Tuesday, August 28, 2018

கவி ஆண்ட கண்ணதாசன்-2



தொடர்ச்சி...

 வித்தாரக்கவி நெஞ்சில் முத்தாரமான தமிழில் முக்காலத்திலும் அழியா சத்தான கவி படைத்த கண்ணதாசனை பாராட்டவே ஒரு பெரும் தகுதி வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது எனக்கு.
காரணம் கண்ணதாசனை பாராட்டியுள்ளார் ஒரு பெரியவர் அவர் யார் தெரியுமா?

கடல் கடந்து, கண்டங்கள் கடந்து தன் நாவன்மையால் சைவத்தையும், தமிழையும் பரப்பிய ஆன்மீகக்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் கண்ணதாசனை தன் கவிதையால் வாழ்த்துகிறார்.
அதனை ஒரு நேரிசை வெண்பாவாக வடிக்கிறார்.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளை 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் - சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து.




ஒரு சிறந்த படைப்பாளி ஒரு நல்ல சுய விமர்சகனாகவும் இருக்கவேண்டும் இல்லாவிட்டால்
"தான்" என்ற ஆணவமும், கர்வமுமே அவன் படைப்புகளை புயல்க் காற்றில் இட்ட பூளைப்பூவாய் மாற்றி காலவெள்ளத்தில் காணாமல் போகச்செய்திடும்.

அவ்வகையில் தன் நான்காவது கவிதை தொகுப்பில் அதற்கு முந்தைய மூன்று தொகுப்புகளைப்பற்றி தானே விமர்சிக்கிறார்.

அவற்றில் அரசியல் அதிகம்.
போற்றுதலும், தூற்றுதலும் அதிகம்.
தனி மனித வழிபாடுகள் அதிகம்.
மாறன் அவலங்கள், ஓலங்கள் அதிகம். 
செய்திக் கவிதைகள் அதிகம்.
சிறுமொழித் தாக்குதல்கள் அதிகம்.
ஆயினும், அவை காலத்தின் கணிதங்கள்.

இவையே, உள்மனத்தின் உற்ச்சாக ஓட்டம்.

கட்டுப்பாடில்லாத - யாரையும் தொட்டுத் துன்புறுத்தாத, உணர்ச்சிப் பிரவாகம்.  - என்கிறார்.


கவிஞர் பெண்ணைப்பாடினால் கார்கால மேகமாய் கவிமழை பொழிவார்
காதலி என்ற தலைப்பில் இடம்பெற்ற கவிதை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வெண்ணிலா முற்றத் தின்மேல் 
விரிமுல்லை மஞ்சம் போட்டுப் 
பண்ணிலே இதயம் தோயப்
பார்த்ததில் கண்கள் ஆடக்
கிண்ணமும் கையு மாகக்
கிண்ணென்று நிற்கும் போது 
எண்ணமோர் கோடி யாகி
எங்கெங்கோ ஓடியாடும்!

சந்தனக் கட்டி னுள்ளே 
சதிராடும் தென்றல் போல 
மந்திர நடையும் கொஞ்சும் 
மயக்குறு மொழியும் கொண்டு
செந்தமிழ் எழுந்தாற் போலச்
சேயிழை ஒருத்தி ஆங்கே  
பந்தென ஆடும் போது 
பாவங்கள் பலநூ றாகும்!

மதுவையோர் கையில் வைத்து 
மங்கையோர் புறத்தே வைத்தால்
எதுவரை உலகம் போகும் 
எங்கெங்கோ போகும்; நானும் 
அதுவரை போவேன்! பின்பு
அடுத்தநாள் விழித்துப் பார்ப்பேன்;
மதுரச மயக்கம் அந்த 
மறுநாளும் ஜாடை காட்டும்!

காதலை மதுவை இன்பக் 
கட்சியை வென்றே னென்று 
ஓதுவார் எவரும் இந்த 
உலகிற்குத் தேவை இல்லை!
காதலே தெய்வம் அந்தக்
கருணையே சொர்கம் என்பேன்!
ஆதலால் காதல் செய்வீர் 
அன்றவன் சொன்னார் போல!

பழமெனச் சிவந்த செவ்வாய் 
பாலெனப் படிந்த கன்னம்
அழகெல்லாம் குவிந்த மார்பு 
அமுதத்தின் அருவி ஊற்று;
தோள்களில் ஆடும் போது 
எழுவது சுகமா? இல்லை 
ஏக்கந்தான் சுகமா சொல்வீர்!

ஆணெனப் படைத்தான், பெண்ணை 
அழகெனப் படைத்தான்; வாழ்வை 
வீணெனப் படைத்த னில்லை;
விரும்பித்தான் படைத்தான்! கண்ணால் 
காணெனப் படைத்தான்; கையில் 
கலக்கத்தான் படைத்தான்; இன்னும்
'நாணெ' ன்ன வெட்கம் என்ன 

நாமும்தான் வாழ்ந்து பார்ப்போம்! 




தொடரும்...
நன்றிகளுடன் இல்மீ







 


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...