Monday, September 3, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 861




பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 87 - பகை மாட்சி
குறள் - 861

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

விளக்கம் :- தம்மை விட வலியாரிடத்தில் பகை கொண்டு எதிர்த்தலை விட வேண்டும். தம்மினும் மெலியவரோடு பகை கொள்வதை மேற்கொள்ள வேண்டும்.

மாறுபாட்டைப் பாராட்டாமல் மறந்து ஒழுகுவதால் நன்மை உண்டு. ஒருவர் மாறுபாட்டையே பாராட்டி வந்தாலும் மற்றொருவர் ஒற்றுமைக்குரியவற்றை பாராட்டி உறவு கொண்டாடுவதால் மாறுபாடு மறைந்து போதலும் உண்டு. ஆனால் எண்ணத்தளவில் நிற்காமல், செயலளவில் அதை வளர்த்து அழிவு வேலை தொடங்குவோரை என்ன செய்வது? அவர்கள் செய்யும் தீமையை எத்தனை முறை பொறுப்பது ? பொறுப்பதால் ஒரு பயனும் இல்லை என்று அனுபவத்தால் உணரும் போது அமைதியாக விட்டு விட முடியுமா?

தனி வாழ்வில் பிறர் தீமை செய்யச் செய்ய பொறுத்துப் போகலாம். பிறர் தீமையை ஏற்று அழியினும் அழியலாம். இது அறத்துப்பால் காட்டும் அறநெறியாகும்.
ஆனால் பொது வாழ்வில் பிறர் தீமையைப் பொறுப்பதற்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை மீறப்படும் போது பொறுத்துப் போவதே குற்றமாகும்.
தீமை செய்யும் சிலரை தண்டித்து அடக்கி வெல்ல முயல்வது அறம் ஆகுமே அல்லாமல், அவர்களோடு இயைந்து நடந்து, அதனால் பலருடைய வாழ்வில் அமைதி குலைவதையும், அல்லல் மிகுவதையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இகல் வேண்டா என்று அறிவுறுத்திய வள்ளுவர் வேறு வழி இல்லாமல் வளர்ந்து விட்ட பகையை ஒழிப்பதே கடமை என்கிறார்.

அவ்வாறு பகை கொண்டு பொது வாழ்விற்கு நன்மை செய்ய முயலும்போது, யாருடன் பகை கொள்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வெல்லக் கூடிய இடத்தில் மட்டுமே பகை கொள்ள வேண்டும். தம்மை விட வலிமை மிகுந்தவர்களை பகைத்து எதிர்ப்பதால் நோக்கம் நிறைவேறாது. தோல்வியும், அழிவும் நேரும்.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...