தொடர்ச்சி...
ஒரு பெரும் கவிஞனின் ஆற்றல் என்னவென்றால் அவன் எத்துறை சார்ந்தும் சிந்திக்கக்கூடியனாகவும், சிறந்த சொல்லாற்றலும், நிறைந்த கருத்துச்செறிவும், மிகுந்த கற்பனை வளமும் கொண்டவனாக இருக்க வேண்டும் இவை அனைத்தும் வாய்க்கப்பெற்ற கவிஞர்களின் வரிசையில் கண்ணதாசனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.
கண்ணதாசன் எழுதிய பல்சுவைப்பாடல்களை இன்று பார்க்கலாம்.
இனமேது என்ற தலைப்பில் கவிஞர் தந்த கவிதை பிரிவினை பாராட்டும் பித்தர்களுக்கு சிறந்த பதிலாக இருக்கும்.
சோதித்துப் பார்த்தத்திலே
வடநாட் டெலும்பென்று
வந்தஎலும் பில்லையடி!
தென்நாட் டெலும்பென்று
தெரிந்தஎலும் பில்லையடி!
எந்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!
ஒருநாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி!
காதலையும், கன்னியரையும் மட்டுமல்ல காய்கறிகள் பற்றியும் பாடுகிறார்.
அது அனுபவம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
முளைக்கீரை, மணத்தக் காளி
முருங்கைக்காய், வெள்ளரிக் காய்,
உளிப்பூண்டோ டகத்திக் கீரை,
உயர்ந்த தக்காளி, கோசு,
காளியோடு நெய், பருப்பு,
கத்தரி, வெண்டை, பீட்ரூட்,
நெளிகின்ற புடலை, நெல்லி,
நீள்கொத் தவரைக்கா யோடு,
பூசணி, சுரை, பறங்கி,
பூக்கோசு, பசலைக் கீரை,
பேசவோர் விலையில் லாத
பிஞ்சான பிரண்டை, வேலித்
தூசியில் முளைத்த கொவ்வை,
தொண்டங்காய், குப்பைக் கீரை,
ஊசிபோற் கொத்த மல்லி,
உண்ணுவாய் பொதினா வோடு!
இறந்து போனவர்களுக்கு இரங்கற்பா பாடுவதுண்டு கவிஞர் வாழும் காலத்திலேயே தனக்குத்தானே இரங்கற்பா பாடினார்.
இருந்து பாடிய இரங்கற்பா என்ற தலைப்பில் அந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.
பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு!
ஞானம் என்ற தலைப்பில் கவிஞர் எழுதிய கவிதை அதி அற்புதமானது.
உயிர் குணமான காமத்தை கடக்காத மட்டும் ஞானம் கிட்டாது என்ற பெருஞானத்தை கவிதையில் கொடுத்த அழகு வியக்கத்தக்கது.
காதலெனும் போதையுற்று
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் – இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!
காய்த்தெழந்து விம்மிநின்று
வாய்த்த இளம் கொங்கைதன்னில்
சாய்த்த முகம் உண்டதொரு பானம் – தலை
சாயுமுனம் வந்ததடி ஞானம்!
நூலிடையின் கீழுந்தி
ஆலிலையின் மேல்விழுந்து
ஆயகலை கொண்டதொரு காலம் – இன்று
நோய்வழியில் வந்ததடி ஞானம்!
முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம் – இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!
கவிதை முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொடரும்...
நன்றிகளுடன் இல்மீ
No comments:
Post a Comment