பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 91 - பெண்வழிச் சேறல்.
குறள் - 903.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
விளக்கம் :- மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இயல்பு ஒருவனுக்கு உண்டானால், அவனுக்கு நல்லோரிடத்தில் இருக்கும் போது கூட நாணத்தைத் தோற்றுவிக்கும்.
மனைவிக்கு அஞ்சி நடப்பவன் எப்போதும் நல்லவர்களுக்கு நன்மை செய்வதற்கு அஞ்சுவான்.
இன்பத்துப்பாலில் பெண்ணைக் காதலனுடைய உயிராகப் போற்றிக் கூறியவர் , அறத்துப்பாலில் மனனத் தக்க மாண்புடையவள் என்று போற்றியவர் பொருட்பாலில் மட்டும் பெண்களைத் தாழ்த்திப் பேசுவாரா என்ன?
அடிமைத்தனம் என்பது வேறு. விட்டுக் கொடுத்தல் என்பது வேறு.
ஆணுக்குப் பெண் அடிமையாகிப் போகும் பெண்ணடிமைத்தனமும் குடும்ப முன்னேற்றத்தை குலைக்க வல்லது. அது போலவே பெண்ணுக்கு ஆண் அடங்கி நடக்கும் ஆணடிமைத்தனமும் பொது வாழ்க்கையை கெடுக்க வல்லது.
மனைவியின் பேச்சைக் கேட்காதே என்று ஆணுக்கும், கணவன் பேச்சைக் கேட்காதே என்று மனைவிக்கும் யாரும் புத்தி சொல்ல மாட்டார்கள்.
இருமனம் இணைந்து கருத்தொருமித்து இயைந்து நடத்துவது தான் இல்வாழ்க்கை. அத்தகைய இணையான துணை அமையப் பெறுவது தான் வாழ்க்கைத் துணைநலம். அவர்களது அன்பு வாழ்க்கையில் விளைந்த முத்துகள்தான் நன்மக்கட்பேறு.
பெண்ணின் பெருந்தக்கயாவுள என்று பெண்ணின் திறத்தை வியந்து போற்றுகிறார். தற்காத்து , தற்கொண்டானைப் பேணும் பெண்ணானவள், தன் கணவனது வளத்திற்கு ஏற்ற வாழ்க்கை நடத்தாமல், தன் பெருமையையும், சிறப்பையுமே பொருளாகக் கருதி கணவனது பொறுப்புகளையும், கடமைகளையும் உணராமல் அவனது பொது வாழ்க்கையை உறிஞ்சித்தன்னையே போற்ற வேண்டும் என்று விரும்புவாளாயின், அவளைத் திருத்தி நன்வழிப்படுத்துவது கணவனின் கடமையாகும். அதை விட்டு விட்டு அவள் மீது கொண்ட மோகத்தால் அவள் வழியில் இணங்கிச் சென்று அஞ்சி நடக்கும் ஆண் மகனால் நல்லவை செய்து கடமையாற்றுதல் இயலாது.
பொதுக் கடமையை மேற்கொண்டவனாகிய ஆண்மகன் , கடமையைச் செய்ய விடாது இடையூறாக இருக்கும் பெண்ணுக்கு அஞ்சி நடக்கும் இயல்பைத்தான் கடிகின்றார்.
"இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை"
"மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்"
"இல்லாளை அஞ்சுவான்"
"பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மை "
என்று முத்தமிழால் வைகின்றார்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனனவாழ்க்கை நன்று தவத்தின் - புனை கோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்தோம்பிச்
சொல்லெதிர் சொல்லா ளெனில்.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடி யார்.
தீவினைகளை விலக்கி, தன்பால் வந்த விருந்தினர்களைப் பேணி, வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனுடைய வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும். அழகிய கூந்தலையும், மெல்லியலையும் உடைய மனைவியும் கணவன் சொல்லுக்கு ஏறுமாறாகச் சொல்லாது இயைந்து நடப்பவளாயின் மனை வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இருவரும் கருத்தொருமித்து இல்லாமல் மணமாகி வந்த மறுநாளே கணவனைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பவள் நற்குணவதியல்லன். பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் சமூகக் கடமைகளை மறந்து அஞ்சி மனைவியின் ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போதுதான் அவன் நாண வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றே
ஏறுமாறாக நடப்பாளே யாமா யின்
கூறாமல் சன்னியாசம் கொள்.
_ ஒளவையார்.
இயைந்து நடப்பவளானால் எத்தகைய சூழலிலும் இணைந்து வாழலாம். ஏறுமாறாக இல்லாள் அமைந்தால் சொல்லிக் கொள்ளாமல் சன்னியாசி ஆகிவிடு என்கிறார்.
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.
_ கலித்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ.
கணவன் மனைவி இயைந்து நடத்தும் இல்லறத்தில் பொருளால் வறுமை ஏற்பட்டாலும், ஒரே ஆடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துமளவு வறுமை நிலை ஏற்படினும் வாழ்நாள் முழுதும் இணைந்து வாழும் வாழ்க்கையே இனிமையானது.
தையல் சொல் கேளேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
மனைவியின் துற்போதனைகளைக் கேட்டு நடவாதே.
துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.
- கொன்றை வேந்தன் _ ஒளவையார்.
கணவனுக்குத் துன்பம் வந்த போது மனம் பதையாத பெண்கள் மடியில் கட்டிக் கொண்ட நெருப்பை ஒப்பர்.
கணவன் மீது அவதூறு சொல்லும் பெண்கள் நமன் என்று எண்ணப்படுவர்.
நீதியகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க
நெறி மாதரைத் தந்தனை
நிதானமுள உத்தமர்க்கு இங்கிதமிலாத கொடு
நீலியை சேர் வித்தனை.
-அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர்,
மூடர்களுக்கு அருந்ததி போன்ற பெண்களையும்,
நிதானமான உத்தமர்களுக்கு
இங்கிதம் தெரியாத கொடுமையான நீலி போன்ற பெண்களும் மனையாளாக அமைந்து விடுகின்றனர்.
அற்ற தலைபோக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றும்
மரமனை யானுக்கிந்த மானை வகுத்த
பிரமனை யான்காணப்பெறின்.
அற்றதலைபோக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ _ நல்ல
குணங்காட்டு கூரறிவு மகனுக்கு - மனையாளாய்
பிணங்காட்டுப் பேயை வகுத்த அறனை .
- ஒளவையார்.
நெறி தவறும் ஆணையும் சாடுகின்றார். பெண்ணையும் சாடுகின்றார்.
நம் புலவர் பெருமக்கள் தவறெனின் இருபாலரையுமே கடிந்துரைக்கின்றனர்.
தவறாக வழிநடத்தும் இல்லாளுக்கு கட்டுப்பட்டு தாழ்ந்து நடக்கும் ஆண்களையும், கடமையாற்றவிடாமல் கணவனைத் தடுக்கும் பெண்களை மட்டுமே கடிந்து உரைக்கின்றார்.
ஆணுக்குப் பெண்ணோ
பெண்ணுக்கு ஆணோ அடிமையில்லை.
கருத்தொருமித்து
அன்புக்கு மட்டுமே
கட்டுப்பட்டு
விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
செழிக்கும் இல்வாழ்க்கை.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment