Sunday, September 2, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 406















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 41 - கல்லாமை.
குறள் - 406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
களரனையர் கல்லா தவர்.

விளக்கம் - கல்வி கற்காதவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லப்படும் நிலையினரே தவிர, ஒன்றும் விளையாத களர் நிலத்தைப் போன்றவராவார். ஒரு பயனையும் விளைவிக்காதவரே யாவர்.

கல்வி என்னும் தலைப்பில் ஒரு அதிகாரம் அமைத்து பல உயரிய கருத்துக்களைக் கூறிய வள்ளுவர் அத்துடன் அமையாது கல்லாமை என்ற தலைப்பிலும் ஒரு அதிகாரம் வகுத்து மேலும் பல கருத்துகளை கூறியிருப்பதிலிருந்தே கல்வியைப் பற்றிய அவரது எண்ணம் நமக்கு நன்கு விளங்கும்

கல்வியின் மேன்மையையும், கல்லாமையின் இழிவையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

குறள்வழிச் சிந்தனைகள் - 137














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை
குறள் - 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

விளக்கம் - ஒழுக்கத்தினால் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

ஒழுக்கம் நமக்கு மேன்மையைத் தரும். குணம், நலம், புகழ், பெருமை, உயர்வு ஆகிய நலன்களைக் கொண்ட சிறப்பை ஒழுக்கம் தரும்.
படி இல்லாமல் மாடியும் ஏறலாம். கால் இல்லாமல் நடந்தும் செல்லலாம். ஆனால் ஒழுக்கம் இல்லாமல் மேன்மையடையவே முடியாது.

ஒழுக்கம் தவறிய ஒருவன் தான் செய்யாத பழிபாவங்களைக் கூட செய்யவில்லை என்று சொன்னால் உலகம் அதனை ஒப்பாது. ஆதலின் அவன் இல்லாத பழியையும் ஏற்க நேரிடும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 879














பால் - பொருட்பால்
இயல் - அங்கவியல்
அதிகாரம் - 88 - பகைத் திறம் தெரிதல்
குறள் - 879

இளைதாக முள்மரங் கொல்க களையுநர்
கைக்கொல்லுங் காழ்த்த விடத்து.

விளக்கம் - இளையதாக இருக்கும் போதே முள் மரத்தைக் களைந்து அழித்திடுக. அது முதிர்ந்துவிட்டால் களைபவரின் கையை வருத்தும்

பகை தோன்றாமல் தடுத்து விடுவது நன்மை. ஒருகால் தோன்றி வளர்ந்து விட்டால், அது முதிரும் முன்னமே அதை வென்று அழிக்க வேண்டும். முள்மரத்தை இளையதாக இருக்கும் போதே களைந்து விடுவது போல் ஒழிக்க வேண்டும். இல்லையானால் அதே இள மரம் வைரம் ஏறி முதிர்ந்த பிறகு வெட்டுவோரின் கையை வருத்துவது போல் துன்பம் தரும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 604















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 61 - மடி இன்மை
குறள் - 604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

விளக்கம் - சோம்பலில் சிக்குண்டு மேலான முயற்சி செய்யாதவருக்குக் குடிப் பெருமை குன்றிக் குற்றமும் பெருகும்.

எந்த செயலையும் செய்ய முடியாது என்று சோர்வடைதல் கூடாது. முயற்சியும், ஊக்கமும் இருந்தால் ஆற்றல் தானே வரும். 
திருந்திய முயற்சியின்றி சோம்பித்திரிந்தால் ஒருவரது குடிப் பெருமையும் அழியும். குற்றமும் பெருகும்.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...