விளக்கம் -செவியால் கேட்டுச் சொற்களின் சுவை உணராமல் கேள்வி இன்பத்தை அறியாமல் வாயின் உணர்வை மட்டும் உடைய மக்கள் இறந்தால் என்ன?உயிருடன் வாழ்ந்தால் தான் என்ன?
கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும். படிக்காதவராக இருப்பினும் கற்றறிந்த ஆன்றோர்களின் மொழியை செவியாறக் கேட்டுச் சிறப்புற வேண்டும்.
நல்ல நூல்களை படிக்க முடியாமல் போகலாம். அல்லது கல்வியறிவே இல்லாதவர்களாகவே இருந்தாலும், கற்றறிந்தவர்கள் சொல்லும் பொருளைக் கேட்டாவது அறிய வேண்டும். செவி இன்பத்தை நுகர வேண்டும்.
செவியால் கேட்டறியும் சுவையை உணராது வாய்ச் சுவைக்கு, உணவின் சுவைக்கு முக்கியத்துவம் தருபவர்களை இறந்தென்ன? இருந்தென்ன என்று வன்மையாக கடிந்துரைக்கின்றார்.
கேள்விச் செல்வத்தை வலியுறுத்தும் தொடர்புடைய சில பாடல்களைப் பார்ப்போம்.
சிதம்பரம் நடராசர் மீது சிறுமணவூர் முனுசாமி அவர்களால் பாடப்பட்ட மிக உயர்வான போற்றுதலுக்குரிய பாடல்கள் இவை.
இதன் பாடல்கள் உள்ளத்தை நெகிழச்செய்யும் தன்மைவாய்ந்தது.
விருத்த வகையைச் சேர்ந்த பத்துப் பாடல்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
திருமுறைகளுக்கு அடுத்தபடியாக சிவ ஆலயங்களுள் பாடப்படும் மிக அற்புதமான பாடல்கள் இவை.
உரிமையாக தந்தையிடம் ஏதேனும் ஒன்றை வாங்கிக்கிட்டு வம்பு செய்யும் குழந்தையாய் அமைந்த பாடலையும் கொண்டுள்ளது.
இப்பாடல்கள், ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே என முடிவதாக அமைந்துள்ளன. இப்பாடல்களை இயற்றிய முனுசாமி முதலியார், திருவள்ளூர் தாலுக்காவில் தற்போது சிறுமணைவை என வழங்கப்படும் ஊரிலே சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் ஆவார்.
விளக்கம் - பொருளால் எல்லாம் உண்டாகும் என்று கருதிப் பிறருக்குக் கொடுக்காமல் உலோபம் செய்யும் மயக்கத்தினால் சிறப்பில்லாத பிறப்பு உண்டாகும்.
வாழ்க்கைக்குத் தேவையானவற்றையே மக்கள் தேடிச் சேர்க்கத் தொடங்கினார்கள். அப்படிச் சேர்த்து வைத்தவைகளுக்கே பொருள் என்றும் செல்வம் என்றும் பெயர் கொடுத்து வழங்கினார்கள்.
நம் ஐயன், செல்வத்தைப் பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகும் என்று கூறி, அத்தகைய செல்வத்தை நன்மையற்ற செல்வம் (நன்றியில் செல்வம்) என்று கடிகின்றார். பயன்படுத்தாத செல்வம் உடையவர்களையே - உலோபிகளையே _ அதன் வாயிலாகக் கடிந் துரைக்கின்றார்.
பொருளைச் சேர்த்து வைத்து ஒருவருக்கும் உதவாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு செய்வது தான் இழிபிறப்புக்குக் காரணமாகும்.
தனிப்பாடல்கள் பல தந்துள்ள இராமச்சந்திரக் கவிராயர் ஒருநாள் கல்வியறிவில்லாத ஒருவனை காணச் செல்கிறார். அவனைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறார். ஆனால் அவனோ அப்புகழுரைகளுக்குச் சிறிதும் தகுதியற்றவன். கொடைக் குணமும் இல்லாதவன். எனவே புலவரிடம், நான் ஒன்றும் தர முடியாது என்று திருப்பி அனுப்பி விடுகிறான். புலவருக்கு பெருத்த ஏமாற்றம் .
அறிவு சான்ற அறிஞர் பெருமக்களை அன்புடன் அழைத்துப் போற்றி, இன்சொல்பேசி, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள் பலர் இருக்கிறார்கள் நாட்டில் .அத்தகைய நாட்டில் தான் இவனும் இருக்கிறான்.இவனிருப்பது கூடக் குறையில்லை. இவனிடம் சென்று, பொருள் பெற வேண்டி, கல்லா ஒருவனை அவனிடம் இல்லா நலங்களை இருப்பதாகக் கூறிப் புகழ்ந்தேனே, அதுதான் என் குறை என்று வருந்திப் பாடுகிறார்.
கல்லாத வொருவனைநான் கற்றாய் என்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்.
பொல்லாத வொருவனைநான் நல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாத சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின் றேனே.
கல்வியறிவற்ற அவனை நான் கற்றவனே என்றேன். காட்டில் வேட்டையாடி வாழ்பவனை நாடாளும் மன்னவனே என்றேன். தீக்குணங்கள் நிறைந்தவனை நல்லவனே என்றேன். போர் செய்தே அறியாத அவனைப் புலியே என்றேன். சூம்பியதோளை உடைய அவனை போர் வலிமை மிக்க புயத்தினை உடையவனே என்றேன். கொடுத்தறியாத கையை உடையவனை வள்ளலே என்றேன். இத்தனையும் அவனிடம் இல்லாதவைதானே! எனவே தான் அவன் எனக்கு இல்லை என்றான் என்று இராமச்சந்திரக் கவிராயர் மனம் நொந்து பாடுகின்றார்.
இல்லாத நலங்களை இருப்பதாகப் புனைந்துரைத்ததால் இல்லை என்று அனுப்பி விட்டான் என்னை என்று தன் ஏமாற்றத்தையும் பொருட்செறிவோடு வடித்துத் தந்த புலவரின் தீந்தமிழ்த் திறனை எவ்வாறு போற்றுவது?
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
தெளிவு - கலைகளில் வல்லமை பெற்றிருந்தும் அவையில் பேச அஞ்சி நிற்பவனும், வாளுடன் பகைவன் வந்தால் பதுங்கி ஒதுங்கும் கோழையும், மற்றவர் சீசீ என்று இகழும் படி வாழ்பவனும், ஒழுக்கமற்ற மனைவியோடு கண்டுங் காணாது ஒத்து வாழ்பவனும், தன் பெருமையே தானே வியந்து வீண் பேச்சு பேசி பெருமை கொள்பவனும், வேசிகள் மீதுள்ள ஆசையால் கட்டிய மனைவியைக் கைவிடுபவனும் பதரேயாவார்கள்.
தீராத துன்பத்தையும், வறுமையும் தீர்த்தருள் புரிந்து காத்தருளும் அறப்பளீசுர தேவனே. நான் நீங்காமல் அனுதினமும் உன்னையே மனதில் துதிக்கின்றேன்.
விளக்கம் :- தான் பிறரால் இகழப்படாமல் இருத்தலை விரும்புகின்றவன், எந்த ஒரு பொருளையும் வஞ்சித்துக் கொள்ள மனதாலும் நினைத்தல் கூடாது.
பிறர் பொருளை அபகரிக்க நினையாதபடி தன் மனதைக் காக்க வேண்டும்.
எல்லோரும் வாழ வேண்டும் என்னும் அருள்நோக்கம் உடையவன் பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்க மாட்டான். அவ்வாறு நினைந்தால் அவனது அருள்நோக்கம் அர்த்தமற்றதாகி விடும். அதனால் பிறருடைய இகழ்ச்சிக்கும் ஆளாக நேரும்.
நளனது வரலாறு கூறுவது நளவெண்பா. நளவெண்பாவின் ஆசிரியர் புலவர் புகழேந்தி.அவர் வெண்பா புலி, வெண்பாவிற் புகழேந்தி என சிறப்பிக்கப்படும் அளவு வெண்பா பாடுவதில் ஈடு இணையற்றவர்.
ஒரு முறை குலோத்துங்க சோழன் தமிழ்ச் சுவை, கவிச் சுவை நிறைந்த கற்பனைத் திறமும், காவிய நயமும் பொருந்த பாடப்பெற்ற நளவெண்பாவின் அருமை பெருமைகளை உணர்ந்து புகழேந்திப்பு லவரை தன் நாட்டிற்கு வரச் செய்து, அன்புடன் போற்றி அந்நூலை அரங்கேற்றச் செய்தான்.
புலவரும் ஒவ்வொரு பாடலையும் பாடி சொல் நயம், பொருள் நயம் முதலியவற்றை விளக்கி வந்தார்.
மல்லிகையே வெண் சங்காவண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப_ முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.
தெளிவு - வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச் சங்காகக் கொண்டு ஊதவும், சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலரம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பை பாதுகாத்துக் கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்து கொண்டிருக்கவும் அந்திப் பொழுது என்னும் அரசு மெல்ல நடந்து வந்தது.
இப்பாடலின் பொருட் சிறப்பு, வருணனை இவற்றை புகழேந்தியார் சொல்லிக் கொண்டிருந்த போது புலவர் ஒட்டக்கூத்தர் எழுந்து பாடலில் பிழையுள்ளது என்று கூறினார்.
இப்பாட்டின் முதலடியில் மல்லிகை மலரை வெண்சங்காகவும், வண்டினை சங்கூதுபவனாகவும் கூறியிருப்பது பொருத்தமானது, அழகானதுங் கூட .ஆனால் சங்கினை ஊதுபவர்கள் சங்கின் அடிப்பாகத்தையல்லவா வாயில் வைத்து ஊதுவார்கள்? இங்கே வண்டு மலரின் மேற்பக்கத்திலல்லவா ஊதுகிறது. ஆதலின் இப்பகுதி பிழையானது என்றார். அனைவருக்கும் உண்மை என்றே பட்டது. புலவர் புகழேந்திக்கும் சிறிது தயக்கம் தான்.
இருப்பினும் சிறிது சிந்தித்து நிலைமையைச் சமாளிக்கிறார்.
மதுவருந்தி மதிமயங்கித் தன்னிலைகெட்டுத் திரியும் குடியனுக்கு அடி யென்றும், நுனியென்றும் தெரியுமோ? என்று கூறினார். அனைவரும் கொல்லென்று சிரித்து மகிழ்ந்தனர்.புகழேந்தியின் நுண்ணறிவினையும், கவித்திறனையும், சமயோசிதத் திறனையும் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.
உவப்பத் தலைக்கூடும் - பேரியல்பினராகிய புலவர்கள் எவ்வளவு நுண்ணறிவு மிக்க செயல்களைச் செய்து ஏனையோர்க்கு இன்பந் தருகின்றனர்.
கற்றறிந்த பெருமக்களின் பெருமையே பெருமை.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்