பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 17- அழுக்காறாமை
குறள் - 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
விளக்கம் :-பிறருக்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப் படுகின்ற குணம் இருப்பின் அது அவனை மட்டுமன்றி அவன் உறவினரையும் உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி அழித்து விடும்.
அன்புடையவர்கள் பிறர் நன்றாக வாழும் போது அதைக் கண்டு மகிழ்வார்கள். அதுவே அன்பின் நெறியாகும். பிறர் சீருடன் வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் பொறுக்காமல் புழுங்குவது அன்பு இல்லாத குறையையே காட்டும்.
பிறருடைய இன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காத தன்மையே பொறாமை ஆதலின், ஒருவர் மற்றவர்க்கு உதவியாகப் பொருள் கொடுப்பதைக் கண்டாலும் பொறாமை ஏற்படுவதுண்டு. அவ்வாறு பொறாமை கொள்கின்றவன் தான் அழிவதும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்கள் அழிவதற்கும் காரணமாவான்.
ஒளவியம் பேசேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
பொறாமையான வார்த்தைகளைப் பேசாதே.
ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு.
_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.
பொறாமையான வார்த்தைகளைப் பேசுவது ஒருவனின் செல்வத்திற்கு அழிவைத் தரும்.
இழுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க் கிசைந்த செல்வம்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமேயின்றி வாழ்வார்
தடுத்ததை விலக்கினோர்க்குத் தக்கநோய் பிணிகளாகி
உடுக்கவுமே உடையுமின்றி உண்சோறும் வெல்லமாமே.
- விவேக சிந்தாமணி.
வறுமையடைந்து இரப்பவர்க்கு மன மகிழ்ந்து உதவுபவர்கள் மனமகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொறாமை கொண்டு அதைத் தடுப்பவர்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவுமின்றி அழுவார்கள்.
தாமும்கொ டார்கொடுப்போர் தம்மையுமீ யாதவகை
சேமஞ்செய் வாருஞ் சிலருண்டே - யேமநிழல்
இட்டுமலர் காய்கனிக ளீந்துதவு நன்மரத்தைக்
கட்டுமுடை முள்ளெனவே காண்.
- நீதி வெண்பா.
தாமும் ஒருவருக்கு ஒன்று கொடுக்காமல், கொடுக்கக் கூடிய ஈகைக்குணமுடைய நன்மக்களையும் கொடுக்காமல் தடுக்கின்ற இழி குணம் படைத்த சிலர் இருக்கின்றார்கள்.
இன்பமான நிழலைக் கொடுத்து பூவும் காயும், பழமும் தந்து உதவக்கூடிய நல்ல மரத்தைச் சூழ்ந்த முள் மிக்க வேல மரத்தைப் போல கொடுப்பதைத் தடுப்பர்.
தாமும் கொடுக்காது கொடுப்பவரையும் தடுப்பர்.
கொடுப்பதை பொறாமை கொண்டு தடுத்தல் பாவமாகும்.
பொறாமை குணத்தால் இருக்கின்ற வளங்களும் கெடுமே அல்லாமல் முன்னேற வழி இல்லை.
பொறாமை கொண்டு மனம் புழுங்கி அடுத்தவர் செய்யும் உதவியைத் தடுப்பவன் தானும் அழிந்து அவன் சுற்றமும் அழியும்.
அறநெறியில் வாழ்வோர்க்கு பொறாமை கூடாது.
ஒளவியம் நீக்கி அன்பு நெறியோடு வாழ்வோம்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment