Saturday, September 15, 2018

கவி ஆண்ட கண்ணதாசன்-4





     









 இறை மறுப்பாளனாக இருந்து பிறகு ஆன்மீகத்தில் அடியெடுத்து வைத்த கண்ணதாசன் அதில் துறை போனவனாகவும், துளையம் ஆடியவனாகவுமே தன்னை பிரதிபலித்தான். 

அதற்கு சாட்சியாக  

அர்த்தமுள்ள இந்து மதம் துவங்கி, அபிராமி அந்தாதி விளக்கம், ஆதிசங்கரரின் பககோவிந்தம் கவிதையாக்கம், ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை  தமிழில் எழுதிய பொன்மழை, பகவத் கீதை விளக்கம், ஞானம் பிறந்த கதை, நெஞ்சுக்கு நிம்மதி, போகம் ரோகம் யோகம், உன்னையே நீ அறிவாய், அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை, ஸ்ரீகிருஷ்ண கவசம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம் ஆகியவை உள்ளன

அது மட்டுமன்றி கண்ணதாசன் எழுதிய திரைப்பட பாடல்கள் பலவற்றில் பக்திச் சுவை சொட்டாமல் இல்லை.

"அவன்தான் இறைவன்" என்று கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் மிக நுட்பமானது.

 காரணம் எந்த சமயம் சார்ந்த கடவுளர்களை, அவர்தம் உருவங்களை, இயல்புகளைச் சொல்லது மிக நடுநிலையாக எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துக்களை மட்டும் எடுத்துத் தொடுக்கின்றான்...     




அவன்தான் இறைவன் - கவிஞர் கண்ணதாசன்


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்

கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்

முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்

ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்
தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்
    


தொடரும்...
நன்றிகளுடன் இல்மீ


வைரமுத்து அவர்களின் சொல்லதிகாரம்





"கொல்" "கொள்ளையடி"

சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''தழுவு" ''முத்தமிடு''

கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''ஆராரோ'' ''சனியனே''

தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உனக்கெப்போது கல்யாணம்?''

விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''

வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''

பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''

மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்"

மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

"பாலாறு - தேனாறு"

பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''மறக்காமல் கடிதம் போடு''

ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''அய்யா குளிக்கிறார்''

தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்

"அப்பா கோபமாயிருக்கிறார்"

குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

"தயவுசெய்து மன்னியுங்கள்"

ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்

''நேற்றே வந்திருக்கக் கூடாதா''

கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்

"இனிமேல் ஆண்டவன் விட்ட வழி"

மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

போதுமடா சாமி!
போதும்! போதும்!

ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்

சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

இனி ஒவ்வொரு சொல்லையும்

ஒட்டடை தட்டுவோம்

இனிமேல் வார்த்தைகளை

இடம் மாற்றிப் போடுவோம்

அத்தனை சொல்லிலும்

ஆக்சிஜன் ஏற்றுவோம்

வார்த்தை மாறினால்

வாழ்க்கை மாறும்

முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்
வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

மரித்தான் என்ற சொல்லை யெறிந்து

வாழ்வை வென்றான் என்று புகல்வோம்

தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து

விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?

தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்

முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்

அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்

நொந்த தேகம் நோயில் விழுந்தால்

உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்

மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை

விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்

உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்

உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்

புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது

சலித்த வாழ்க்கையும்

சட்டென்று மாறும்.

என்னவளே...
















என்னவளே...


காலை இளம்பரிதி கண் விழிக்கும் வேளையிலே

பெண்ணே நீ எழவேண்டாம் கண்ணுறங்கு கண்மணியே

மானே உன் விழியொழியில் இரவி ஒளி குன்றிடுவான்

தேனே ஆரணங்கே தென்பாண்டி ஆணிமுத்தே

மானே மரகதமே மைவிழியே மணிவிளக்கே

பெண்ணே குலக்கொடியே உன் அத்தை மெச்சும் அஞ்சுகமே

பாராட்டு வார்த்தை கேட்டு படுத்துறங்க வேண்டாமடி

பையத்துயில் எழடி நம் பையன் பள்ளிக்கு போகவேண்டும்.



_நன்றிகளுடன் இல்மீ



சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...