பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 94 - சூது
குறள் - 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
விளக்கம் :- ஊதியமாக ஒன்றினைப் பெற்று பிறகு நூற்றினை இழக்கும் சூதாடிகளுக்கு, நன்மையைப் பெற்று வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? இவர்கள் நன்மை பெற்று வாழ வழி இல்லை.
சூதாட்டம் அறிவைக் கெடுக்க வல்லது. கடமையைப் புறக்கணிக்கச் செய்வது.பொது வாழ்விற்கு இடையூறானது.தனி வாழ்விற்கும் நன்மையற்றது. சூதாட்டத்தில் வெற்றி உண்டு என்று கூறலாம். ஆனால் ஒன்றினைப் பெற்று நூறினை இழக்க வேண்டி வரும். சூதாட்டத்தால் நம் செல்வம் அழிவது மட்டுமன்றி மானம், மரியாதையையும் இழக்க வேண்டி வரும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
கோதாட்டு ஒழி
- ஆத்திசூடி - ஒளவையார்.
குற்றம் பொருந்திய விளையாட்டுகளை விட்டு விடு.
சூது விரும்பேல்.
- ஆத்திசூடி
ஒருபோதும் சூதாடுவதை விரும்பாதே.
சூதும் வாதும் வேதனை செய்யும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
சூதாடுதலும், குதர்க்கம் பேசுதலும் நமக்கு துன்பத்தையே தரும்.
செம்மையிலறஞ் செய்யாதார் திரவியம் சிதறவேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே.
- விவேக சிந்தாமணி.
தருமம் செய்யாதவர்கள் செல்வம் சிதறும் பொருட்டே நம் போன்ற வேசியரையும், கள்ளையும், சூதாடுதலையும் பிரம்மன் படைத்திருக்கிறான் என்று தன் தோழியிடம் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.
செருப்புக்கு தோல் வேண்டியே - இங்குக்
கொல்வாரோ செல்வக் குழந்தையினை ?
விருப்புற்ற சூதினுக்கே - ஒத்த பந்தயம்
மெய்த்தவ பாஞ்சாலியோ?
- பாஞ்சாலி சபதம் - பாரதியார்.
செருப்புக்குத் தோல் வேண்டி தான் பெற்ற செல்வக் குழந்தையைக் கொல்லத் துணிவரோ?
வேள்வித்தவத்தில் விளைந்த பாஞ்சாலியை சூதில் பணயப் பொருளாக வைப்பதோ?
சூதினால் தான் மகாபாரதப் போர் மூண்டது.சூதில் தன் நாடு, நகரம், செல்வங்கள் அனைத்தையும் தோற்று தம்பியரையும் தோற்று, தன்னையுமிழந்து தன் தாரத்தையும் வைத்திழந்தான் தருமேந்திரன்.
சூதின் காரணமாகவே கெளரவர் நூறுபேரும் அழிந்தனர்.
காரேயும் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயுந் தோளான் தனிமனம்போல்- நேரே
தவறாய் புரண்ட தமையனொடுங் கூடிக்
கவறாய் புரண்டான் கலி.
நளவெண்பா - புகழேந்திப் புலவர்.
கருங்கூந்தலையுடைய தமயந்தியை காதல் கொண்டு மணந்த நளராசன் தன் மனப்போக்கின் வண்ணமே சூதாட, அவனுக்கு முன் ஒழுங்கற்று ஆடிய தமையன் உறவைக் கொண்ட புட்கரனோடு கலிபுருடன் சேர்ந்து அவனுக்குத் தக்கவாறு சூதாடு கருவிகளிலிருந்து வேண்டியவாறு உருண்டான்.
சூதினால் நளராசன் நாடு, நகரம் அனைத்தும் தோற்று மனைவியுடன் கானகம் சென்றான். பிறகு நளனும், தமயந்தியும் பிரிந்து சொல்லொணா சோகங்களால் துயருற்றனர்.
ஓதலும் ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் - சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.
சூதாடுபவன் என்னும் பழியால் ஒருவன் பற்றப்படுவானாயின், அற நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடைய மேதை என்று பலராலும் கூறப்படும் பெருமையும் அவனை விட்டு மறையும்.
முதலில் மகிழ்வைத் தந்தாலும் இறுதியில் இன்னலைத் தரக்கூடியது சூது. சூதினால் எந்த நன்மையையும் அடைய முடியாது.
சூதாடுதல் அறிவை மழுங்கச் செய்து, இழிவுபடுத்தி நற்பண்புகளையும் கெடுக்க வல்லது.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment