Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 238














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 24 - புகழ்
குறள் - 238.

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.


விளக்கம் - தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால், உலக மக்களுக்கு வாழ்க்கையே பழியுடையதாகும்.

புகழ் என்பது ஒருவனுடைய நல்ல பண்புகளையும், நல்ல செயல்களையும் அறிந்தவர்கள் அவனைப் போற்றியுரைக்கும் சொல்லாகும். ஒருவன் இறந்த பின்னும் அழியாமல் நிற்பது ஆகையால் அதை இசை என்னும் எச்சம் என்று நம் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

தற்காலத்தில் புகழ் என்பது செல்வாக்கு பெற்றவர்கள் அரசியல், விளம்பரங்கள், ஊடகங்கள் வாயிலாக தம்மை பறைசாற்றிக் கொள்வதே என்று நினைக்கின்றார்கள்.
நம்மைப் பற்றி பிறர் புகழ வேண்டும். நாமே புகழ்ந்து பேசி தற்பெருமை கொள்ளக் கூடாது.

ஒருவருடைய இறப்புக்குப் பின்னும் அவர் பேசப்பட வேண்டும். மற்றவர் நெஞ்சங்களில் வாழ வேண்டும். அதுதான் உண்மையான புகழ்.
ஒருவனுடைய அறவொழுக்கத்தின் அடிப்படையாக எழுந்து விளங்குவதையே புகழ் என்கிறார்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


பீடு பெற நில்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பெருமையும், புகழும் அடையும்படியாக நல்ல வழியிலே நிற்பாயாக.

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
_ ஆத்திசூடி.

உன்னை அடுத்துப் புகழ்ந்தவர்களை கைவிடாமல் காப்பாற்றி வாழ்வாயாக.

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்.

- உலகநீதி - உலகநாதர்

புகழ் அடைதற்குக் காரணமாகிய நற்காரியங்களை செய்யாது விலக்க வேண்டாம்.

புகழ்ச்சியால் போற்றாதார் போற்றப்படும்.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

ஒருவன் பலரும் புகழும்படி ஒழுகுவானாயின், அப்பெரும் புகழினால் பகை வரும் அவனை வணங்குவர்.

தன்னச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தும்
என்று மழுக்காறு இகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.

- திரிகடுகம்-நல்லாதனார்.

தன்னை மதித்து வந்தவரை இகழாது ஏற்றுக் கொள்ளும் ஒருவனும், செல்வமுற்ற காலத்தும் நண்பர்களை மறவாமல் போற்றுபவனும், பொறாமையின்றி பிறர் நல்வாழ்வு கண்டு மகிழ்வானும் நிலைத்த புகழுடன் நின்று வாழ்வான்.

பெரியார்முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும்.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

பெரியவர்கள் முன் தன்னைச் சிறப்பித்துச் சொல்லிக் கொண்ட மூடன் தாழ்வை அடைவான்.

தமக்குப் பின் எஞ்சி நிற்பவை புகழும், பழியும் மட்டுமே. புகழைப் பெறாவிட்டால் பழிதான் எஞ்சி நிற்கும்.
புகழைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை.
அன்பு, கருணை, ஈகை, ஒழுக்கம் முதலியவற்றை முறையாகக் கடைபிடித்து வந்தாலே புகழ் நம்மைத் தானாகத் தேடி வரும்.


வசைநீங்கி வாழ்வான்
இசைவாணன் ஆவான்
அருளுடைத் தெய்வம்
அண்ணல் இவரென்று
அகிலம் போற்றிட
வாழ்தலே சிறப்பு!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...