Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 282















பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்.
அதிகாரம் - 29 - கள்ளாமை.
குறள் - 282.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.


விளக்கம் :-பிறருக்குச் சொந்தமான பொருளை மனத்தால் நினைத்தலும் தீயதே. ஆதலால் பிறன் பொருளை வஞ்சத்தால் கொள்வோம் என்று எண்ணாது இருக்க வேண்டும்.

எல்லோரும் வாழ வேண்டும் என்னும் அருள்நோக்கம் உடையவன் பிறருடைய பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்க மாட்டான். அதனால் அருள்நோக்கம் கெடும். பிறருடைய இகழ்ச்சிக்கும் ஆளாக வேண்டி வரும்.

குற்றம் எதுவானாலும் செய்வது மட்டுமன்று, எண்ணுவதும் கூடாது. உள்ளத்தில் எண்ணுவது முதல் படி. செயல் அதன் இரண்டாம் படி.ஆகையால் செயலளவில் குற்றம் இல்லாமல் வாழ வேண்டுமானால் உள்ளத்தில் எண்ணுவதும் தீமை என்று உணர்ந்து வாழ வேண்டும். பிறர் பொருளை களவுவகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று மனத்தாலும் நினைத்தல் கூடாது. இங்கே களவு என்று குறிப்பிடப்படுவது இரவிலும், பகலிலும் திருடிக் கொள்ளையடிக்கும் திருட்டு மட்டுமன்று. பிறர் அறியாமல் அவர்களை வஞ்சித்துப் பொருள் கொள்ளும் எல்லா செயலும் திருட்டே ஆகும்.

தேவைக்கு மிகுதியாகப் பொருள் சேர்த்து வைத்தலும், அளவுக்கு மீறி செலவு செய்தலும் திருட்டுக்கு நிகரான குற்றங்களே என்பது காந்தியடிகள்,டால்ஸ்டாய் முதலிய சான்றோர்களின் கருத்து .

கொள்ளை விரும்பேல்
- ஆத்திசூடி - ஒளவையார்.

பிறர் பொருளைக் கைக்கொள்ள ஆசைப்படாதே.

புலையும் கொலையும் களவும் தவிர்.
வெள்ளைக்கில்லை கள்ள சிந்தை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

புலால் உண்ணுதல், பிற உயிர்களைக் கொல்லுதல், திருடுதல் இவற்றைச் செய்யாதே.

களங்கமற்ற மனமுடையவரிடத்தில் வஞ்சனை எண்ணம் இருக்காது.

கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

கொலையும், திருட்டும் செய்யும் தீயவருடன் நட்பு கொள்ளாதே.

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்

- நான்மணிக்கடிகை _ விளம்பி நாகனார்.

கொடிய துன்பங்கள் பின்பு உண்டாவதனால் என்றும் களவாடுதல் கூடாது.

காமுற்று வவ்வார் விடுதல் இனிது.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

தாங்கள் கண்ட பொருளை விரும்பி அப்பொருளைப் பெறும் எண்ணத்தை உறுதியாகக் கொண்டு அபகரிக்காமல் விடுவது இனியதாகும்.

இன்னா கள்ள மனத்தார் தொடர்பு.
- இன்னா நாற்பது - கபிலர்.

வஞ்சனையுடைய மனத்தவர் தொடர்பு துன்பம் தருவதாகும்.

உள்ளமுருக உரைத்து பொருள் கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம்?

_ அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

கேட்போர் மனமுருகுமாறு வாயளவில் பேசி இருக்கின்ற பொருளைக் கவர்ந்து நீங்குகின்றவர்கள் கள்வருக்கு நிகராவர்.

இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம்- மடநல்லார்
பொம்மன் முலைபோல் பருத்திடினும் மற்றவர்
நுண்ணிடைபோல் தேய்ந்து விடும்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

ஒருவரை வஞ்சித்துக் கவர்ந்து பெற்ற செல்வமானது பெண்களின் பூரித்த கொங்கை போல் மிகுந்திட்டாலும் அதிவிரைவில் அவர்களின் சிற்றிடை போல் குறைந்து விடும்.

வாழ்க்கையில் தேவைகளை மிகுதிப் படுத்திக் கொண்டால் மேன்மேலும் பொருளை நாடி அலைய வேண்டி வரும். தேவைக்கு அதிகமாகச் செலவு செய்து பழகினால் எவ்வாறேனும் பொருளைப் பெற வேண்டும் என்ற வேட்கை வளரும்.இவ்வாறு வாழ்கின்றவர்கள் நாணாது பிறர் பொருளைக் கவரவும் தயங்க மாட்டார்கள். அப்படிச் செய்பவர்களின் களவு, வறுமையின் காரணமாக களவில் ஈடுபடுபவரின் செயலை விட மிகத் தீயதாகும்.

வாழ்க்கையின் தேவைகளை அளவு படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கை அறநெறிக்குத் துணை செய்யும்.
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து "


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...