பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 106 - இரவு
குறள் - 1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
விளக்கம் - இகழ்ந்து எள்ளி நகையாடாது கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும்.
தெருவில் பிச்சைக்காரரைக் காண்கிறோம். அவர்களுக்கு ஏதாவது கொடுத்து உதவினால் அவர்கள் இரந்து வாழ்வதற்கு ஊக்கமூட்டியது போல் ஆகின்றது.
இரப்பதை விட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஒன்றும் உதவாமல் வந்தால் அவர்களுடைய உயிர் வாழ்க்கைக்காக ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிய குற்ற உணர்வு ஏற்படுகிறது. எல்லோரும் இவ்வாறே எண்ணி உதவாமல் விட்டு விட்டால் அவர்களில் சிலர் திருட்டு முதலியன செய்து பிழைக்கத் துணிவார்கள். சிலர் வறுமையால் வாடி பட்டினியால் துன்புற்று மெலிவார்கள். இந்நிலையில் என்ன செய்வது?
தனி நன்மையைக் கருதி உதவவும் வேண்டும். சமூக நலன் கருதி இரக் கும் தொழிலை அவர்கள் கைவிடுமாறு சீர்திருத்தமும் செய்ய வேண்டும். ஐயன் வள்ளுவர் இந்த இரண்டையுமே தனித்தனியாக இரண்டு அதிகாரங்களில் கூறுகின்றார்.
இரப்போர் நல்லவர்களை நாடி இரக்க வேண்டும் என்றும், அவர்கட்கு உதவுவது கடமை என்றும் இரவு - என்னும் அதிகாரத்தில் கூறுகின்றார்.
அதனை அடுத்து இரந்து உயிர் வாழ்வது தவறான வாழ்க்கை என்று இரவச்சம் என்னும் அதிகாரத்தில் அந்தத் தொழிலைக்கடிந்து கூறுகின்றார்.
அதனால் தான் தக்கவர்களைக் கண்டால் இரந்து உதவி பெறலாம் என்று ஓர் இடத்தில் இரப்பவர்களின் உயிர் வாழ்க்கையைக் கருதி இரக்கம் கொண்டு கூறிய பின், கண் போல் சிறந்த மிக நல்லவரிடத்தும் இரந்து உதவி பெறாமல் வாழ்வதே கோடி மடங்கு நல்லது என்று நாட்டின் பொதுநலம் கருதிய போது கடிகின்றார்.
இரப்பாரை அவமதித்து இழிவுரை கூறாது மனமுவந்து பொருள் கொடுப்போரைக் கண்டால் இரப்பவர் உள்ளம் மகிழ்ந்து நின்று, உள்ளுக்குள்ளே இன்புறும் தன்மையை அடையும்.