக்கத்தினால் சிறப்பில்லாத பிறப்பு உண்டாகும்.

வாழ்க்கைக்குத் தேவையானவற்றையே மக்கள் தேடிச் சேர்க்கத் தொடங்கினார்கள். அப்படிச் சேர்த்து வைத்தவைகளுக்கே பொருள் என்றும் செல்வம் என்றும் பெயர் கொடுத்து வழங்கினார்கள்.

நம் ஐயன், செல்வத்தைப் பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகும் என்று கூறி, அத்தகைய செல்வத்தை நன்மையற்ற செல்வம் (நன்றியில் செல்வம்) என்று கடிகின்றார். பயன்படுத்தாத செல்வம் உடையவர்களையே - உலோபிகளையே _ அதன் வாயிலாகக் கடிந் துரைக்கின்றார்.

பொருளைச் சேர்த்து வைத்து ஒருவருக்கும் உதவாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு செய்வது தான் இழிபிறப்புக்குக் காரணமாகும்.

நான் செய்த குற்றம்













தனிப்பாடல்கள் பல தந்துள்ள இராமச்சந்திரக் கவிராயர் ஒருநாள் கல்வியறிவில்லாத ஒருவனை காணச் செல்கிறார். அவனைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறார். ஆனால் அவனோ அப்புகழுரைகளுக்குச் சிறிதும் தகுதியற்றவன். கொடைக் குணமும் இல்லாதவன். எனவே புலவரிடம், நான் ஒன்றும் தர முடியாது என்று திருப்பி அனுப்பி விடுகிறான். புலவருக்கு பெருத்த ஏமாற்றம் .

அறிவு சான்ற அறிஞர் பெருமக்களை அன்புடன் அழைத்துப் போற்றி, இன்சொல்பேசி, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள் பலர் இருக்கிறார்கள் நாட்டில் .அத்தகைய நாட்டில் தான் இவனும் இருக்கிறான்.இவனிருப்பது கூடக் குறையில்லை. இவனிடம் சென்று, பொருள் பெற வேண்டி, கல்லா ஒருவனை அவனிடம் இல்லா நலங்களை இருப்பதாகக் கூறிப் புகழ்ந்தேனே, அதுதான் என் குறை என்று வருந்திப் பாடுகிறார்.


கல்லாத வொருவனைநான் கற்றாய் என்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்.
பொல்லாத வொருவனைநான் நல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாத சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின் றேனே.


கல்வியறிவற்ற அவனை நான் கற்றவனே என்றேன். காட்டில் வேட்டையாடி வாழ்பவனை நாடாளும் மன்னவனே என்றேன். தீக்குணங்கள் நிறைந்தவனை நல்லவனே என்றேன். போர் செய்தே அறியாத அவனைப் புலியே என்றேன். சூம்பியதோளை உடைய அவனை போர் வலிமை மிக்க புயத்தினை உடையவனே என்றேன். கொடுத்தறியாத கையை உடையவனை வள்ளலே என்றேன். இத்தனையும் அவனிடம் இல்லாதவைதானே! எனவே தான் அவன் எனக்கு இல்லை என்றான் என்று இராமச்சந்திரக் கவிராயர் மனம் நொந்து பாடுகின்றார்.

இல்லாத நலங்களை இருப்பதாகப் புனைந்துரைத்ததால் இல்லை என்று அனுப்பி விட்டான் என்னை என்று தன் ஏமாற்றத்தையும் பொருட்செறிவோடு வடித்துத் தந்த புலவரின் தீந்தமிழ்த் திறனை எவ்வாறு போற்றுவது?

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


குணக்கேடர் இயல்பு















அறப்பளீசுர சதகம் - 
அம்பலவாணக் கவிராயர்


மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
வாயிலா தவனொரு பதர்
வாள் பிடித்து எதிரி வரினோடிப் பதுங்கிடும்
மனக்கோழை தானொரு பதர்
ஏறா வழக்குரைத் தனை வரும் சீசீயென்று
இகழநிற் பானொரு பதர்
இல்லாள் புறஞ்செலச் சம்மதித் தவளோடு
இணங்கி வாழ்பவனொரு பதர்
வேறொருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
வீண்பேசு வானொரு பதர்
வேசையர்க ளாசை கொண்டு உள்ள மனையாளை
விட்டுவிடு வானொரு பதர்
ஆறாத துயரையு மிடியையும் தீர்த்தருள் செய்
அமலவெம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுர தேவனே!

தெளிவு - கலைகளில் வல்லமை பெற்றிருந்தும் அவையில் பேச அஞ்சி நிற்பவனும், வாளுடன் பகைவன் வந்தால் பதுங்கி ஒதுங்கும் கோழையும், மற்றவர் சீசீ என்று இகழும் படி வாழ்பவனும், ஒழுக்கமற்ற மனைவியோடு கண்டுங் காணாது ஒத்து வாழ்பவனும், தன் பெருமையே தானே வியந்து வீண் பேச்சு பேசி பெருமை கொள்பவனும், வேசிகள் மீதுள்ள ஆசையால் கட்டிய மனைவியைக் கைவிடுபவனும் பதரேயாவார்கள்.

தீராத துன்பத்தையும், வறுமையும் தீர்த்தருள் புரிந்து காத்தருளும் அறப்பளீசுர தேவனே. நான் நீங்காமல் அனுதினமும் உன்னையே மனதில் துதிக்கின்றேன்.


குறள்வழிச் சிந்தனைகள் - 281














பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 29 - கள்ளாமை.
குறள் - 281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் :- தான் பிறரால் இகழப்படாமல் இருத்தலை விரும்புகின்றவன், எந்த ஒரு பொருளையும் வஞ்சித்துக் கொள்ள மனதாலும் நினைத்தல் கூடாது. 
பிறர் பொருளை அபகரிக்க நினையாதபடி தன் மனதைக் காக்க வேண்டும்.

எல்லோரும் வாழ வேண்டும் என்னும் அருள்நோக்கம் உடையவன் பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்க மாட்டான். அவ்வாறு நினைந்தால் அவனது அருள்நோக்கம் அர்த்தமற்றதாகி விடும். அதனால் பிறருடைய இகழ்ச்சிக்கும் ஆளாக நேரும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 652














பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 66 - வினைத்தூய்மை
குறள் - 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
நன்றி பயவா வினை.

விளக்கம் :- செய்யும் செயல் புகழும், நன்மையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். புகழும், நன்மையும் பயக்காத செயலை என்றும் செய்யாமல் விட வேண்டும்.
தன் புகழ் கெட வரும் தூய்மையற்ற செயல்களை எப்போதும் செய்தல் கூடாது.

வண்டும் மலரும்














நளனது வரலாறு கூறுவது நளவெண்பா. நளவெண்பாவின் ஆசிரியர் புலவர் புகழேந்தி.அவர் வெண்பா புலி, வெண்பாவிற் புகழேந்தி என சிறப்பிக்கப்படும் அளவு வெண்பா பாடுவதில் ஈடு இணையற்றவர்.

ஒரு முறை குலோத்துங்க சோழன் தமிழ்ச் சுவை, கவிச் சுவை நிறைந்த கற்பனைத் திறமும், காவிய நயமும் பொருந்த பாடப்பெற்ற நளவெண்பாவின் அருமை பெருமைகளை உணர்ந்து புகழேந்திப்பு லவரை தன் நாட்டிற்கு வரச் செய்து, அன்புடன் போற்றி அந்நூலை அரங்கேற்றச் செய்தான்.
புலவரும் ஒவ்வொரு பாடலையும் பாடி சொல் நயம், பொருள் நயம் முதலியவற்றை விளக்கி வந்தார்.

மல்லிகையே வெண் சங்காவண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப_ முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.

தெளிவு - வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச் சங்காகக் கொண்டு ஊதவும், சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலரம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பை பாதுகாத்துக் கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்து கொண்டிருக்கவும் அந்திப் பொழுது என்னும் அரசு மெல்ல நடந்து வந்தது.

இப்பாடலின் பொருட் சிறப்பு, வருணனை இவற்றை புகழேந்தியார் சொல்லிக் கொண்டிருந்த போது புலவர் ஒட்டக்கூத்தர் எழுந்து பாடலில் பிழையுள்ளது என்று கூறினார்.
இப்பாட்டின் முதலடியில் மல்லிகை மலரை வெண்சங்காகவும், வண்டினை சங்கூதுபவனாகவும் கூறியிருப்பது பொருத்தமானது, அழகானதுங் கூட .ஆனால் சங்கினை ஊதுபவர்கள் சங்கின் அடிப்பாகத்தையல்லவா வாயில் வைத்து ஊதுவார்கள்? இங்கே வண்டு மலரின் மேற்பக்கத்திலல்லவா ஊதுகிறது. ஆதலின் இப்பகுதி பிழையானது என்றார். அனைவருக்கும் உண்மை என்றே பட்டது. புலவர் புகழேந்திக்கும் சிறிது தயக்கம் தான்.

இருப்பினும் சிறிது சிந்தித்து நிலைமையைச் சமாளிக்கிறார்.
மதுவருந்தி மதிமயங்கித் தன்னிலைகெட்டுத் திரியும் குடியனுக்கு அடி யென்றும், நுனியென்றும் தெரியுமோ? என்று கூறினார். அனைவரும் கொல்லென்று சிரித்து மகிழ்ந்தனர்.புகழேந்தியின் நுண்ணறிவினையும், கவித்திறனையும், சமயோசிதத் திறனையும் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

உவப்பத் தலைக்கூடும் - பேரியல்பினராகிய புலவர்கள் எவ்வளவு நுண்ணறிவு மிக்க செயல்களைச் செய்து ஏனையோர்க்கு இன்பந் தருகின்றனர்.

கற்றறிந்த பெருமக்களின் பெருமையே பெருமை.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...