பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 123 - பொழுது கண்டு இரங்கல்
குறள் - 1222
புன்கண்ணை வாழி மருள் மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
விளக்கம் - மயங்கிய மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக. நீயும் என்னைப் போல் துன்பப்படுகின்றாயே. உன் துணையும் என் தலைவனைப் போல் இரக்கம் அற்றதோ?
மாலைப் பொழுதே நீ ஏன் இப்படி கொடுமை செய்கிறாய்?
காதலி மாலைப் பொழுதைக் கண்டு வருந்துகிறாள். அதுவும் தன்னைப்போல் துணையின்றி மயங்கித் துன்புறுவதாக எண்ணுகின்றாள். அதனால் தான் மாலைப் பொழுதே நீயும் என்னைப் போல் துன்புறுகின்றாயோ? என் துணையைப் போல் உன் துணையும் இரக்கம் அற்ற தோ என்று கேட்கின்றாள்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர்ஒடுங்கி
வேனிற் பள்ளி மேவாது கழிந்து ......
கலங்கா உள்ளம் கலங்கக்கடை சிவந்து
விலங்கி நிமிர்நெடுங்கண் புலம்பு முத்து உறைப்ப -
- சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.
காதலரைப் பிரிந்த மாதர்கள் துருத்தி முனையின் செந்தீ போல வெய்துயிர்த்து நெஞ்சம் வெதும்பினர். மென் மலர் விரித்த படுக்கை நிலை கொள்ளாது தூக்கம் பெறாது துடிதுடித்தனர். கடைக்கண் சிவந்து நெடுங்கண்களில் நீர் சோர நின்றனர்.
காமம் ஒழிவதாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென, அருவி
விட ரகத்து இயம்பும் நாட - எம்
தொடர்பும் தேயுமோ நின் வயி னானே.
- குறுந்தொகை - கபிலர்
நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடி பெருமழை பொழிந்ததனால் அருவியானதுமலை முழைஞ்சுகளில் தொடர்ந்து ஒலிக்கின்ற மலை நாடனே. உன்னுடன் கூடி மகிழும் காமம் கிட்டாது போயினும் யாம் உன் மீது கொண்ட நட்பு குறைந்து போகுமோ? ஒரு நாளும் குறையாது.
ஆளும் கொழுநர் வரவு பார்த்து
அவர் தம் வரவுகாணாமல்
தாளும் மனமும் புறம்பு ஆகச்
சாத்தும் கபாடம் திறமினோ .
- கலிங்கத்து பரணி._ செயங்கொண்டார்.
மெல்லியலார் தங்களை அன்பால் ஆட்கொண்ட கணவரின் வருகையை எதிர்பார்த்து இருந்தனர். அவர்கள் வரவில்லை. வருவார் என்று தெரு வாசலில் வந்து பார்ப்பதும், உள்ளே போவதுமாக இருந்தமையால் மெல்லிய பாதங்கள் சிவந்தன. நடையும் தளர்ந்தது. உடலும் உள்ளமும் தளர்ச்சியும் வெறுப்பும் அடையப் பெற்ற பெண்களே கதவைத் திறவுங்கள்.
மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுள எலாம் உறங்கும்
கண்ணுறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே.
- தாயுமானவர்.
எல்லாம் உறங்கியும் என்னால் உறங்க இயலவில்லையே என்று கூறுகிறார்.
உடல் நோய் வந்தாலும் அதன் கடுமை இரவில் தான் அதிகமாகும். தூக்கம் வராது.
காதல் நோயும் இரவில் தான் தூங்கவிடாது துன்பப்படுத்தும்.
ஏழுலகுஞ் சூழிரு ளாய் என் பொருட்டால் வேகின்ற
ஆழ் துயரம் ஏதென்றறிகிலேன் -பாழி
வரையோ எனும் நெடுந் தோள் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான் ?
- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.
இரவில் ஆண் அன்றில் பறவையானது ஒரு கண்ணால் தூங்கிக் கொண்டு இன்னொரு கண்ணால் பெண் பறவையைப் பார்த்துக் கொண்டிருக்குமாம். அன்றிற் பறவையின் குரல் காதலைப் பெருக்குமாம். அக்குரல் கேட்டு தமயந்தி வருந்தினாளாம்.
மலை போன்ற தோள்களை உடைய அரசே, ஏழு உலகங்களையும் வளைத்துக் கொண்டிருக்கின்ற இருளை உடையதாய் என்னை வருத்திக் கொண்டிருக்கும் மிக்க துன்பத்திற்குக் காரணம் என்னவென்று அறியாதவளாய் இருக்கின்றேன். இவ்வாறு இருப்பதால் நான் இந்த இரவிற்கு உண்ணுகின்ற இரையோ என்று துன்புறுகின்றாள். என் உடலையும், உயிரையும் உண்ணவே மாலைப் பொழுது வந்தது என்று வருந்துகிறாள்.
கானுறங்க காற்றுறங்க
கடலலைகள் தானுறங்க மானுறங்க மீனுறங்க
மலை கூட கண்ணுறங்க
வானுறங்கநிலவுறங்க
வானவரும் தானுறங்க
கூட்டுப் பறவைகளும்
குஞ்சோடு தானுறங்க
காட்டு விலங்கினமும்
கவலையின்றி கண்ணுறங்க
கண்ணிலும், நெஞ்சிலும்
காதலனைத் தான் சுமந்து
இரவுக்குத் துணையாக
எத்தனை நாள் விழித்திருப்பேன்?
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment