பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை.
குறள் - 897.
வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
விளக்கம் :- எல்லா வகையாலும் தகுதியால் சிறப்புடைய பெரியாரைக் பகைத்து அவர் சினத்திற்கு ஆளானால், மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் , பெரும் பொருளும் இருந்தாலும் அவை என்ன பயனைத் தரும்?
ஒரு பயனும் தராது.
உலகத்தில் சிலர் அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களை அவமதித்து பிழை செய்வதால் வரும் இடரும், அழிவும் தாங்க முடியாதன வாக இருக்கும்
பெரியோர் என்பவர் வயதில் மட்டும் மூத்தவர் அல்லர்.பெரியோர் என்பவர் இயல்பில் நல்லவர்கள். தன்னலமற்றவர்கள். எல்லா வகையிலும் சிறந்த தகுதியைப் பெற்றவர்கள். தீமை செய்தார்க்கும் நன்மையே செய்பவர்கள். அப்படிப்பட்டவரை சினந்தால் அதிலிருந்து நாம் தப்பவும் முடியாது. மாண்புற்ற வாழ்வும் , பெரும் பொருளும் இருந்தும் பயன் இல்லை.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
சான்றோர் இனத்திரு.
பெரியாரைத் துணைக் கொள்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்து இரு .
அறிவிற் சிறந்த பெரியோரைத் துணையாகப் பேணிக் கொள்.
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்
பெரியோர் கூறும் வார்த்தைகளை ஒருபோதும் மறக்கக் கூடாது. அவர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
_ நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.
உருவத்தால் பெரியவர் எல்லாம் பெருமையுடையவர் ஆகார் .
உருவத்தில் சிறியவர் எல்லாம் சிறுமை உடையவர் ஆகார் .
அறிவினாலும், பிறருக்கு உதவி செய்தல் முதலிய நற்குணங்களாலும் பெரியவரே பெருமையுடையவர் ஆவர்.
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல் மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.
- மூதுரை - ஒளவையார்,
கீழ்மக்கள் கடுங்கோபத்தால் வேறுபட்டால் கல்லின் பிளவு போல் மீண்டும் திரும்பக் கூடார்.பொன்னின் பிளவோடு ஒப்பாவார் ஒருவர் கூட்டக் கூடுவர். சிறப்புமிக்க பெரியோர் அம்பினால் நீர் பிளக்க எய்த பிளவு போல் அப்போதே கூடும் இயல்புடையவர்.
பேதையரைக் கண்டால் பெரியோர் வழி விலகி
நீதியொடு போதல் நெறியன்றோ - காதுமத
மாகரத்த யானை வழிவிலகல் புன்மலத்தின்
சூகரத்துக் கஞ்சியோ சொல்.
- நீதி வெண்பா.
பெரிய தும்பிக்கையை உடைய யானை, பன்றியைக் கண்டு வழி விலகிப் போவது அச்சப்பட்டு அன்று. அதுபோல் சான்றாண்மை பொருந்திய பெரியோர்கள் அறிவற்ற கீழ் மக்களின் கீழ்ச் செயலுக்கு ஒன்றும் செய்யாமல் விலகிப் போதல் அச்சத்தினால் அன்று.
விலகிப் போவதால் தம்மைக் கண்டு அஞ்சுவதாக இறுமாந்து அவர்களுக்கு தீங்கு செய்தல் கூடாது.
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ "
- வள்ளலார்.
நல்லுள்ளம் கொண்ட பெரியோர்கள் மனத்தை நடுங்கும்படி செய்தேனோ என்கிறார் வள்ளலார்.
அவ்வாறு செய்தால் அந்த பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்க முடியாது.
எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே
- நன்னெறி - சிவப்பிரகாசர்.
பிறர் இகழாவண்ணம் காக்கப்படுதல் சிறியோருக்கன்றி பெரியோருக்கு வேண்டுவதில்லை.
அறிவாற்றல் மிகுந்த பெரியோரைக் கோபித்தால் ஆவது ஒன்றுமில்லை.பல்வகைப் பொருளும், மாட்சிமைப்பட்ட வாழ்வும் அமைந்தும் பயனில்லை. பெரியோர் மனம் வருந்தும் படி நடத்தல் கூடாது. பெரியோரைப் பிழையாது அவர்களைத் துணையாகப் பற்றி அவர் தம் அறிவுரைகளை கடைபிடித்து வாழ வேண்டும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment