பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 80 - நட்பாராய்தல்.
குறள் - 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
விளக்கம் - நாம் துன்பப்பட்டு வருந்தும் காலத்து நமக்கு உதவாமல் கைவிடுவார் நட்பினை சாகுந் தறுவாயில் நினைத்தாலும் நினைத்த மனம் வருந்தும்.
உலகில் விலை உயர்ந்தது நட்பு. நட்பு பொழுது போக்கிற்காக அமைவது அன்று. நெஞ்சத்தில் ஊறியதாக இருக்க வேண்டும். உணர்வின் ஒற்றுமையால் பிறப்பதாக இருக்க வேண்டும். புனைந்துரைத்தலும், முகமனும் உண்மை நட்பிற்குக் கிடையாது.
நம் வள்ளுவப் பெருந்தகை நட்புக்கு மட்டுமே நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்கள் வைத்திருப்பதிலேயே நட்பின் முக்கியத்துவத்தை உணரலாம்.
நல்ல ஒரு புத்தகமானது படிக்கப் படிக்க இன்பம் தருவது போல நல்லோர் நட்பும் பழகப் பழக பல நன்மைகளைத் தரவல்லது.நட்புக் கொள்வதற்கு முன் நன்றாக ஆராய வேண்டும். நட்பு செய்த பிறகு ஆராய்தல் கூடாது. நல்ல பண்புகளை சீர்தூக்கி மேன்மை பொருந்திய குணங்கள் உடையவரோடு நட்பு பாராட்ட வேண்டும்.
சிலர் நாம் நன்றாக இருக்கும் போது நம்மோடு நெருங்கிப் பழகுவார்கள். கேடு வருங்காலத்தில் விட்டு விலகி விடுவார்கள். அத்தகையோர் நட்பு கொள்ளத் தகுதியானவரே அல்லர். கெடுங்காலத்துக் கைவிடுவார் நட்பினை நாம் இறக்கும் தறுவாயில் நினைத்தாலும் அதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது.
நட்பானது , உடுக்கை இழந்தவன் கை போல - உதவக்கூடிய உண்மை நட்பாக இருத்தல் வேண்டும்.
உள்ளன்பு இல்லாமல் பயன் கருதி மேலுக்கு உறவாடுபவர் நட்பை நாம் விட்டு விட வேண்டும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே .
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
- நறுந்தொகை அதிவீரராம பாண்டியர்.
ஒருநாள் பழகினாலும் உயர்ந்தோரின் நட்பு வேரூன்றி நிலைத்து நிற்கும்,
ஆண்டாண்டு காலம் பழகினாலும் கீழ்மக்களின் தொடர்பு நீர்க்குள் பாசி போல் வேரூன்றாது. நிலைத்து நிற்காது.
சேரிட மறிந்துசேர்.
இணக்கமறிந் திணங்கு.
- ஆத்திசூடி - ஒளவையார்.
நற்குணச் செய்கைகளை ஆராய்ந்து அறிந்து நட்பு செய்.
நட்பு செய்து சேரத் தக்கவர் என்பதை அறிந்து சேர்.
பாம்பொடு பழகேல்.
_ ஆத்திசூடி.
பால் கொடுத்தவருக்கும் விடத்தைத் தருகின்ற பாம்பு போலும் கொடியவர்களுடன் நட்பு செய்யாதே.
நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்.
_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.
நற்சேர்க்கையல்லாத தீய நட்பு நமக்குத் துன்பத்தையே தரும்.
நல்லோர் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே.
- நன்னெறி _ சிவப்பிரகாசர்.
நல்லோர் செய்யும் நட்பு நாள்தோறும் வளர்ந்து நமக்கு நன்மையே தரும். கள்ள மனமுடைய தீயோர் நட்பு நமக்குத் தீமையே தரும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
- திருவருட்பா -வள்ளலார்.
உள்ளொன்று மனதில் வைத்து, புறத்தே புனைந்து பேசுவாரின் நட்பு கலவாமை வேண்டும்.
பாம்புக்குப் பால்வார்த்தென்றும் பழகினும் நன்மை தராது.
வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்புமாறா
- விவேக சிந்தாமணி.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் அதன் நச்சுத்தன்மை மாறாது.வேம்புக்குத் தேன் வார்த்து வளர்த்தாலும் வேப்பிலையின் கசப்பு மாறாது. அது போல் எவ்வளவுதான் கற்றாலும் துட்டர்கள் நல்லோர் ஆக மாட்டார்.
கனி போலவே பேசி கெடு நினைவு நினைக்கின்ற கசடர்கள்.
_ நடராசப் பத்து - மணவை முனுசாமி.
உதட்டில் தேனொழுகப் பேசி உள்ளத்தே கெடு நினைவு நினைக்கும் கசடர்களை விலக்க வேண்டும்,
உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல் பழகி நமக்குத் துன்பம் நேர்ந்த போது கைவிடும் நட்பை நமன் நம்மைக் கொண்டு போகுங்காலத்து நினைத்துப் பார்த்தாலும் வருத்தும்.
உரிமை உள்ள பூ
உள்ளத்தில் பூக்கும் பூ
உணர்வில் மலரும் பூ
உண்மையான நட்பு (பூ)
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment