பால் - பொருட்பால்
இயல்-அரசியல்
அதிகாரம் - 49 - காலம் அறிதல்
குறள் - 482.
பருவத்தோடு ஒட்டஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
விளக்கம் :- தக்க காலம் அறிந்து, காலத்தோடு பொருந்த எந்த செயலையும் செய்வதே செல்வத்தை தன்னிடத்திலிருந்து நீங்காமல் இறுகக் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.
எந்த செயலைத் திறம்படச் செய்து முடிக்க வேண்டுமென்றாலும் அதற்கேற்ற காலம் அமைய வேண்டும்.
வலி அறிந்து, காலமறிந்து, இடமறிந்து , தெரிந்து தெளிந்து வினையாடல் வேண்டும். அதனால்தான் இந்த அதிகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ளது.
காலம் வாய்த்த போதே கடமையைச் செய்து முடிக்க வேண்டும் என்பதைத்தான்
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்று பிறிது மொழிதலாக உணர்த்தியுள்ளனர்.
"காலம் பொன் போன்றது "
- அதைக் கவனமாய்ப் பயன்படுத்த வேண்டும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
பருவத்தே பயிர் செய்.
- ஆத்திசூடி - ஒளவையார்,
எந்த செயலும் அதற்குரிய காலத்தில் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறார் ஒளவையார்.
அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி
எடுத்த கருமங்க ளாகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா.
- மூதுரை - ஒளவையார்.
உருவத்தால் நீண்ட, கிளைத்த உயர்ந்த மரங்களெல்லாம் பழுக்குங்காலம் வந்தாலல்லாமல் பழுக்கமாட்டா. அதுபோல அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், முடிய வேண்டிய கால நேரம் வராமல் அச்செயல் முடியாவாம்.
எந்த காரியமும் முடியும் காலத்திலேதான் முடியும். எனவே ஏற்ற காலமறிந்து செயலைத் தொடங்க வேண்டும்.
காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலமறிந்து விளை வறிந்து _ மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
ஒரு செயலைச் செய்வதற்குரிய காலமறிந்து, ஏற்ற இடமறிந்து, செய்யும் வினையின் காரணத்தை அறிந்து அதனால் ஏற்படும் பயனை ஆராய்ந்து துணை வலிமையையும் தெரிந்து முயற்சி செய்யப்பட வேண்டும்.
ஒரு செயல் செய்யும் வகையைத் தெளிவாகத் தெரிந்து தக்க காலத்தில் செய்தால் முடியாதது என்று எதுவும் இல்லை.
அவ்வாறு செய்யும் செயல் நமக்கு நன்மையையும் விளைக்கும். நம் பொருளும் கைவிட்டுப் போகாமல் காக்கும் .
" முயன்றால் முடியாததும் உளவோ?"
"Is there anything impossible
if it be done with proper means and in season?"
காலம் அறிந்து
காரியம் ஆற்றினால்
செல்வம் பெருகிக் கொட்டும்
ஞாலம் கருதினும் கிட்டும்!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment