Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 238














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 24 - புகழ்
குறள் - 238.

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.


விளக்கம் - தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால், உலக மக்களுக்கு வாழ்க்கையே பழியுடையதாகும்.

புகழ் என்பது ஒருவனுடைய நல்ல பண்புகளையும், நல்ல செயல்களையும் அறிந்தவர்கள் அவனைப் போற்றியுரைக்கும் சொல்லாகும். ஒருவன் இறந்த பின்னும் அழியாமல் நிற்பது ஆகையால் அதை இசை என்னும் எச்சம் என்று நம் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

தற்காலத்தில் புகழ் என்பது செல்வாக்கு பெற்றவர்கள் அரசியல், விளம்பரங்கள், ஊடகங்கள் வாயிலாக தம்மை பறைசாற்றிக் கொள்வதே என்று நினைக்கின்றார்கள்.
நம்மைப் பற்றி பிறர் புகழ வேண்டும். நாமே புகழ்ந்து பேசி தற்பெருமை கொள்ளக் கூடாது.

ஒருவருடைய இறப்புக்குப் பின்னும் அவர் பேசப்பட வேண்டும். மற்றவர் நெஞ்சங்களில் வாழ வேண்டும். அதுதான் உண்மையான புகழ்.
ஒருவனுடைய அறவொழுக்கத்தின் அடிப்படையாக எழுந்து விளங்குவதையே புகழ் என்கிறார்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


பீடு பெற நில்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பெருமையும், புகழும் அடையும்படியாக நல்ல வழியிலே நிற்பாயாக.

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
_ ஆத்திசூடி.

உன்னை அடுத்துப் புகழ்ந்தவர்களை கைவிடாமல் காப்பாற்றி வாழ்வாயாக.

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்.

- உலகநீதி - உலகநாதர்

புகழ் அடைதற்குக் காரணமாகிய நற்காரியங்களை செய்யாது விலக்க வேண்டாம்.

புகழ்ச்சியால் போற்றாதார் போற்றப்படும்.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

ஒருவன் பலரும் புகழும்படி ஒழுகுவானாயின், அப்பெரும் புகழினால் பகை வரும் அவனை வணங்குவர்.

தன்னச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தும்
என்று மழுக்காறு இகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.

- திரிகடுகம்-நல்லாதனார்.

தன்னை மதித்து வந்தவரை இகழாது ஏற்றுக் கொள்ளும் ஒருவனும், செல்வமுற்ற காலத்தும் நண்பர்களை மறவாமல் போற்றுபவனும், பொறாமையின்றி பிறர் நல்வாழ்வு கண்டு மகிழ்வானும் நிலைத்த புகழுடன் நின்று வாழ்வான்.

பெரியார்முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும்.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

பெரியவர்கள் முன் தன்னைச் சிறப்பித்துச் சொல்லிக் கொண்ட மூடன் தாழ்வை அடைவான்.

தமக்குப் பின் எஞ்சி நிற்பவை புகழும், பழியும் மட்டுமே. புகழைப் பெறாவிட்டால் பழிதான் எஞ்சி நிற்கும்.
புகழைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை.
அன்பு, கருணை, ஈகை, ஒழுக்கம் முதலியவற்றை முறையாகக் கடைபிடித்து வந்தாலே புகழ் நம்மைத் தானாகத் தேடி வரும்.


வசைநீங்கி வாழ்வான்
இசைவாணன் ஆவான்
அருளுடைத் தெய்வம்
அண்ணல் இவரென்று
அகிலம் போற்றிட
வாழ்தலே சிறப்பு!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 1031














பால் - பொருட்பால்
இயல்-குடியியல்
அதிகாரம் - 104. உழவு
குறள் - 1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.


விளக்கம் :- பல தொழில்களையும் செய்து சுழல்கின்ற உலகம் முடிவில் ஏர்த்தொழிலின் பின் தான் நிற்கின்றது. அதனால் எவ்வளவு வருந்தினாலும் உழவுத் தொழிலே உலகில் தலையாய தொழிலாகும்.

உழவுத் தொழில் உயர்வான தொழில்.உலக மக்களனைவரும் உண்டு உயிர் வாழ உதவும் உன்னத தொழில்.உழவுத் தொழிலும், உழவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

இன்றைய உழவர்களின் நிலைமை நெஞ்சுருகும் நிலையில் தான் உள்ளது. இன்று வறுமையின் எல்லையைக் காண வேண்டுமானால், கடன் சுமையின் தொல்லையைக் காண வேண்டுமானால், இன்னல்களின் இருப்பைக் காண வேண்டுமானால், ஏய்ப்பும், ஏமாற்றமும் பயக்கும் நிலையைக் காண வேண்டுமானால், சுரண்டுவோரின் திறமை செல்லும் இடத்தைக் காண வேண்டுமானால், புறக்கணிப்பின் பொல்லாங்கைக் காண வேண்டுமானால் உழவர்களின் வாழ்வையே காண வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் வழிவழியாக முன்னேறாமல் கந்தலாடையும், பொத்தல் குடிசையும், கால் வயிற்றுக் கஞ்சியுமாக அல்லல்படுகிறார்கள் விவசாயப் பெருமக்கள், உலகிற்கே படியளக்கும் உயர்ந்தவர்கள், உயிர்த்தியாகம் செய்கின்ற நிலைக்கு வந்துவிட்டது மிக மிக வேதனைக்குரியது.

நமது வாழ்வாதாரமே உழவர் பெருமக்கள் தான்.
உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் உலக மக்கள் சோற்றில் கை வைக்க முடியும். உழுது பாடுபடும் உழவர்களும், உழவுத் தொழிலும் போற்றப்பட வேண்டும். உழவுக்கும், உழவர்களுக்கும் உன்னத இடம் அளிக்கப்பட வேண்டும். தவறினால் நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம், 
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பது நம் ஐயனின் திருவாக்கு.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

நெற்பயிர் விளை
பூமி திருத்தியுண்.

_ ஆத்திசூடி _ ஒளவையார்.

நெற்பயிரை விளையச் செய்.

விளை நிலத்தை சீர்திருத்தி பயிர் செய்து உண்ணு.

தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

ஒருவரை கைகட்டி சேவித்து உண்ணும் உணவை விட உழுது பயிர் செய்து உண்ணும் உணவு இன்பம் தருவதாகும்.

உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல் .

வித்து மேரு முளவா யிருப்ப
எய்த்தங் கிருக்கு மேழையும் பதரே.

- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

உழவர்கட்கு அழகாவது உழுது விளைவித்து உண்டு வாழ்தலாகும்.

விதையும் , ஏரும் இருந்தும் உழுது பயிரிடாமல் சோம்பியிருக்கும் வேளாளன் பதரேயாவான்.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே _ ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு .

- நல்வழி - ஒளவையார்.

ஆற்றங்கரையிலுள்ள பெரிய மரமும், அரசன் அறிய பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் அழிந்து விடக் கூடியதே. உழுதுண்டு வாழும் வாழ்க்கையே பழுதில்லாதது ஆகும்.

நன்புலத் துவையடக்கி நாளுமாடோ போற்றிப்
புன்கலத்தைச் செய்தெரும் போற்றியபின் - இன்புலத்தின்
புன்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன்
நுண்கலப்பை நூலோது வார்.

- சிறுபஞ்ச மூலம் _ காரியாசான் .

வைக்கோலைச் சேர்த்து, அதனால் உழவெருதுகளைப் போற்றி, புன்செய்யை எருவிட்டு, நன்செய்யாகத் திருத்தி பண்படுத்தி உழுபவனே உழவுத் தொழிலில் சிறந்தவனாவான்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"
-மகாகவி பாரதியார்.

ஒப்பிலா உயர்ந்த உன்னதத் தொழிலான உழவுத் தொழிலையும், உழவர்களையும் போற்றுவோம். செயற்கை உணவுகளைத் தவிர்த்து உழவர்கள் விளைவித்துத் தரும் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாய், ஆனந்தமாய் உழவர்களை ஆதரித்து வாழ்வோம்.

உழவையும், உழவர்களையும் போற்றுவோம்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 523















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 53 - சுற்றந்தழால்.
குறள் - 523.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.


விளக்கம் - தன் சுற்றத்தாருடன் நெருங்கி மனங் கலந்து பழகாதவனுடைய வாழ்க்கை, குளத்தின் பரப்பில் நீர் நிறைந்து கரை இல்லாமையால் யாருக்கும் பயன்படாது அழிவதைப் போல பயனற்றுப் போகும்.

உள்ளன்போடு கூடிய சுற்றம் அமையப் பெறுவது ஒரு வரம். அவ்வரம் வாய்க்கப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்,

தனி வாழ்க்கையில் சுற்றத்தார் அமைவது போல் பொது வாழ்க்கையிலும் சுற்றத்தார் அமைவது உண்டு. சுற்றம் என்பது பிறப்பின் தொடர்பாலும், பெண் கொள்ளல், கொடுத்தல் ஆகியவற்றாலும் ஏற்படும் சுற்றம் மட்டும் அன்று.

பொது வாழ்வில் எந்த பிரதிபலனும் எதிர்பாராது நம்மோடு உள்ளன்போடு பழகி நேசம் காட்டுபவர்களும் நம் திருக்குறள் புலன உறவுகள் போல உண்மைச் சுற்றமாக விளங்குவார்கள்.
அத்தகு சுற்றங்கள் பதவி, செல்வாக்கு நீங்கிய காலத்தும் அன்பு பாராட்டுவார்கள். உண்மைச் சுற்றம் எப்போதும் நிழல்போல் உடனிருக்கும்.
போலிச் சுற்றம் வாழ்ந்தால் உடன் இருக்கும்.
வீழ்ந்தால் விலகி விடும்.

விதைப்பது தான் விளையும்.
நாம் எவ்வளவு உள்ளன்போடு உறவு கொள்கின்றோமோ அதற்கேற்றபடி தான் உறவுகள் அமையும்.
நாம் அன்பு செலுத்தினால் அவர்களும் அன்பு செலுத்துவர். நாம் அவர்களோடு ஒட்டிப் பழகாது விலகினால் அவர்களும் விலகத்தான் செய்வார்கள்.

நம் நெருங்கிய உறவுகளோடு மனங் கலந்து பழகி ஒட்டி உறவாடினால் வாழ்க்கையில் இன்பம் பெருகும். குற்றம் பாராட்டிக் கொண்டே மனம் போனபடி நடந்தால் உறவுகளும் சேராது. வாழ்க்கையும் கரையில்லாத குளம் போல் பயனற்று வெறுமையாகிவிடும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
குற்றம் பார்க்கின் சுற்ற மில்லை.

- கொன்றைவேந்தன் _ ஒளவையார்.

உறவுகளுக்கு அழகாவது நலத்தீங்குகளில் சூழ்ந்து இருப்பதாகும்.

குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவாவோர் ஒருவருமில்லை.

உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.
_ நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.

உடனிருப்பவர் எல்லாம் உண்மை உறவினராகார். இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் சுற்றத்தாரே உண்மை உறவினர் என்று சொல்லத் தகுதியுடையவர்.

உற்ற பெருஞ் சுற்றமுற நன்மனைவியுடன் பற்றி மிக வாழ்க .
_ நீதி வெண்பா.

பெருமை பொருந்திய உறவுகளோடும், வாய்த்த நல் மனைவியோடும் வாழ்தல் வேண்டும்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

- மூதுரை - ஒளவையார்.

நீர் வற்றிய குளத்தினின்றும் நீங்குகின்ற நீர்வாழ் பறவைகள் போல வறுமை வந்தபோது விட்டு நீங்குவோர் உண்மை உறவினர் ஆகார் .அக்குளம் வற்றிய போதும் அதில் வாடும் கொட்டி, அல்லி, ஆம்பல் கொடி போல நீங்காது உறவாடுபவரே உண்மை உறவினராவார்.


மனங்கலந்து பழகினால்
மகிழ்ச்சி பொங்கும்
உறவுகள் நிலைக்கும் 
குற்றங் கண்டால்
சுற்றம் விலகும்
சூழிருள் மூழ்கும்!
அன்பை விதைப்போம்
அறுவடை செய்வோம்
சுற்றம் சூழ
வள்ளுவமாய் வாழ்வோம்!

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 61















பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 7 - மக்கட்பேறு.
குறள் - 61.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


விளக்கம் - இல்வாழ்க்கை நடத்துபவர் பெறும் பேறுகளுள், அறிய வேண்டியவற்றை அறிய வல்ல நன்மக்களைப் பெறுவதைப் போன்ற வேறு எந்த சிறந்த பேறும் இல்லை.

இல்வாழ்க்கையில் பெற வேண்டிய நற்பேறுகள் பல உள்ளன. அவற்றில் நன் மக்களைப் பெறும் பேறு பெரும் பேறாகும். அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய மக்களைப் பெறுதலைப் போல சிறப்புடைய பேறுகள் வேறு எதுவும் இல்லை.

இருமனம் இணைவதே திருமணம். இணைந்த இரு மனங்கள் இனிமையாய்க் கருத்தொருமித்து இயைந்து நடத்துவதே இல்வாழ்க்கை. அத்தகைய இனிதான இணை அமையப் பெறுவதே வாழ்க்கைத் துணைநலம். அத்தகைய துணை அமையப் பெற்று அத்தகு இணையரின் அன்பு வாழ்க்கையில் விளைந்த நன் முத்துகள் தான் மக்கட்பேறு.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். மனைவி மட்டுமல்ல, இல்லறத்திற்கு இயைந்த இணை, அறிவார்ந்த மழலைகள், நல் வாழ்க்கை அனைத்துமே இறைவன் கொடுத்த வரம் தான்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


ஏவா மக்கள் மூவா மருந்து.
சந்ததிக் கழகு வந்தி செய்யாமை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

பெற்றோர்கள் கட்டளையிடுவதற்கு முன் குறிப்பறிந்து செய்யும் நன்மக்கள் தேவாமிர்தத்துக்கு ஒப்பாவார்கள்.

வம்சத்திற்கு அழகு வந்தியில்லாமல் நன்மக்களைப் பெறுதல் ஆகும்.

" மைந்தன் மனைக்கு மணி"

- நீதி வெண்பா.

இல்வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது நன்மக்கட்பேறாகும்.

கொண்டானின் துன்னியகேளிர் பிறரில்லை - மக்களின்
ஒண்மைய வாய்ச்சான்ற பொருளில்லை.

- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

குலமகளுக்குக் கட்டிய கணவனை விட நெருங்கிய உறவு இவ்வுலகில் வேறு யாருமில்லை. பெற்றோருக்குத் தம் குழந்தைகளை விட ஒளி பொருந்திய பொருள் வேறில்லை.

மனைக்கு விளக்கம் மடவார் _ மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர்.

_ நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

இல்லத்திற்கு புகழ் சேர்ப்பது நல்ல மனைவி .அவளுக்குப் பெருமை சேர்ப்பது அறிவார்ந்த பிள்ளைகள்.

பொற்பறிவில் லாதபல புத்திரனைப் பெறலினோர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே.

_ நீதிவெண்பா.

