Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 61















பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 7 - மக்கட்பேறு.
குறள் - 61.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


விளக்கம் - இல்வாழ்க்கை நடத்துபவர் பெறும் பேறுகளுள், அறிய வேண்டியவற்றை அறிய வல்ல நன்மக்களைப் பெறுவதைப் போன்ற வேறு எந்த சிறந்த பேறும் இல்லை.

இல்வாழ்க்கையில் பெற வேண்டிய நற்பேறுகள் பல உள்ளன. அவற்றில் நன் மக்களைப் பெறும் பேறு பெரும் பேறாகும். அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய மக்களைப் பெறுதலைப் போல சிறப்புடைய பேறுகள் வேறு எதுவும் இல்லை.

இருமனம் இணைவதே திருமணம். இணைந்த இரு மனங்கள் இனிமையாய்க் கருத்தொருமித்து இயைந்து நடத்துவதே இல்வாழ்க்கை. அத்தகைய இனிதான இணை அமையப் பெறுவதே வாழ்க்கைத் துணைநலம். அத்தகைய துணை அமையப் பெற்று அத்தகு இணையரின் அன்பு வாழ்க்கையில் விளைந்த நன் முத்துகள் தான் மக்கட்பேறு.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். மனைவி மட்டுமல்ல, இல்லறத்திற்கு இயைந்த இணை, அறிவார்ந்த மழலைகள், நல் வாழ்க்கை அனைத்துமே இறைவன் கொடுத்த வரம் தான்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


ஏவா மக்கள் மூவா மருந்து.
சந்ததிக் கழகு வந்தி செய்யாமை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

பெற்றோர்கள் கட்டளையிடுவதற்கு முன் குறிப்பறிந்து செய்யும் நன்மக்கள் தேவாமிர்தத்துக்கு ஒப்பாவார்கள்.

வம்சத்திற்கு அழகு வந்தியில்லாமல் நன்மக்களைப் பெறுதல் ஆகும்.

" மைந்தன் மனைக்கு மணி"

- நீதி வெண்பா.

இல்வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது நன்மக்கட்பேறாகும்.

கொண்டானின் துன்னியகேளிர் பிறரில்லை - மக்களின்
ஒண்மைய வாய்ச்சான்ற பொருளில்லை.

- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

குலமகளுக்குக் கட்டிய கணவனை விட நெருங்கிய உறவு இவ்வுலகில் வேறு யாருமில்லை. பெற்றோருக்குத் தம் குழந்தைகளை விட ஒளி பொருந்திய பொருள் வேறில்லை.

மனைக்கு விளக்கம் மடவார் _ மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர்.

_ நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

இல்லத்திற்கு புகழ் சேர்ப்பது நல்ல மனைவி .அவளுக்குப் பெருமை சேர்ப்பது அறிவார்ந்த பிள்ளைகள்.

பொற்பறிவில் லாதபல புத்திரனைப் பெறலினோர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே.

_ நீதிவெண்பா.

அறிவற்ற பல பிள்ளைகளைப் பெறுதலினும் நல்லறிவுடைய ஒரு புதல்வனைப் பெறுவது நன்மையாகும்.

இங்கித குணங்களும் வித்தையும் புத்தியும்
ஈகையும் சன்மார்க்கமும்
இவையெலா முடையவன் புதல்வனாம்- அவனை
ஈன்றவன் புண்ய வானாம்.

-அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர்.

இங்கிதமான நல்ல குணநலன்களும் , கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், தயாள குணமும், சன்மார்க்க நெறியும் உடையவனே நல்ல புதல்வனாம். அப்படிப்பட்ட அரிய பிள்ளையைப் பெற்றவன் புண்ணியவானாம்.

ஒருகோடி நட்சத்திரங்கள் நடுவிலே
உதித்த சந்திரோதயம் போல்
உபயகுல சுத்தனாம் பகீரதன்
போலவே ஒருபிள்ளை போதுமவனால்
மரபெலாம் நன்மையே அடையும்.

- திருவேங்கட சதகம் - நாராயண பாரதியார்,

கோடி விண்மீன்களுக்கிடையே தோன்றும் மதியொத்த ஒரு மகனால் அந்த மரபே நன்மை அடையும்.

திசை மெச்ச வேண்டும் - அல்லால்
தேகியென வருபவர்க்கு இல்லை யென்னாமலே
செய்யவே வேண்டு மல்லால்
வித்துவான் ஆகவே வேண்டும் – அல்லால்
அறிவான துரை மக்களாக வேண்டும்.

- குமரேச சதகம் -குருபாததாசர்.

சதம் என்பது நூறு .
நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்ட இந்த மூன்று சதகப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகள் அறிவார்ந்த மக்கட்பேற்றின் சிறப்பை அழகுற உணர்த்துகிறது.

பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர் .
- நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.

பெற்ற எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள் ஆகா.
அறிவொழுக்கங்களில் மேம்பட்ட பிள்ளைகளே பிள்ளைகள் என்று சொல்வதற்குத் தகுதியுடையவர்கள்.

இல்வாழ்க்கையின் பயனே நன்மக்கட் பேறு தான். அம்மக்கள் அறிவுடையவர்களாகவும், அறநெறி உடையவர்களாகவும் இருப்பது தான் சிறந்த பேறாகும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...