பால் - அறத்துப்பால்
இயல் - பாயிரம்
அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்.
குறள் - 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
விளக்கம் :-பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அறஞ்செய்தலை தொடர்ந்து செய்து கொண்டு போக வேண்டும். அதுவே உடல் அழியுங் காலத்தில் உயிர்க்கு உற்ற துணையாக வந்து நிற்கும்.
அறம் என்பது யாது? செயலா? சொல்லா? எண்ணமா? மூன்றுமே ஆகும். மூன்றனுள்ளும் செயலுக்கும், சொல்லுக்கும் எண்ணமே அடிப்படை ஆகையால், எண்ணத்தின் தூய்மையே முதன்மையானது.
அறம் செய்வதில் தயக்கமோ, காலம் தாழ்த்தலோ, ஒத்தி வைத்தலோ கூடாது. இப்போது இளமைப் பருவம் ஆகையால் அறத்தைப் பற்றிக் கவலை வேண்டா, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று புறக்கணிக்கக் கூடாது. இளமை முதற்கொண்டே அறம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் அறமே, அழிவு வரும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும்.
அகத்தே எண்ணும் எண்ணங்களின் தூய்மையாலும், நெஞ்சின் இன்ப, துன்ப உணர்வுகளாலும் அறத்தை அறியக்கூடுமே அல்லாமல் புறத்தே உள்ள உயர்வு தாழ்வுகளை வைத்து அறத்தை அளந்தறிய முடியாது.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
அறம் செய விரும்பு.
அறனை மறவேல்
தானமது விரும்பு
- ஆத்திசூடி - ஒளவையார்.
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.
அறம் செய்வதை ஒருபோதும் மறக்காதே.
இரந்தோர்க் கீவது முடையோர் கடனே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்
இரப்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் தருமம் செய்வது பொருளுடையோரின் கடமையாகும்.
கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.
கொண்டு செல்கின்ற கொடிய நமன் அணுகுவதற்கு முன்னே மனங் கனிந்து அறம் செய்து உய்ய வேண்டும்.
வெள்ளம் வருவதற்கு முன் கரையைக் கட்டி வைக்காதவர் அது பெருக்கெடுத்து வரும் போது ஒன்றும் செய்ய முடியாது. எனவே காலன் வருமுன்னே அறம் செய்து பிழைக்கக்கடவாய்.
தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையுஞ் செய்து - மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே அறத்துணையோடு
ஏகமா நண்பொன்று மில்.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
திருமகளைப் போன்றவளே! செய்தவனுக்குத் துணையாக இருந்து, அவனைப் பலரும் அறியுமாறு செய்து, சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனத்திற்கினிமையான செல்வத்தினையும் கொடுப்பதால் அறம் செய்வதே அனைத்திலும் சிறந்தது. அதற்கு இணையான நட்பினர் ஒருவரும் இல்லை.
மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம்அடக்கம்
செம்மை யொன்றின்மை துறவுடைமை நன்மை
திறம்பா விரதந் தரித்த லோடின்ன
அறம் பத்தும் ஆன்ற குணம்.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.
உண்மையும், பொறுமையும், பெருமையும், தவமும், அடக்கமும், நடுவு நிலைமையும், தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும் , பற்று விடுதலும், நல்லன செய்தலும், மாறுபடாத விரதங்களை மேற்கொள்ளுதலும் ஆகிய பத்து அறங்களும் மேலானவை என்று அறநெறிச்சாரம் கூறுகின்றது.
அறநெறியில் நின்று அறம் செய்வதை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செய்தல் வேண்டும். தள்ளிப் போடாமல் இயன்றவரை செய்தல் வேண்டும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்