Wednesday, September 5, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 1057














பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 106 - இரவு
குறள் - 1057

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

விளக்கம் - இகழ்ந்து எள்ளி நகையாடாது கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும்.

தெருவில் பிச்சைக்காரரைக் காண்கிறோம். அவர்களுக்கு ஏதாவது கொடுத்து உதவினால் அவர்கள் இரந்து வாழ்வதற்கு ஊக்கமூட்டியது போல் ஆகின்றது.
இரப்பதை விட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஒன்றும் உதவாமல் வந்தால் அவர்களுடைய உயிர் வாழ்க்கைக்காக ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிய குற்ற உணர்வு ஏற்படுகிறது. எல்லோரும் இவ்வாறே எண்ணி உதவாமல் விட்டு விட்டால் அவர்களில் சிலர் திருட்டு முதலியன செய்து பிழைக்கத் துணிவார்கள். சிலர் வறுமையால் வாடி பட்டினியால் துன்புற்று மெலிவார்கள். இந்நிலையில் என்ன செய்வது?
தனி நன்மையைக் கருதி உதவவும் வேண்டும். சமூக நலன் கருதி இரக் கும் தொழிலை அவர்கள் கைவிடுமாறு சீர்திருத்தமும் செய்ய வேண்டும். ஐயன் வள்ளுவர் இந்த இரண்டையுமே தனித்தனியாக இரண்டு அதிகாரங்களில் கூறுகின்றார்.
இரப்போர் நல்லவர்களை நாடி இரக்க வேண்டும் என்றும், அவர்கட்கு உதவுவது கடமை என்றும் இரவு - என்னும் அதிகாரத்தில் கூறுகின்றார்.

அதனை அடுத்து இரந்து உயிர் வாழ்வது தவறான வாழ்க்கை என்று இரவச்சம் என்னும் அதிகாரத்தில் அந்தத் தொழிலைக்கடிந்து கூறுகின்றார்.
அதனால் தான் தக்கவர்களைக் கண்டால் இரந்து உதவி பெறலாம் என்று ஓர் இடத்தில் இரப்பவர்களின் உயிர் வாழ்க்கையைக் கருதி இரக்கம் கொண்டு கூறிய பின், கண் போல் சிறந்த மிக நல்லவரிடத்தும் இரந்து உதவி பெறாமல் வாழ்வதே கோடி மடங்கு நல்லது என்று நாட்டின் பொதுநலம் கருதிய போது கடிகின்றார்.

இரப்பாரை அவமதித்து இழிவுரை கூறாது மனமுவந்து பொருள் கொடுப்போரைக் கண்டால் இரப்பவர் உள்ளம் மகிழ்ந்து நின்று, உள்ளுக்குள்ளே இன்புறும் தன்மையை அடையும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 95














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 10- இனியவை கூறல்
குறள் - 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம் - பணிவு உடையவனாகவும், இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவருக்கு அணியாம்.மற்றைய பிற அணிகள் எல்லாம் அழகு தருவன அல்ல. அன்பு கலந்த இன்சொல்லை வழங்குவதே அறத்தின் தன்மையாம்.

பேச்சுத்திறன் மக்களுக்கே சிறப்பியல்பாக அமைந்துள்ளது. அதை நல்ல வகையில் பயன்படுத்தினால் நன்மை அடையலாம். அதனால் பலரை மகிழ்விக்க முடியும்.

கேட்குங் காலத்து இனிமை பயக்கும் சொற்கள் இன்சொற்கள் என்பதை வள்ளுவர் ஒப்பவில்லை.
மாசற்ற அன்புள்ளத்திலிருந்து தோன்றிய வஞ்சனை முதலிய தீங்குகள் இல்லாத, அறத்தினை உணர்ந்த சான்றோர்களின் வாயிலிருந்து தோன்றும் சொற்களே உண்மையான இன் சொற்கள் என்கிறார்.
அத்தகு இன்சொல் பேசுதலும், பணிவுமே உண்மையான அணிகலனாகும்.உடல் அழகிற்கு அணியும் மற்றவை உண்மை அணிகள் ஆகா.

கடுஞ்சொற்கள் கொடுஞ் சொற்கள். கேட்போரை சுடுஞ்சொற்கள்.
கடுஞ்சொல் பேசுதல் நம் மனதிலும் வன்மம் வளர்க்கும். மனதை விகாரமாக்கும். கேட்போர் மனதையும் புண்படுத்தும். நரம்பில்லாத நாக்கு தானே என்று வரம்பின்றி வார்த்தைகளைக் கொட்டி விட்டால் பிறகு அள்ளியெடுக்க முடியாது.

பணிவும், இன்சொல்லுமே அழகு.

குறள்வழிச் சிந்தனைகள் - 80














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 8 - அன்புடைமை.
குறள் - 80

அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம் - உள்ளத்தில் அன்பு இருக்க, அதன் வழியே இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடலாம். அன்பு இல்லாதவருக்கு உள்ள உடம்பு எலும்பினாலும் தோலினாலும் போர்த்தப்பட்ட வெற்றுடம்பே ஆகும்.

அன்பு என்பது இயற்கையான உணர்வு. மக்கள், மாக்கள் என அனைத்து உயிர்களுக்கும் அன்புணர்வு உண்டு. அன்பு இல்லாதவர்களை காண்பது அருமை.

அன்பு குறையக் குறையத் தன்னலம் பெருகும்.
அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். அன்புடையவர்கள் பெரும்பாலும் தன்னலம் இல்லாதவர்கள்.
அன்பு இல்லாதவர்கள் உயிருடன் வாழ்ந்தாலும் உயிரற்ற பிணத்திற்கே ஒப்பாவர்.

ஈருயிர்களிடையே காணப்படும் வாழ்வியல் காதலாயினும், மனமே படைத்துக் கொள்ளும் இறையியல் காதலாயினும் இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது உள்ளத்தே ஊற்றெடுக்கும் அன்பு என்னும் நெகிழ்ச்சிப் பண்பே ஆகும்.

அன்புடைமைக்கு வரையறை செய்யப் புகுந்த பரிமேலழகர்

அன்பாவது தொடர்புடையாரிடத்து
காதலுடையாரிடத்து உண்டாதல்
- என உலகியல் நிலையில் வைத்துச் சொல்கிறார்.

அன்பே கடவுள்.
அன்பு தான் அனைத்துக்கும் அடிப்படை 

குறள்வழிச் சிந்தனைகள் - 1168














பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்
குறள் - 1168

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

விளக்கம் - உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் உறங்க வைத்த இரவு என்னையல்லாமல் வேறு துணையில்லாமல் இருப்பது இரங்கத்தக்கது.

தலை மக்கள் ஒருவரை ஒருவர் பெற விழைந்த வேட்கையில் உள்ளத்தூய்மையைக் காட்டுவதே களவியல் நோக்கம்.
தலைமக்கள் ஒருவர்க்கொருவர் அன்பால் பிணைப்புண்டு இருந்தலைவிளக்குவதே கற்பியல் நோக்கம்.

களவியலில் குறிஞ்சித் திணைகூறுகின்றார். கற்பியலில் பெரும்பாலும் பாலைத் திணை கூறுகின்றார்.

குறள்வழிச் சிந்தனைகள் - 101














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 11-செய்ந்நன்றி அறிதல்
குறள் - 101

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

விளக்கம் - நாம் முன்பு ஓர் உதவியும் செய்யாமல் இருக்க பிறர் நமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் , விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் சமமாகாது.

ஒருவருக்கொருவர் உதவி செய்யாவிட்டால் உலக வாழ்க்கை நடைபெறாது. அவ்வாறு உதவி செய்வோரை மறவாமல் அவர் செய்த நன்மையைப் போற்றுவது சிறந்த கடமையாகும்.அத்தகைய உதவியிலும் பலவகை உண்டு.
இதற்கு முன் அவருக்கு ஒரு உதவியும் செய்யாதிருக்கும் போது காரணமில்லாமல் ஒருவர் மனமுவந்து தாமே உதவி செய்வதும் உண்டு. அந்த உதவிக்கு கைம்மாறு இல்லை. மண்ணுலகம், விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் அவை அந்த உதவிக்கு ஈடாகாது.

குறள்வழிச் சிந்தனைகள் - 381














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 39 - இறைமாட்சி
குறள் - 381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

விளக்கம் :- . படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.

இக் குறட்பாவில் உள்ளவாறு அரசாங்கம் ( அரசின் அங்கம் ) என்பதன் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு. அரண் என்னும் ஆறு அங்கங்களையும், தனித்தனியே வகுத்து, இந்த ஆறனையும் உடைய ஆட்சித் தலைவனைப் பற்றி தனியே சில அதிகாரங்களில் கூறி ஏழு வகையாகப் பாகுபாடு செய்தல் திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது.

அரசனது அதாவது ஆட்சித் தலைவனது இயல்பு கூறும் அரசியலையே மிக விரிவாக இருபத்தைந்து அதிகாரங்களில் கூறி முதலில் வைத்துள்ளார்.இப்பகுதியில் தான் ஆட்சித் தலைவனை இறை, வேந்து முதலான சொற்களால் நாற்பத்தாறு முறைச் சுட்டியுள்ளார்.

அரசியலில் இருபத்தைந்து அதிகாரங்களில் நாற்பத்தாறு முறை ஆட்சித் தலைவனை சுட்டிக் கூறும் நம் வள்ளுவப் பெருந்தகை மற்ற ஆறு இயல்களில் உள்ள நாற்பத்தைந்து அதிகாரங்களில் ஒன்பது முறையே சுட்டியுள்ளார்.

பழங்காலத்தில் முடியாட்சி இருந்தது. தற்காலத்தில் குடியாட்சி நடக்கிறது. எக்காலத்திற்கும் ஏற்புடையதாகவே அவரின் குறள் கருத்துகள் அமைந்துள்ளன.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...