பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 25- அருளுடைமை
குறள் - 242
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை
விளக்கம் :- நல்ல பல நெறிகளால் ஆராய்ந்து அருள் உடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளுடைமையே உயிர்க்குத் துணையாக விளங்குகின்றது.
வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை வழங்கும் ஐந்தாம் உடைமை அருளுடைமை.
உலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தமக்கு ஏதாவதொரு உறவு முறையால் தொடர்புடையார் மாட்டு இயற்கையாக அன்பு தோன்றும். இவ்வன்பு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி தம் மக்கள், தன் சுற்றம் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி எல்லாரிடத்தும் , எல்லா உயிர்களிடத்தும் நெஞ்சம் நெகிழ்ந்து, கசிந்துருகிச் செலுத்தப்படும் போது அருளாக மலர்கின்றது.
அன்பின் முதிர்ச்சியே அருள். பிறர்க்குதவும் உயர்ந்த உள்ளமும், பிறர் துன்பம் கண்டு நெக்குருகி , அவரது துன்பம் துடைத்து உளம் மகிழ்வதே அருளாளர்களின் சீரிய பண்பாகும்.
அரசன் மகனாய்ப் பிறந்து, ஆடம்பரத்திலே வளர்ந்த சித்தார்த்தர் அரச வாழ்வையும்,வீடு மனைவி மக்கள் என அனைத்தையும் துறப்பதற்குக் காரணமாயிருந்தது அவரது அருள் உள்ளமே.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
வெள்ளைக் கில்லை கள்ள சிந்தை
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
களங்கமற்ற அருளுடை மனமுடையவன் இடத்தில் வஞ்சக எண்ணம் இல்லை.
அருளில் பிறக்கும் அறநெறி
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.
அறநெறிகள் அனைத்தும் அருளின் வாயிலாகத் தான் தோன்றும்.
"அருளான் அறம் வளரும் "
"நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் "
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்,
அருளால்தான் எல்லா அறங்களும் வளரும்.
நல்லறமே எனது தந்தை, அறிவே எனது தாய், நன்மையை உணர்வதற்குக் காரணமாகிய கல்வியே எனக்கு உற்ற தோழன் என்கிறார் முனைப்பாடியார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
- வள்ளலார்.
எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.
_ தாயுமானவர்.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரும்,
எல்லாவுயிர்களையும், தம்முயிர்போல எண்ணிய அருட் சிந்தனையுடைய தாயுமானவரும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடும், அருளுள்ளத்தோடும் திகழ்ந்தனர்.
இவர்கள் மட்டுமா?
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.
இமையவரும் வியப்படையுமாறு புறாவின் துயர் துடைக்க தன் தசையைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, பசுவின் கண்ணீரைத் துடைக்க தன் அரும் பெறல் புதல்வனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் ஆகியோர் பறவைகள், விலங்குகளிடத்தும் அருள் உள்ளத்தோடு நடந்து கொண்டனர்.
வாடிய முல்லைக் கொடிக்குத் தேரீந்த பறம்பு மலையின் கோமானாம் பாரிவள்ளல், குளிரால் நடுங்குவதாக எண்ணி மயிலுக்குப் போர்வை தந்த பேகன், தமிழுக்குத் தலை தந்த குமண வள்ளல் ஆகியோரும் அருளாளர்களாகவே இருந்திருக்கின்றனர்.
பகைவர்க்கும் இரங்கிய பண்பாளர்கள் தான் அண்ணல் காந்தி, இயேசு நாதர், மெய்ப்பொருள் நாயனார் போன்றவர்கள்.
அருள்நெறியே வாழ்க்கைக்குத் தேவையான முதன்மையான நெறியாகும்.
கருணையுள்ளத்தோடு, பிறர் துயர் துடைக்கும் தூய எண்ணம் மேலோங்கி, பகைவர்க்கும் இரங்கும் பண்புள்ளமே அருளுடையோரின் அன்புடை அருளுள்ளமாகும்.
மனிதர் என்றால்
இருக்க வேண்டும்
அருள் உள்ளமே _ அதில்
மடை திறந்து
பாய வேண்டும்
அன்பு வெள்ளமே !
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment