பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 44 - குற்றங்கடிதல்
குறள் - 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
விளக்கம் - எப்பொழுதும் தன்னையே உயர்வாக புகழ்ந்து பேசி வியத்தல் கூடாது. தனக்கு நன்மை தராத செயல்களை விரும்புதலும் கூடாது.
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்துமதித்துக் கொள்ளக் கூடாது. அது தன் அறிவுக்கண்ணை மறைக்கக்கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவைத் தேடிக் கொள்ள நேரும். தான் செய்யும் செயல்களிலும் நல்ல நோக்கம் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாமல் விட வேண்டும். தன்னைத்தானே மதித்து வியத்தலும், நல்ல நோக்கம் அற்ற செயலை நாடுதலும் ஆகிய குற்றங்களைக் கடியவேண்டும்.