Friday, August 31, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 905














பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 91 - பெண்வழிச் சேறல்
குறள் - 905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

விளக்கம் :- மனைவிக்கு அஞ்சி நடப்பவன் நல்லவர்களுக்கு எப்பொழுதும் நல்ல செயல்களைச் செய்ய அச்சப்படுவான்.

அறத்துப்பாலில் மனைத் தக்க மாண்புடையள் என்று பெண்ணை பெருமைப்படுத்துகின்றார். இன்பத்துப்பாலில் பலவாறாக போற்றி உயிராக உயர்விக்கின்றார். அப்படிப் பட்டவர் பெண்ணைப் பற்றித் தவறாகக் கூறுவாரா?

இன்பத்துப்பாலில் காதலனாக வாழ்கின்ற தலைவன் அறத்துப்பாலில் அறவோனாக ஒழுகி, பொருட்பாலாகிய பொது வாழ்க்கையில் குடும்பம் மற்றும் சமூக கடமைகளை சரிவர நிறைவேற்றும் கடமை வீரனாக செயலாற்ற வேண்டும்.

காதலியாகவும், நல்ல வாழ்க்கைத் துணையாகவும் இருக்கும் குடும்பத் தலைவி தன் கணவன் ஆற்றும் நல்ல கடமைகளுக்கு உறுதுணையாக இருப்பவளாக இருக்க வேண்டும்.
தற்காத்து தற்கொண்டானைப் போற்றும் வாழ்க்கைத் துணையாக இருப்பவளே இல்லற வாழ்விற்கு ஏற்புடையவள்.
ஆனால் அப்படிப்பட்ட மாண்புடைய மங்கையாக இல்லாமல் தன் பெருமையையும், சிறப்பையுமே பொருளாகக் கருதி கணவனது பொறுப்புகளைப் பற்றி சிறிதும் உணராமல் அவனையும் செயலாற்ற விடாமல் செய்கின்ற சிறுமதி படைத்த மனைவிக்கு பயந்து வாழ்பவன் எப்போதும் நல்லவர்களுக்கு நல்லது செய்ய இயலாது. மனைவிக்கு பயந்து தன் பெற்றோருக்கும், உடன் பிறந்தாருக்கும் கூட உரிய கடமைகளைச் செய்ய இயலாது அஞ்சியே வாழ்வான்.
அவளைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே அவன் கடமையாகும். அதை விடுத்து அவள் மீது கொண்ட மோகத்தால் அவளுக்கு இணங்கி அஞ்சி நடத்தல் பெருமையற்ற செயலாகும். அவனால் நல்லவர் போற்றும் நற்காரியங்களைச் செய்ய இயலாது.

குறள்வழிச் சிந்தனைகள் - 911














பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 92 - வரைவின் மகளிர்
குறள் - 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்கு தரும்.

விளக்கம் :- அன்பினால் விரும்பாமல், பொருளால் விரும்பும் பொது மகளிர் பேசும் இனிய சொற்கள் இழுக்கையே தரும்.

மன உறுதியும், அறிவுத் தெளிவும் இல்லாத மக்கள் நாடுகின்ற பொருட்கள் சில உண்டு. அவை பொது மகளிர் , கள், சூது, என்பவை.
பெண்வழிச் செல்கின்றவன் எவ்வாறு பொதுக் கடமையை புறக்கணிப்பானோ, அவ்வாறே வரைவின் மகளிரையும் கள்ளையும் சூதையும் நாடுகின்றவனும் பொதுக் கடமையைப் புறக்கணிப்பான்.பொது வாழ்விற்குத் தகுதியற்றவனாகிறான்.

அறமல்லாத செயல்களான வரைவின் மகளிர், கள், சூது இவற்றை அறத்துப்பாலில் வைக்காமல் பொருட்பாலில் வரிசையாக வைத்து கடிந்துரைக்கிறார். இவை மூன்றுமே பொருட்செல்வத்தை அடியோடு அழிப்பன.
இம்மூன்றையும் ஒரு சேரக் கடிந்து கூறிய பெருமகனார் நம் தமிழகத்தில் தமிழ்ப் புலவர் வள்ளுவரே ஆவார்.

குறள்வழிச் சிந்தனைகள் - 1041














பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 105 - நல்குரவு
குறள் - 1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

விளக்கம் :- வறுமையைப் போல் துன்பம் உடையது எது என்றால், வறுமையைப் போல் துன்பமானது வறுமையே ஆகும்.
வறுமையைப் போலக் கொடியது வறுமை ஒன்றே.

குடிமக்களுக்கு வேண்டிய பல நல்ல இயல்புகளையும் கூறிய வள்ளுவர், குடி மக்களிடம் வறுமை இருக்கக் கூடாது. இரந்து வாழும் வாழ்க்கை இருக்கக் கூடாது. இரந்து வாழ அஞ்சுகின்ற அச்சம் வேண்டும், மக்கட் பண்புக்கு மாறான கயமை இருக்கக் கூடாது என்கிறார்.
நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் நான்கு அதிகாரங்களையும் பொருட்பாலில் இறுதியாக வைத்து குடிமக்களுக்குத் தகாதவற்றை எடுத்துக் கூறி கடிகின்றார்.
அவற்றுள் வறுமையே பெரும்பாலும் இரவுக்கும், கயமைக்கும் காரணம் ஆகையால் நல்குரவு என்ற இந்த அதிகாரத்தில் வறியவர்களின் வாழ்வை நினைந்து உருகிய உணர்வோடு வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துகின்றார்.

வள்ளுவர் பிறந்து வாழ்ந்து காலமுதி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகும், அந்த வறுமை இன்னும் அதே நிலையில் அல்லது அதைவிடக் கொடிய நிலையில் இருந்து வருவது வருத்தத்திற்குரியது.
வறுமை ஒழிந்தால் தான் பொது வாழ்வு சீர்பெறும் என்று எண்ண வேண்டிய நிலைமை இன்றும் உள்ளது.
வறுமை போல் பொல்லாதது வறுமையே. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதனுடைய கொடுமையும், வலியும், வேதனையும் தெரியும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 166














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 17- அழுக்காறாமை
குறள் - 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

விளக்கம் :-பிறருக்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப் படுகின்ற குணம் இருப்பின் அது அவனை மட்டுமன்றி அவன் உறவினரையும் உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி அழித்து விடும்.

அன்புடையவர்கள் பிறர் நன்றாக வாழும் போது அதைக் கண்டு மகிழ்வார்கள். அதுவே அன்பின் நெறியாகும். பிறர் சீருடன் வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் பொறுக்காமல் புழுங்குவது அன்பு இல்லாத குறையையே காட்டும்.
பிறருடைய இன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காத தன்மையே பொறாமை ஆதலின், ஒருவர் மற்றவர்க்கு உதவியாகப் பொருள் கொடுப்பதைக் கண்டாலும் பொறாமை ஏற்படுவதுண்டு. அவ்வாறு பொறாமை கொள்கின்றவன் தான் அழிவதும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்கள் அழிவதற்கும் காரணமாவான்.

இரக்கமற்ற ஈனர்களே
















பெண் சிசுவதை

காமத்துப்பால் மிகுந்து
காதலால் ஈன்ற
பெண்பாற் குழவியை
கொஞ்சி மகிழாமல்
கொண்டாடித் திரியாமல்
ஆண்பால் இல்லையென்று
அடியோடு வெறுத்து
பொருட்பால் இன்மையென்று
அறத்துப்பால் தர்மம்மீறி
தாய்ப்பால் கொடுக்காமல்
தாலாட்டுப் பாடாமல்
கள்ளிப் பாலூற்றி
கழுத்தினை நெரிக்கச்சொல்லி
முப்பாலில் மொழிந்தானா
முனிவன் வள்ளுவன்தான்
எப்பாலில் கண்டீர்கள்
இரக்கமற்ற ஈனர்களே ?




நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை

















அன்னை மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை


முன்னூறு நாள்சுமந்து
முகவரியைத் தருவதற்கு
அங்கமெலாம் நொந்து
அவதிகள் தான்பட்டு
பிரசவ வலியாலே
புழுவாக துடிதுடித்து
மரணத்தின் வாயில்சென்று
மறுபிறவி எடுத்தவள்.

உதிரத்தைப் பாலாக்கி
உயிரூட்டி வளர்த்தவள்
துன்பங்கள் பலவுற்று - கண்
துஞ்சாது காத்தவள்
வாந்தியும், மலசல
அசுத்தமும் சகித்தவள் _ பிள்ளை
வாழ்வே சதமென்று
சகலமும் பொறுத்தவள்.

தேவர்க்கும் கிட்டாத
தாலாட்டு படித்தவள்
தேனினும் இனியநம்
மழலையை இரசித்தவள்
தியாக தீபமாய்
மெழுகெனத் தேய்ந்தவள்
தன்சுகம் பாராது
உழைத்துழைத்து ஓய்ந்தவள்.

ஈரைந்து மாதபந்தம்
ஈடில்லா நமது சொந்தம்
எல்லையில்லா அன்புகாட்டி
கொள்ளைகொண்ட இனியகாந்தம் - அந்தக்
கருணைப் பெருங்கடலை
கண்கண்ட தெய்வத்தை
காப்பகத்தில் விடுபவர்கள்
கண்ணிருந்தும் குருடர்களே!


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...