அறிவற்ற பல பிள்ளைகளைப் பெறுதலினும் நல்லறிவுடைய ஒரு புதல்வனைப் பெறுவது நன்மையாகும்.

இங்கித குணங்களும் வித்தையும் புத்தியும்
ஈகையும் சன்மார்க்கமும்
இவையெலா முடையவன் புதல்வனாம்- அவனை
ஈன்றவன் புண்ய வானாம்.

-அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர்.

இங்கிதமான நல்ல குணநலன்களும் , கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், தயாள குணமும், சன்மார்க்க நெறியும் உடையவனே நல்ல புதல்வனாம். அப்படிப்பட்ட அரிய பிள்ளையைப் பெற்றவன் புண்ணியவானாம்.

ஒருகோடி நட்சத்திரங்கள் நடுவிலே
உதித்த சந்திரோதயம் போல்
உபயகுல சுத்தனாம் பகீரதன்
போலவே ஒருபிள்ளை போதுமவனால்
மரபெலாம் நன்மையே அடையும்.

- திருவேங்கட சதகம் - நாராயண பாரதியார்,

கோடி விண்மீன்களுக்கிடையே தோன்றும் மதியொத்த ஒரு மகனால் அந்த மரபே நன்மை அடையும்.

திசை மெச்ச வேண்டும் - அல்லால்
தேகியென வருபவர்க்கு இல்லை யென்னாமலே
செய்யவே வேண்டு மல்லால்
வித்துவான் ஆகவே வேண்டும் – அல்லால்
அறிவான துரை மக்களாக வேண்டும்.

- குமரேச சதகம் -குருபாததாசர்.

சதம் என்பது நூறு .
நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்ட இந்த மூன்று சதகப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகள் அறிவார்ந்த மக்கட்பேற்றின் சிறப்பை அழகுற உணர்த்துகிறது.

பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர் .
- நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.

பெற்ற எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள் ஆகா.
அறிவொழுக்கங்களில் மேம்பட்ட பிள்ளைகளே பிள்ளைகள் என்று சொல்வதற்குத் தகுதியுடையவர்கள்.

இல்வாழ்க்கையின் பயனே நன்மக்கட் பேறு தான். அம்மக்கள் அறிவுடையவர்களாகவும், அறநெறி உடையவர்களாகவும் இருப்பது தான் சிறந்த பேறாகும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 296















பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம்-30- வாய்மை,
குறள் - 296.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.


விளக்கம் - ஒருவனுக்குப் பொய் பேசாமல் இருப்பது போல், புகழுக்கு காரணமானது வேறு இல்லை. அந்த பொய் கூறாத நல்லியல்பே அவன் அறியாமலே அவனுக்கு எல்லா நலன்களையும் தானே கொண்டு வந்து சேர்க்கும்.

அருள்மனம் நிறைந்தவர் எக்காரணம் பற்றியும் யாரையும் வஞ்சிக்க மாட்டார்கள். உள் ஒன்று வைத்து புறமொன்றுப் பொய்யாகக் கூறுவதும் வஞ்சிப்பதே ஆகும். ஆகையால் உள்ளத்தில் உள்ள உண்மையையே வாயாலும் கூற வேண்டும். அதுவே வாய்மை எனப்படும். உள்ளத்தில் உள்ளதற்கும் வாயால் கூறுவதற்கும் பொருந்தியவாறே செயலிலும் ஒழுக வேண்டும்.
வாயமை என்பது சிறந்த அறமாகும். அதைத் தவறாது கடைபிடித்தால் மற்ற அறங்கள் தாமே வந்து வாய்க்கும்.

கண்டுஒன்று சொல்லேல்.சித்திரம் பேசேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

கண்ணால் கண்டதற்கு மாறாக வேறொன்றைச் சொல்லாதே.

பொய்மொழிகளை மெய்போலப் பேசாதே.

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்.

- உலகநீதி - உலகநாதர்.

தன் மனமறிய பொய் தன்னைச் சொல்லுதல் கூடாது.

பொய்யுடையொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே .

மெய்யுடையொருவன் சொலமாட் டாமையாற்
பொய்போ லும்மே பொய்போ லும்மே .

- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

பொய்ம்மை உடைய ஒருவன் கூறும் பொய்யானது அவனது பேச்சு வன்மையால் உண்மை போலவே தோன்றும்.

மெய்ம்மையுடைய ஒருவன் கூறும் உண்மையானது அவனது சொல்வன்மை இன்மையால் பொய் போலத் தோன்றக் கூடும்.
எனவே சாதுர்யமாக பொய் பேசுதல் கூடாது.

"பொய்யாமை நன்று. பொருள் நன்று"
-சிறுபஞ்ச மூலம் _ காரியாசான் .

பொய் பேசாது எப்போதும் வாய்மையே பேசுதல் நன்று. தன் முயற்சியினால் வரும் செல்வம் நன்று.

பொய்யுரையான் வையான் புறங்கூறான்....
_ ஏலாதி - கணிமேதையார்.

பொய் பேசாதவன், மற்றவரை இகழ்ந்து திட்டாதவன், மற்றவரை இழிந்து புறங்கூறாதவன் ஆகியோர் விண்ணோர்க்கு வேந்தனாகும் தகுதி பெற்றவராவர்.

சத்தியத்தை வெல்லா தசயத்திந்தான்

_ நீதி வெண்பா.

பொய் மெய்யை வெல்ல மாட்டாது.

சத்தியமெக் காலுஞ் சனவிருத்த மாகுமே
எத்தியபொய் யார்க்கும் இதமாகும் - நத்தியபால்
வீடு தொறுஞ்சென்று விலையாம் மதுவிருந்த
வீடுதனி லேவிலையா மே.

- நீதிவெண்பா.

உடலுக்கு நலம் பயக்கும் ஆவின் பால் வீடு வீடாய்ச் சென்று விலையாகும்.உடலைக் கெடுக்கும் இழிவான கள் தானிருக்கும் குடிசையிலேயே விலையாகும். இதனால் பாலுக்குத் தாழ்வும், கள்ளுக்கு உயர்வும் வந்து விடாது. அதுபோலவே எல்லோரையும் தெளிவிக்கும் உயர்வான உண்மை கயவர்களுக்கு வெறுப்பைத் தரும். எல்லோரையும் மயக்குகின்ற பொய்யானது அக் கீழ் மக்கட்கு விருப்பமாகும். இதனால் மெய்க்கு தாழ்வும், பொய்க்கு உயர்வும் உண்டாக மாட்டா.

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும் _மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்


பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய் பேசுதலில் பண்புடைமை நீங்காமையும் பெற்று புறங்கூறாமையை தன் கண் நிகழாமல் காப்பவன் பிறவிப் பிணி நீக்கும் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

பொய்வழங்கி வாழும் பொறியறையும்
-திரிகடுகம் _ நல்லாதனார்.

பொய்ச் சொற்களைப் பேசி அதனால் உயிர் வாழ்கின்ற திருவில்லாதவன் நட்பு கொள்ளத் தகுதியற்றவனாவான்.

"பொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது" - என்பார்கள்.

"பொய் சாட்சி சொல்லும் பதர் "
- குமரேச சதகம் _ குருபாததாசர்.

நடவாததை நடந்ததாகக் கட்டுரைத்துப் பொய் சாட்சி சொல்பவன் பதரேயாவான்.

பொய் பேசாதிருப்பதே புகழைத் தரும்.
உண்மை பேசுதல் அவனுக்கு எல்லா அறங்களையும் அவனறியாமலே கொடுக்கும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 482















பால் - பொருட்பால்
இயல்-அரசியல்
அதிகாரம் - 49 - காலம் அறிதல்
குறள் - 482.

பருவத்தோடு ஒட்டஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

விளக்கம் :- தக்க காலம் அறிந்து, காலத்தோடு பொருந்த எந்த செயலையும் செய்வதே செல்வத்தை தன்னிடத்திலிருந்து நீங்காமல் இறுகக் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.

எந்த செயலைத் திறம்படச் செய்து முடிக்க வேண்டுமென்றாலும் அதற்கேற்ற காலம் அமைய வேண்டும்.
வலி அறிந்து, காலமறிந்து, இடமறிந்து , தெரிந்து தெளிந்து வினையாடல் வேண்டும். அதனால்தான் இந்த அதிகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ளது.

காலம் வாய்த்த போதே கடமையைச் செய்து முடிக்க வேண்டும் என்பதைத்தான்
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்று பிறிது மொழிதலாக உணர்த்தியுள்ளனர்.

"காலம் பொன் போன்றது "
- அதைக் கவனமாய்ப் பயன்படுத்த வேண்டும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


பருவத்தே பயிர் செய்.
- ஆத்திசூடி - ஒளவையார்,

எந்த செயலும் அதற்குரிய காலத்தில் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறார் ஒளவையார்.

அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி
எடுத்த கருமங்க ளாகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா.

- மூதுரை - ஒளவையார்.

உருவத்தால் நீண்ட, கிளைத்த உயர்ந்த மரங்களெல்லாம் பழுக்குங்காலம் வந்தாலல்லாமல் பழுக்கமாட்டா. அதுபோல அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், முடிய வேண்டிய கால நேரம் வராமல் அச்செயல் முடியாவாம்.
எந்த காரியமும் முடியும் காலத்திலேதான் முடியும். எனவே ஏற்ற காலமறிந்து செயலைத் தொடங்க வேண்டும்.

காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலமறிந்து விளை வறிந்து _ மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

ஒரு செயலைச் செய்வதற்குரிய காலமறிந்து, ஏற்ற இடமறிந்து, செய்யும் வினையின் காரணத்தை அறிந்து அதனால் ஏற்படும் பயனை ஆராய்ந்து துணை வலிமையையும் தெரிந்து முயற்சி செய்யப்பட வேண்டும்.

ஒரு செயல் செய்யும் வகையைத் தெளிவாகத் தெரிந்து தக்க காலத்தில் செய்தால் முடியாதது என்று எதுவும் இல்லை.
அவ்வாறு செய்யும் செயல் நமக்கு நன்மையையும் விளைக்கும். நம் பொருளும் கைவிட்டுப் போகாமல் காக்கும் .
" முயன்றால் முடியாததும் உளவோ?"

"Is there anything impossible
if it be done with proper means and in season?"

காலம் அறிந்து
காரியம் ஆற்றினால்
செல்வம் பெருகிக் கொட்டும்
ஞாலம் கருதினும் கிட்டும்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 282















பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்.
அதிகாரம் - 29 - கள்ளாமை.
குறள் - 282.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.


விளக்கம் :-பிறருக்குச் சொந்தமான பொருளை மனத்தால் நினைத்தலும் தீயதே. ஆதலால் பிறன் பொருளை வஞ்சத்தால் கொள்வோம் என்று எண்ணாது இருக்க வேண்டும்.

எல்லோரும் வாழ வேண்டும் என்னும் அருள்நோக்கம் உடையவன் பிறருடைய பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்க மாட்டான். அதனால் அருள்நோக்கம் கெடும். பிறருடைய இகழ்ச்சிக்கும் ஆளாக வேண்டி வரும்.

குற்றம் எதுவானாலும் செய்வது மட்டுமன்று, எண்ணுவதும் கூடாது. உள்ளத்தில் எண்ணுவது முதல் படி. செயல் அதன் இரண்டாம் படி.ஆகையால் செயலளவில் குற்றம் இல்லாமல் வாழ வேண்டுமானால் உள்ளத்தில் எண்ணுவதும் தீமை என்று உணர்ந்து வாழ வேண்டும். பிறர் பொருளை களவுவகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று மனத்தாலும் நினைத்தல் கூடாது. இங்கே களவு என்று குறிப்பிடப்படுவது இரவிலும், பகலிலும் திருடிக் கொள்ளையடிக்கும் திருட்டு மட்டுமன்று. பிறர் அறியாமல் அவர்களை வஞ்சித்துப் பொருள் கொள்ளும் எல்லா செயலும் திருட்டே ஆகும்.

தேவைக்கு மிகுதியாகப் பொருள் சேர்த்து வைத்தலும், அளவுக்கு மீறி செலவு செய்தலும் திருட்டுக்கு நிகரான குற்றங்களே என்பது காந்தியடிகள்,டால்ஸ்டாய் முதலிய சான்றோர்களின் கருத்து .

கொள்ளை விரும்பேல்
- ஆத்திசூடி - ஒளவையார்.

பிறர் பொருளைக் கைக்கொள்ள ஆசைப்படாதே.

புலையும் கொலையும் களவும் தவிர்.
வெள்ளைக்கில்லை கள்ள சிந்தை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

புலால் உண்ணுதல், பிற உயிர்களைக் கொல்லுதல், திருடுதல் இவற்றைச் செய்யாதே.

களங்கமற்ற மனமுடையவரிடத்தில் வஞ்சனை எண்ணம் இருக்காது.

கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

கொலையும், திருட்டும் செய்யும் தீயவருடன் நட்பு கொள்ளாதே.

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்

- நான்மணிக்கடிகை _ விளம்பி நாகனார்.

கொடிய துன்பங்கள் பின்பு உண்டாவதனால் என்றும் களவாடுதல் கூடாது.

காமுற்று வவ்வார் விடுதல் இனிது.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

தாங்கள் கண்ட பொருளை விரும்பி அப்பொருளைப் பெறும் எண்ணத்தை உறுதியாகக் கொண்டு அபகரிக்காமல் விடுவது இனியதாகும்.

இன்னா கள்ள மனத்தார் தொடர்பு.
- இன்னா நாற்பது - கபிலர்.

வஞ்சனையுடைய மனத்தவர் தொடர்பு துன்பம் தருவதாகும்.

உள்ளமுருக உரைத்து பொருள் கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம்?

_ அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

கேட்போர் மனமுருகுமாறு வாயளவில் பேசி இருக்கின்ற பொருளைக் கவர்ந்து நீங்குகின்றவர்கள் கள்வருக்கு நிகராவர்.

இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம்- மடநல்லார்
பொம்மன் முலைபோல் பருத்திடினும் மற்றவர்
நுண்ணிடைபோல் தேய்ந்து விடும்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

ஒருவரை வஞ்சித்துக் கவர்ந்து பெற்ற செல்வமானது பெண்களின் பூரித்த கொங்கை போல் மிகுந்திட்டாலும் அதிவிரைவில் அவர்களின் சிற்றிடை போல் குறைந்து விடும்.

வாழ்க்கையில் தேவைகளை மிகுதிப் படுத்திக் கொண்டால் மேன்மேலும் பொருளை நாடி அலைய வேண்டி வரும். தேவைக்கு அதிகமாகச் செலவு செய்து பழகினால் எவ்வாறேனும் பொருளைப் பெற வேண்டும் என்ற வேட்கை வளரும்.இவ்வாறு வாழ்கின்றவர்கள் நாணாது பிறர் பொருளைக் கவரவும் தயங்க மாட்டார்கள். அப்படிச் செய்பவர்களின் களவு, வறுமையின் காரணமாக களவில் ஈடுபடுபவரின் செயலை விட மிகத் தீயதாகும்.

வாழ்க்கையின் தேவைகளை அளவு படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கை அறநெறிக்குத் துணை செய்யும்.
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து "


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...