இயல் - கற்பியல்
அதிகாரம் - 126_ நிறையழிதல்
குறள் - 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
விளக்கம் :- நான் இதுவரை நிறையுடையேன் என என்னை நான் நினைத்திருந்தேன். ஆனால் காமம் என்னுள் மறைந்து இருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
நம்மை வெறுத்தவர்களை நாமும் வெறுக்க வேண்டும். நம்மைப் புறக்கணித்தவர்களை நாமும் புறக்கணிக்க வேண்டும் என்று உலகம் சொல்கின்றது. ஆனால் புறக்கணித்தவர்களையே மீண்டும் மீண்டும் நாடும் மனத்தால் அன்பு வளரும். மானம் இழந்தாலும் அன்பு வளரும் என்று காதல் வாழ்க்கை கற்பிக்கின்றது.
அன்பு வளர்ந்த நெஞ்சிற்கு மானம் என ஒன்று இல்லை, வெறுப்பு என்பது கிடையாது, வெறுப்பாக நெருங்கினாலும் விரும்புவதாகவே முடியும் என்று காதல் வாழ்க்கை கற்பிக்கின்றது.
காதல் வாழ்க்கையில் வெறுப்பும் துறவும் கொள்ள முடியாது. தம்மை நீங்கியவரை வெறுத்து ஒதுக்குவது காதல் துன்பம் உற்றவர்களுக்குத் தெரியாது. எவ்வளவு தான் நிறையுடன் மறைத்து வைத்தாலும் மன்றம் அறிய வெளிப்பட்டு விடும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளைஅம் கண்ணே.
- குறுந்தொகை - கபிலர்.
தூசி படிந்த அழுக்கு முற்றிலும் நீங்கப்பா கனால் கழுவப்பட்ட யானையைப் போலப் பெரிய மழை அடித்துப் பெய்ததால் கழுவப்பட்ட கரிய உருண்டை வடிவக் கல், பசுமை தவழும் காட்டில் ஒரு பக்கத்தே கிடக்கும் மலைவளம் பொருந்திய மலைநாடன், பிரிவால் காம நோயைத் தந்தனன். அதனால் குவளை மலர் போன்றிருந்த என் கண்கள் இப்போது முழுவதும் பசலை நிறம் ஆகிப் போயின.
உள்ளம்போய் நாண்போய் உரை போய் வரி நெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்.
- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.
விதர்ப்பன் திருமகளான தமயந்தி, மன்மதனின் மலர்க் கணைகள் தன் உள்ளத்தில் பாய்ந்து வருத்துவதால் நளனின் பால் தனது உள்ளம் போய், வெட்கமும் கெட்டு பேச்சும் சோர்ந்து நீண்ட கண்களில் இருந்து நீர் ஊற்றாக ஓட, நெருப்பிற் கிடந்து வேகின்ற மெல்லிய தளிர் போன்று ஆவி தளர்ந்து சோர்வுற்றாள்.
தமயந்தி காதல் மீக்கூற, உள்ளம் வெட்கம் முதலிய யாவற்றையும் இழந்து உயிரும் தளரப் பெற்றாள்.
காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்
ஆனாலும் என்போ லபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?
- குயில் பாட்டு - பாரதியார்.
குயில் பாட்டில் காளையின் மேல் காதல் கொண்ட குயிலானது சொல்கின்றது.
காதலுற்றச் செய்தியை மாதர் உரைக்கும் வழக்கமில்லை. ஆனால் நான் கொண்ட அபூர்வ காதலால் நானே வெட்கத்தை விட்டு வெளிப்படுத்துகின்றேன் என்கிறது.
நுதல்கவின் அழிக்கும் பசலையும்
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே .
- நற்றிணை - மூலங்கீரனார்.
என் நலம் மிக்கநெற்றியில் பிரிவு காரணமாக பசலை தோன்றி அழிக்கும். எம்மைச் சுற்றி வாழ்வோர் பழிச் சொல்லை பரப்புவர். என் துயரத்தினை எங்ஙனம் ஆற்றியிருப்பேன் என்று வருந்துகிறாள்.
அவள் கொண்ட காம நோயை பசலைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. ஊரார் பழிப்பார்களே என்று வருந்துகிறாள்.
என்னுள்ளே, நான் பெரிதும் நிறை உடையவளாக எண்ணிக் கொண்டு இருந்தேன். ஆனால் என்னுள் மறைந்து நின்ற காமம், இன்று பலரும் அறிய மன்றத்தில் வெளிப்பட நின்றது.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment