பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 108 - கயமை.
குறள் - 1079.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
விளக்கம் :-பிறர் நன்றாக உடுப்பதையும், நன்றாக உண்பதையும் கயவர்கள் கண்டால், மனம் தாங்காது பொறாமை கொண்டு, அதற்கும் குற்றம் காண்பதில் வல்லவர் ஆவார்கள்.
கயவர் என்றால் யார் ? வாழ்க்கையில் பொறுப்பு இல்லாத காரணத்தால் நெஞ்சில் சிறிதும் கவலை இல்லாதவர்கள். நெறி இல்லாத காரணத்தால் தம் விருப்பம் போல் நடக்கின்றவர்கள். அவர்கள் தமக்காகவும் கவலைப்பட மாட்டார்கள். பிறருக்காகவும் கவலைப்பட மாட்டார்கள்.
கயவர்கள் புலனடக்கம் இல்லாதவர்கள். நாவடக்கமும் இல்லாதவர்கள். பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டாலும் பொறாமை கொள்வார்கள். பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் கண்டாலும் அவர்களின் மேல் பொறாமை கொண்டு இல்லாத குற்றங்களை எல்லாம் சொல்லி தூற்ற வல்லவர்கள் கயவர்கள்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
பூரியோர்க் கில்லை சீரிய ஒழுக்கம் .
_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.
கீழ் மக்களிடத்து சிறப்பான ஒழுக்கம் காணப்படுவதில்லை.
கீழ்மை யகற்று .
_ ஆத்திசூடி - ஒளவையார்.
இழிவான குணம், செயல்களை நீக்கு.
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.
உருவத்தால் பெரியவர் எல்லோரும் பெருமையுடையவராகார். அற்ப புத்தி உடையவர்களுமிருப்பர்.
கயவரைக் கையிகந்து வாழ்தல் இனிதே .
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
கீழ் மக்களாகிய கயவர்களை நீங்கி வாழ்வது இனிமை உடையதாகும்.
வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றால் சால அரிதாகும் - அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்மகட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.
_ அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.
நாள்தோறும் நீரினுள் மூழ்கிக் கிடந்தாலும் கல்லிற்கு மென்மையடைதல் என்பது சிறிதும் இல்லை. அதுபோல நாள்தோறும் அற வழிகளைக் கேட்டாலும் கயவர்களுக்கு மனமானது கல்லை விட திண்ணியதாகவே இருக்கும். கீழ்மக்கள் நெஞ்சில் அறவுரை புகாது.
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணஞ் செய்தாலும்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகுண்டாமோ
குக்கலே குக்கலல்லாற் குலந்தனில் பெரியதாமோ?
- விவேக சிந்தாமணி.
புனுகுப் பூனை வசிக்கத்தக்கக் கூண்டில் நாயை அடைத்து வைத்து மஞ்சள் முதலியவற்றைப் பூசி வாசனையூட்டினாலும் நாய் நாயாகுமேயன்றி வேறு பெரிய இனமாகுமோ?
அதுபோலத்தான் கீழ் மக்களும் தங்களின் கீழ்மையான குணங்களிலிருந்து என்ன செய்தாலும் மாற மாட்டார்கள்.
பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்குக் கொள்கை வேண்டும். உரிமையுணர்வு வேண்டும். கயவர்களுக்கோ இரண்டும் இல்லை.
கயவர்களைத் தனியே பிரித்து ஒதுக்குவது இயலவில்லை. அவர்கள் மக்கள் போலவே வெளித்தோற்றத்தில் வலம் வருவதால் அவர்களை எளிதில் அறிந்து விலக்கி விட முடியவில்லை. அவர்களால்தான் பொறுப்பற்ற தன்மை, நெறியின்மை, அதிகார மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, அற்ப ஆசை , பொறாமை முதலிய பல மாசுகள் பொதுவாழ்வில் இருக்கின்றன. பொது வாழ்விற்கு இடையூறானவர்கள் கயவர்கள். அவர்களின் தன்மையறிந்து விலக்கி நடப்பதே சீர் பெறுவதற்கு வழியாகும்.
உண்டலும் பொறாது
உடுத்தலும் பொறாது
உயர்தலும் பொறாது
உள்ளுக்குள் புழுங்கி
உண்மைக்குப் புறம்பாக
ஊரெலாம் தூற்றி
உளமகிழ்வார் கயவர்!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment