Friday, August 31, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 911














பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 92 - வரைவின் மகளிர்
குறள் - 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்கு தரும்.

விளக்கம் :- அன்பினால் விரும்பாமல், பொருளால் விரும்பும் பொது மகளிர் பேசும் இனிய சொற்கள் இழுக்கையே தரும்.

மன உறுதியும், அறிவுத் தெளிவும் இல்லாத மக்கள் நாடுகின்ற பொருட்கள் சில உண்டு. அவை பொது மகளிர் , கள், சூது, என்பவை.
பெண்வழிச் செல்கின்றவன் எவ்வாறு பொதுக் கடமையை புறக்கணிப்பானோ, அவ்வாறே வரைவின் மகளிரையும் கள்ளையும் சூதையும் நாடுகின்றவனும் பொதுக் கடமையைப் புறக்கணிப்பான்.பொது வாழ்விற்குத் தகுதியற்றவனாகிறான்.

அறமல்லாத செயல்களான வரைவின் மகளிர், கள், சூது இவற்றை அறத்துப்பாலில் வைக்காமல் பொருட்பாலில் வரிசையாக வைத்து கடிந்துரைக்கிறார். இவை மூன்றுமே பொருட்செல்வத்தை அடியோடு அழிப்பன.
இம்மூன்றையும் ஒரு சேரக் கடிந்து கூறிய பெருமகனார் நம் தமிழகத்தில் தமிழ்ப் புலவர் வள்ளுவரே ஆவார்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

மைவிழியார் மனையகல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

மைவிழியார் தம் மனை யகன்றொழுகு.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் மனையை அணுகாமல் விலகி நட.

விலைமகட்கழகு தன் மேனி மினுக்குதல்.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

விலை மகளுக்கு அழகு தன் மேனியை மேலும் அழகு படுத்திக் கொண்டு மிளிரச் செய்தல்.

முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடுநாணும் பேணார் - பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக்கு உண்டே பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தமக்கும், பிறர்க்கும் உள்ள உறவு முறைமையும், குடிப் பெருமையும், தகுதியும், மனத்தைத் தீய வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்தும் தன்மையும், நாணமும், பெருமையும் கற்பிலா மகளிருக்கு இல்லை. அவர்களின் இழிபிறப்பு பெரும் பாவமாகும்.


வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பேன் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பினுங் கொடிய கண்ணாள் ஆயிரஞ் சிந்தையாளை
நம்பின பேர்களெல்லாம் நாயினும் கடையராமே.
- விவேக சிந்தாமணி.

பல பொய்யான மாய்மாலங்களைச் செய்து
ஒருவனுக்கே உரித்தானவள் போல் பல தந்திரங்களையும் செய்யும் அம்பை விடக் கூரிய கொடிய கண்களையும் . ஆயிரஞ் சிந்தனைகளையும் உடைய பொது மகளிரை நாடிச் செல்பவன் நாயினும் இழிந்த கீழ்மகனாவான்.

வேடிக்கை பேசியே கைமுதல் பறித்தபின் வேறுபட நிந்தை செய்து
விடவிடப் பேசுவார் : தாய் கலகமூட்டியே விட்டுத் துரத்தி விடுவார்
வாடிக்கை யாய்இந்த வண்டப் பரத்தையர் மயக்கத்தை நம்ப லாமோ?
- குமரேச சதகம் -குருபாததாசர்.

வேடிக்கையாகப் பேசி கையிலுள்ள பொருளை பறித்துக் கொள்வர். தாயிடம் கலகம் செய்து துரத்தி அனுப்பி விடுவர்.
பொருள் பறிப்பதே வாடிக்கையாய்க் கொண்ட பரத்தையரை மோகத்தில் நம்பி கெடலாகுமோ?

விலைமாதர் வீடுசவு ளிக்கடை படுக்கையது மேவுமனை பொதுவம்பலம்
மெத்தையது சந்தியிற் பாறை அவரங்கமோ
மேவிய படித்துறையதாம் .
- திருவேங்கட சதகம் - நாராயண பாரதியார்.

விலைமாதரின் வீடு பலரும் வந்து போகும் சவுளிக்கடை,படுக்கை பொது மன்றம், மெத்தை முச்சந்தியில் பலரும் அமரும் பாறை, அவர்களது மேனியோ ஊருக்குப் பொதுவான படித்துறையாம்

அன்பு காரணமாக விரும்பாமல் பொருள் பெறும் காரணத்தாலேயே விரும்புகின்ற மகளிரின் இனிய சொல்லை நம்பிப் பழகக் கூடாது. அந்த இனிய சொல்லே பிறகு கேட்டைத் தரக்கூடியதாகும். ஆகையால் அதனைக் கேட்டு மயங்கக் கூடாது.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...