காணாமற் போன பாக்குவெட்டி
விறகு தறிக்கக் கறிநறுக்க வெண்சோற் றுப்புக்கடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலா றாகப் பிளந்துகொள்ளப்
பறகு பறகென்றே சொறிய பதமா யிருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்துப் போவதுண்டோ எடுத்தீர் ஆயின் கொடுப்பீரே!
- இராமச்சந்திர கவிராயர்.
இச்செய்யுளில் கவிராயரின் வறுமை நிலையும், காணாமல் போனது சிறு பாக்கு வெட்டியாயினும் அது எவ்வாறெல்லாம் தனக்கு உதவியது என்பதை கவி நலத்துடனும், சோகத்துடனும் சொல்கின்றார்.
பாக்கு வெட்டி சிறிய விறகுகளை நறுக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன் பட்டதாம். கையில் காசு இல்லாத போது அதனை அடகு வைத்து உப்பு முதலிய பொருட்கள் வாங்கப் பயன்பட்டதாம்.பாக்கு கிடைத்தால் அதனை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்கப் பயன்பட்டதாம். இவை தவிர உடம்பில் அரிப்பெடுத்தால் பறகு, பறகு என்று சொறிந்து கொள்ளவும் பயன் பட்டதாம். இவ்வாறெல்லாம் பலவாறாகப் பயன்பட்டுக் கொண்டிருந்த அந்த பாக்குவெட்டி காணாமல் போய் விட்டதே. இறகு முளைத்துப் பறந்து போய் விட்டதோ என்று வருந்துகிறார். அதை யாராவது எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சுகிறார்.
கவிதைப் பொருளாக அமைந்தது சிறிய பாக்கு வெட்டி எனினும் எவ்வளவு கவிதைச்சுவையோடும், சோக உணர்வோடும் சொல்கிறார் பாருங்கள்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment