Friday, August 31, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 905














பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 91 - பெண்வழிச் சேறல்
குறள் - 905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

விளக்கம் :- மனைவிக்கு அஞ்சி நடப்பவன் நல்லவர்களுக்கு எப்பொழுதும் நல்ல செயல்களைச் செய்ய அச்சப்படுவான்.

அறத்துப்பாலில் மனைத் தக்க மாண்புடையள் என்று பெண்ணை பெருமைப்படுத்துகின்றார். இன்பத்துப்பாலில் பலவாறாக போற்றி உயிராக உயர்விக்கின்றார். அப்படிப் பட்டவர் பெண்ணைப் பற்றித் தவறாகக் கூறுவாரா?

இன்பத்துப்பாலில் காதலனாக வாழ்கின்ற தலைவன் அறத்துப்பாலில் அறவோனாக ஒழுகி, பொருட்பாலாகிய பொது வாழ்க்கையில் குடும்பம் மற்றும் சமூக கடமைகளை சரிவர நிறைவேற்றும் கடமை வீரனாக செயலாற்ற வேண்டும்.

காதலியாகவும், நல்ல வாழ்க்கைத் துணையாகவும் இருக்கும் குடும்பத் தலைவி தன் கணவன் ஆற்றும் நல்ல கடமைகளுக்கு உறுதுணையாக இருப்பவளாக இருக்க வேண்டும்.
தற்காத்து தற்கொண்டானைப் போற்றும் வாழ்க்கைத் துணையாக இருப்பவளே இல்லற வாழ்விற்கு ஏற்புடையவள்.
ஆனால் அப்படிப்பட்ட மாண்புடைய மங்கையாக இல்லாமல் தன் பெருமையையும், சிறப்பையுமே பொருளாகக் கருதி கணவனது பொறுப்புகளைப் பற்றி சிறிதும் உணராமல் அவனையும் செயலாற்ற விடாமல் செய்கின்ற சிறுமதி படைத்த மனைவிக்கு பயந்து வாழ்பவன் எப்போதும் நல்லவர்களுக்கு நல்லது செய்ய இயலாது. மனைவிக்கு பயந்து தன் பெற்றோருக்கும், உடன் பிறந்தாருக்கும் கூட உரிய கடமைகளைச் செய்ய இயலாது அஞ்சியே வாழ்வான்.
அவளைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே அவன் கடமையாகும். அதை விடுத்து அவள் மீது கொண்ட மோகத்தால் அவளுக்கு இணங்கி அஞ்சி நடத்தல் பெருமையற்ற செயலாகும். அவனால் நல்லவர் போற்றும் நற்காரியங்களைச் செய்ய இயலாது.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு.
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

கணவனுக்குத் துன்பம் வந்த போது மனம் பதையாத பெண்கள் மடியில் கட்டிக் கொண்ட நெருப்புக்கு நிகராவர்.

கணவன் மேல் அவதூறு சொல்லும் பெண்கள் உயிரெடுக்கும் நமன் என்று எண்ணத் தகுந்தவர்கள்.

நற்குணமில்லாத மனைவிக்கு அஞ்சி நடக்கும் இயல்பை மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் | இல்லாளை அஞ்சுவான் , பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மை என்ற சொற்களால் வள்ளுவர் கடிந்துரைக்கிறார்.

பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றே
ஏறுமா றாக நடப்பாளே யாமாயின்
கூறாமல் சன்னியாசம் கொள்.
- ஒளவையார்.

கணவன் கருத்துக்கு ஏற்றவாறு நடக்கும் மாண்புடைய மனைவியானால் எப்படியும் இணங்கி வாழலாம். ஆனால் ஏறுமாறாக நடப்பவள் மனைவியாக அமைந்தால் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைத் துறந்து சன்னியாசி ஆகிவிடு என்கிறார்.

வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்தோம்பிச்
சொல்லெதிர்ச் சொல்லா ளெனில்.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

தீவினைகளை விலக்கி, தன்பால் வந்த விருந்தினர்களைப் பேணி, வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனுடைய வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும். அழகிய கூந்தலையும், மெல்லியல்பையும் உடைய நற்குணமனைவியும் கணவன் சொல்லுக்கு மாறாக எதிர்த்து ஒன்றும் சொல்லாதிருப்பாளாயின் அவள் சிறந்தவளேயாவாள்.

மணமாகி வந்த மறுநாளே கணவனைத் தன் கைப்பொம்மையாக்கி தன் விருப்பப்படி சுயநலமாக ஆட்டுவிப்பவள் நல்ல மனைவி யல்லள். அப்படிப்பட்ட மனைவியின் ஏவலுக்கு கட்டுப்பட்டு அஞ்சி நடப்பவன் நல்ல ஆண்மகனும் அல்லன்.

பெண்ணை அடிமைப்படுத்தும் பெண்ணடிமைத்தனமும் குடும்பமுன்னேற்றத்தைக் குலைக்க வல்லது. அது போலவே பெண் ஏவலுக்கு அஞ்சி நடக்கும் ஆணடிமைத்தனமும் ஆரோக்கியமற்றது.

அற்ற தலைபோக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றும்
மரமனை யானுக் கிந்த மானை வகுத்த
பிரம்மனை யான் காணப்பெறின்.

அற்ற தலைபோக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - நல்ல
குணங்காட்டு கூரறிவு மகனுக்கு மனையாளாய்
பிணங்காட்டுப் பேயை வகுத்த அறனை .
- ஒளவையார்.

ஏறுமாறாக நல்லவனுக்கு தீய குணமுடைய பெண்ணையும், நற்குணவதிக்கு பொருந்தாத கணவனையும் சேர்த்துப் படைத்த பிரம்மதேவனின் நான்கு தலைகளையும் திருகிப்பறியேனோ என்று ஆவேசப்படுகிறார்.

தவறு செய்யும் ஆணையும் கண்டிக்கிறார், பெண்ணையும் இடித்துரைக்கிறார்.

ஒளவையைப் போலவே நம் வள்ளுவப் பெருந்ததையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒத்த உரிமை நல்கும் சான்றோர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

பெண்ணேவல் செய்து அஞ்சி நல்ல காரியங்களைச் செய்ய அச்சப்படும் போது தான் கடிந்துரைக்கிறார்.

இல்லந்தோறும் மகளிர் நல்லவராய் விளங்கி காரியம் யாவினும் கை கொடுப்பவளாக இருக்க வேண்டும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...