அன்னை மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை
முன்னூறு நாள்சுமந்து
முகவரியைத் தருவதற்கு
அங்கமெலாம் நொந்து
அவதிகள் தான்பட்டு
பிரசவ வலியாலே
புழுவாக துடிதுடித்து
மரணத்தின் வாயில்சென்று
மறுபிறவி எடுத்தவள்.
உதிரத்தைப் பாலாக்கி
உயிரூட்டி வளர்த்தவள்
துன்பங்கள் பலவுற்று - கண்
துஞ்சாது காத்தவள்
வாந்தியும், மலசல
அசுத்தமும் சகித்தவள் _ பிள்ளை
வாழ்வே சதமென்று
சகலமும் பொறுத்தவள்.
தேவர்க்கும் கிட்டாத
தாலாட்டு படித்தவள்
தேனினும் இனியநம்
மழலையை இரசித்தவள்
தியாக தீபமாய்
மெழுகெனத் தேய்ந்தவள்
தன்சுகம் பாராது
உழைத்துழைத்து ஓய்ந்தவள்.
ஈரைந்து மாதபந்தம்
ஈடில்லா நமது சொந்தம்
எல்லையில்லா அன்புகாட்டி
கொள்ளைகொண்ட இனியகாந்தம் - அந்தக்
கருணைப் பெருங்கடலை
கண்கண்ட தெய்வத்தை
காப்பகத்தில் விடுபவர்கள்
கண்ணிருந்தும் குருடர்களே!
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment