இறை மறுப்பாளனாக இருந்து பிறகு ஆன்மீகத்தில் அடியெடுத்து வைத்த கண்ணதாசன் அதில் துறை போனவனாகவும், துளையம் ஆடியவனாகவுமே தன்னை பிரதிபலித்தான்.
அதற்கு சாட்சியாக
அர்த்தமுள்ள இந்து மதம் துவங்கி, அபிராமி அந்தாதி விளக்கம், ஆதிசங்கரரின் பககோவிந்தம் கவிதையாக்கம், ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் எழுதிய பொன்மழை, பகவத் கீதை விளக்கம், ஞானம் பிறந்த கதை, நெஞ்சுக்கு நிம்மதி, போகம் ரோகம் யோகம், உன்னையே நீ அறிவாய், அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை, ஸ்ரீகிருஷ்ண கவசம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம் ஆகியவை உள்ளன
.
அது மட்டுமன்றி கண்ணதாசன் எழுதிய திரைப்பட பாடல்கள் பலவற்றில் பக்திச் சுவை சொட்டாமல் இல்லை.
"அவன்தான் இறைவன்" என்று கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் மிக நுட்பமானது.
காரணம் எந்த சமயம் சார்ந்த கடவுளர்களை, அவர்தம் உருவங்களை, இயல்புகளைச் சொல்லது மிக நடுநிலையாக எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துக்களை மட்டும் எடுத்துத் தொடுக்கின்றான்...
அவன்தான் இறைவன் - கவிஞர் கண்ணதாசன்
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்
அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்
கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்
பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்
கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்
உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்
தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்
தொடரும்...
நன்றிகளுடன் இல்மீ