Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 523















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 53 - சுற்றந்தழால்.
குறள் - 523.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.


விளக்கம் - தன் சுற்றத்தாருடன் நெருங்கி மனங் கலந்து பழகாதவனுடைய வாழ்க்கை, குளத்தின் பரப்பில் நீர் நிறைந்து கரை இல்லாமையால் யாருக்கும் பயன்படாது அழிவதைப் போல பயனற்றுப் போகும்.

உள்ளன்போடு கூடிய சுற்றம் அமையப் பெறுவது ஒரு வரம். அவ்வரம் வாய்க்கப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்,

தனி வாழ்க்கையில் சுற்றத்தார் அமைவது போல் பொது வாழ்க்கையிலும் சுற்றத்தார் அமைவது உண்டு. சுற்றம் என்பது பிறப்பின் தொடர்பாலும், பெண் கொள்ளல், கொடுத்தல் ஆகியவற்றாலும் ஏற்படும் சுற்றம் மட்டும் அன்று.

பொது வாழ்வில் எந்த பிரதிபலனும் எதிர்பாராது நம்மோடு உள்ளன்போடு பழகி நேசம் காட்டுபவர்களும் நம் திருக்குறள் புலன உறவுகள் போல உண்மைச் சுற்றமாக விளங்குவார்கள்.
அத்தகு சுற்றங்கள் பதவி, செல்வாக்கு நீங்கிய காலத்தும் அன்பு பாராட்டுவார்கள். உண்மைச் சுற்றம் எப்போதும் நிழல்போல் உடனிருக்கும்.
போலிச் சுற்றம் வாழ்ந்தால் உடன் இருக்கும்.
வீழ்ந்தால் விலகி விடும்.

விதைப்பது தான் விளையும்.
நாம் எவ்வளவு உள்ளன்போடு உறவு கொள்கின்றோமோ அதற்கேற்றபடி தான் உறவுகள் அமையும்.
நாம் அன்பு செலுத்தினால் அவர்களும் அன்பு செலுத்துவர். நாம் அவர்களோடு ஒட்டிப் பழகாது விலகினால் அவர்களும் விலகத்தான் செய்வார்கள்.

நம் நெருங்கிய உறவுகளோடு மனங் கலந்து பழகி ஒட்டி உறவாடினால் வாழ்க்கையில் இன்பம் பெருகும். குற்றம் பாராட்டிக் கொண்டே மனம் போனபடி நடந்தால் உறவுகளும் சேராது. வாழ்க்கையும் கரையில்லாத குளம் போல் பயனற்று வெறுமையாகிவிடும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
குற்றம் பார்க்கின் சுற்ற மில்லை.

- கொன்றைவேந்தன் _ ஒளவையார்.

உறவுகளுக்கு அழகாவது நலத்தீங்குகளில் சூழ்ந்து இருப்பதாகும்.

குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவாவோர் ஒருவருமில்லை.

உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.
_ நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.

உடனிருப்பவர் எல்லாம் உண்மை உறவினராகார். இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் சுற்றத்தாரே உண்மை உறவினர் என்று சொல்லத் தகுதியுடையவர்.

உற்ற பெருஞ் சுற்றமுற நன்மனைவியுடன் பற்றி மிக வாழ்க .
_ நீதி வெண்பா.

பெருமை பொருந்திய உறவுகளோடும், வாய்த்த நல் மனைவியோடும் வாழ்தல் வேண்டும்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

- மூதுரை - ஒளவையார்.

நீர் வற்றிய குளத்தினின்றும் நீங்குகின்ற நீர்வாழ் பறவைகள் போல வறுமை வந்தபோது விட்டு நீங்குவோர் உண்மை உறவினர் ஆகார் .அக்குளம் வற்றிய போதும் அதில் வாடும் கொட்டி, அல்லி, ஆம்பல் கொடி போல நீங்காது உறவாடுபவரே உண்மை உறவினராவார்.


மனங்கலந்து பழகினால்
மகிழ்ச்சி பொங்கும்
உறவுகள் நிலைக்கும் 
குற்றங் கண்டால்
சுற்றம் விலகும்
சூழிருள் மூழ்கும்!
அன்பை விதைப்போம்
அறுவடை செய்வோம்
சுற்றம் சூழ
வள்ளுவமாய் வாழ்வோம்!

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...