பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 105 - நல்குரவு
குறள் - 1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
விளக்கம் :- வறுமையைப் போல் துன்பம் உடையது எது என்றால், வறுமையைப் போல் துன்பமானது வறுமையே ஆகும்.
வறுமையைப் போலக் கொடியது வறுமை ஒன்றே.
குடிமக்களுக்கு வேண்டிய பல நல்ல இயல்புகளையும் கூறிய வள்ளுவர், குடி மக்களிடம் வறுமை இருக்கக் கூடாது. இரந்து வாழும் வாழ்க்கை இருக்கக் கூடாது. இரந்து வாழ அஞ்சுகின்ற அச்சம் வேண்டும், மக்கட் பண்புக்கு மாறான கயமை இருக்கக் கூடாது என்கிறார்.
நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் நான்கு அதிகாரங்களையும் பொருட்பாலில் இறுதியாக வைத்து குடிமக்களுக்குத் தகாதவற்றை எடுத்துக் கூறி கடிகின்றார்.
அவற்றுள் வறுமையே பெரும்பாலும் இரவுக்கும், கயமைக்கும் காரணம் ஆகையால் நல்குரவு என்ற இந்த அதிகாரத்தில் வறியவர்களின் வாழ்வை நினைந்து உருகிய உணர்வோடு வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துகின்றார்.
வள்ளுவர் பிறந்து வாழ்ந்து காலமுதி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகும், அந்த வறுமை இன்னும் அதே நிலையில் அல்லது அதைவிடக் கொடிய நிலையில் இருந்து வருவது வருத்தத்திற்குரியது.
வறுமை ஒழிந்தால் தான் பொது வாழ்வு சீர்பெறும் என்று எண்ண வேண்டிய நிலைமை இன்றும் உள்ளது.
வறுமை போல் பொல்லாதது வறுமையே. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதனுடைய கொடுமையும், வலியும், வேதனையும் தெரியும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.
செல்வமும், வறுமையும் ஓரிடத்திலே நிலைத்திராமல் மாறி மாறி வரும்.
இன்னா இளமை வறுமை வந் தெய்தியக்கால்
- மூதுரை - ஒளவையார்.
இன்பத்தைத் தரும் இளமைப் பருவத்தில் வறுமையை அடைதல் மிகவும் துன்பம் தருவதாகும்.
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
-நல்வழி - ஒளவையார்.
வறுமையால் வாடி பசிப்பிணி வந்தால் மானமும், குடிப் பிறப்பும், கல்வியும், ஈகையும் , நல்லறிவும், தானமும், தவமும், உயர்வும், தொழின் முயற்சியும், மங்கையர் மேல் ஆசை கொள்ளுதலுமாகிய இப்பத்தும் விட்டோடிப் போகும்.
மானம் முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசிப்பிணியினும் கொடியது பிறிதில்லை.
ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இருநாளைக் கீந்தாலும் ஏலாய் - திருவாளா
உன்னோ டுறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே
நின்னோடு வாழ்த லரிது.
அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.
வறுமை காரணமாக பசியால் வருந்தும் வயிறே, உணவில்லாத காலத்தில் ஒரு நாளாவது பொறுத்திராய். நல்ல உணவை மிகுதியாகப் பெற்ற காலத்து இரண்டு நாளைக்கு வேண்டுவனவற்றை ஒன்றாகக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாய். திருவுடையோனே உன்னோடு சேர்ந்து வாழ்வதால் அடையும் பயன் சிறந்த தாயினும் உன்னோடு வாழ்வது துன்பமே.
இதே கருத்தை உணர்த்தும் ஒளவையின் பாடல்.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
- நல்வழி - ஒளவையார்.
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன் மையின்னா
- இன்னா நாற்பது - கபிலர்.
பிறருக்கு கொடுத்தற்குரிய பொருள் இல்லாத வறியவனுடைய கொடைக் குணம் துன்பம் தருவதாகும்.
வறுமைதான் வந்திடில் தாய்பழுது சொல்லுவாள்
மனையாட்டி சற்றும் எண்ணாள்
- குமரேச சதகம் -குருபாததாசர்
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.
- நல்வழி - ஒளவையார்.
கல்லாதவனே யாயினும் பொருள் உடையவனை எல்லாரும் மதிப்பர். பொருள் இல்லாதவனை மனைவியும் விரும்ப மாட்டாள். பெற்ற தாயும் விரும்ப மாட்டாள். அவன் வாயில் பிறக்கும் சொல் எங்கும் எடுபடாது.
துதிக்கின்ற மனைவியுங் குறை சொல்வள் தந்தைதாய்
சோகமுற வசைகூறுவார்
துன்பமொடு மனம் மெலியும் மேனிவேற் றுருவமாகும்
தொலையாத கவலை வளரும்
மிடிவந்து சேர்ந்த தென்றால்.
- திருவேங்கட சதகம் - நாராயண பாரதியார்.
வறுமை வந்து சேர்ந்தால் துதி செய்து வந்த மனைவியும் குறை சொல்வாள். தாய் தந்தையரும் நிந்திப்பர். மனம் நொந்து உடல் உருக்குலையும். தீராத கவலைகள் பெருகி வாட்டும்.
வறுமையைப் போல் துன்பம் தருவது, கொடியது, பொல்லாதது வேறு எதுவும் இல்லை.
வறுமையைப் போல் இன்னாதது வறுமையே ஆகும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment