Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 296















பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம்-30- வாய்மை,
குறள் - 296.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.


விளக்கம் - ஒருவனுக்குப் பொய் பேசாமல் இருப்பது போல், புகழுக்கு காரணமானது வேறு இல்லை. அந்த பொய் கூறாத நல்லியல்பே அவன் அறியாமலே அவனுக்கு எல்லா நலன்களையும் தானே கொண்டு வந்து சேர்க்கும்.

அருள்மனம் நிறைந்தவர் எக்காரணம் பற்றியும் யாரையும் வஞ்சிக்க மாட்டார்கள். உள் ஒன்று வைத்து புறமொன்றுப் பொய்யாகக் கூறுவதும் வஞ்சிப்பதே ஆகும். ஆகையால் உள்ளத்தில் உள்ள உண்மையையே வாயாலும் கூற வேண்டும். அதுவே வாய்மை எனப்படும். உள்ளத்தில் உள்ளதற்கும் வாயால் கூறுவதற்கும் பொருந்தியவாறே செயலிலும் ஒழுக வேண்டும்.
வாயமை என்பது சிறந்த அறமாகும். அதைத் தவறாது கடைபிடித்தால் மற்ற அறங்கள் தாமே வந்து வாய்க்கும்.

கண்டுஒன்று சொல்லேல்.சித்திரம் பேசேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

கண்ணால் கண்டதற்கு மாறாக வேறொன்றைச் சொல்லாதே.

பொய்மொழிகளை மெய்போலப் பேசாதே.

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்.

- உலகநீதி - உலகநாதர்.

தன் மனமறிய பொய் தன்னைச் சொல்லுதல் கூடாது.

பொய்யுடையொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே .

மெய்யுடையொருவன் சொலமாட் டாமையாற்
பொய்போ லும்மே பொய்போ லும்மே .

- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

பொய்ம்மை உடைய ஒருவன் கூறும் பொய்யானது அவனது பேச்சு வன்மையால் உண்மை போலவே தோன்றும்.

மெய்ம்மையுடைய ஒருவன் கூறும் உண்மையானது அவனது சொல்வன்மை இன்மையால் பொய் போலத் தோன்றக் கூடும்.
எனவே சாதுர்யமாக பொய் பேசுதல் கூடாது.

"பொய்யாமை நன்று. பொருள் நன்று"
-சிறுபஞ்ச மூலம் _ காரியாசான் .

பொய் பேசாது எப்போதும் வாய்மையே பேசுதல் நன்று. தன் முயற்சியினால் வரும் செல்வம் நன்று.

பொய்யுரையான் வையான் புறங்கூறான்....
_ ஏலாதி - கணிமேதையார்.

பொய் பேசாதவன், மற்றவரை இகழ்ந்து திட்டாதவன், மற்றவரை இழிந்து புறங்கூறாதவன் ஆகியோர் விண்ணோர்க்கு வேந்தனாகும் தகுதி பெற்றவராவர்.

சத்தியத்தை வெல்லா தசயத்திந்தான்

_ நீதி வெண்பா.

பொய் மெய்யை வெல்ல மாட்டாது.

சத்தியமெக் காலுஞ் சனவிருத்த மாகுமே
எத்தியபொய் யார்க்கும் இதமாகும் - நத்தியபால்
வீடு தொறுஞ்சென்று விலையாம் மதுவிருந்த
வீடுதனி லேவிலையா மே.

- நீதிவெண்பா.

உடலுக்கு நலம் பயக்கும் ஆவின் பால் வீடு வீடாய்ச் சென்று விலையாகும்.உடலைக் கெடுக்கும் இழிவான கள் தானிருக்கும் குடிசையிலேயே விலையாகும். இதனால் பாலுக்குத் தாழ்வும், கள்ளுக்கு உயர்வும் வந்து விடாது. அதுபோலவே எல்லோரையும் தெளிவிக்கும் உயர்வான உண்மை கயவர்களுக்கு வெறுப்பைத் தரும். எல்லோரையும் மயக்குகின்ற பொய்யானது அக் கீழ் மக்கட்கு விருப்பமாகும். இதனால் மெய்க்கு தாழ்வும், பொய்க்கு உயர்வும் உண்டாக மாட்டா.

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும் _மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்


பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய் பேசுதலில் பண்புடைமை நீங்காமையும் பெற்று புறங்கூறாமையை தன் கண் நிகழாமல் காப்பவன் பிறவிப் பிணி நீக்கும் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

பொய்வழங்கி வாழும் பொறியறையும்
-திரிகடுகம் _ நல்லாதனார்.

பொய்ச் சொற்களைப் பேசி அதனால் உயிர் வாழ்கின்ற திருவில்லாதவன் நட்பு கொள்ளத் தகுதியற்றவனாவான்.

"பொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது" - என்பார்கள்.

"பொய் சாட்சி சொல்லும் பதர் "
- குமரேச சதகம் _ குருபாததாசர்.

நடவாததை நடந்ததாகக் கட்டுரைத்துப் பொய் சாட்சி சொல்பவன் பதரேயாவான்.

பொய் பேசாதிருப்பதே புகழைத் தரும்.
உண்மை பேசுதல் அவனுக்கு எல்லா அறங்களையும் அவனறியாமலே கொடுக்கும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...