Wednesday, March 6, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 1031














பால் - பொருட்பால்
இயல்-குடியியல்
அதிகாரம் - 104. உழவு
குறள் - 1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.


விளக்கம் :- பல தொழில்களையும் செய்து சுழல்கின்ற உலகம் முடிவில் ஏர்த்தொழிலின் பின் தான் நிற்கின்றது. அதனால் எவ்வளவு வருந்தினாலும் உழவுத் தொழிலே உலகில் தலையாய தொழிலாகும்.

உழவுத் தொழில் உயர்வான தொழில்.உலக மக்களனைவரும் உண்டு உயிர் வாழ உதவும் உன்னத தொழில்.உழவுத் தொழிலும், உழவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

இன்றைய உழவர்களின் நிலைமை நெஞ்சுருகும் நிலையில் தான் உள்ளது. இன்று வறுமையின் எல்லையைக் காண வேண்டுமானால், கடன் சுமையின் தொல்லையைக் காண வேண்டுமானால், இன்னல்களின் இருப்பைக் காண வேண்டுமானால், ஏய்ப்பும், ஏமாற்றமும் பயக்கும் நிலையைக் காண வேண்டுமானால், சுரண்டுவோரின் திறமை செல்லும் இடத்தைக் காண வேண்டுமானால், புறக்கணிப்பின் பொல்லாங்கைக் காண வேண்டுமானால் உழவர்களின் வாழ்வையே காண வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் வழிவழியாக முன்னேறாமல் கந்தலாடையும், பொத்தல் குடிசையும், கால் வயிற்றுக் கஞ்சியுமாக அல்லல்படுகிறார்கள் விவசாயப் பெருமக்கள், உலகிற்கே படியளக்கும் உயர்ந்தவர்கள், உயிர்த்தியாகம் செய்கின்ற நிலைக்கு வந்துவிட்டது மிக மிக வேதனைக்குரியது.

நமது வாழ்வாதாரமே உழவர் பெருமக்கள் தான்.
உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் உலக மக்கள் சோற்றில் கை வைக்க முடியும். உழுது பாடுபடும் உழவர்களும், உழவுத் தொழிலும் போற்றப்பட வேண்டும். உழவுக்கும், உழவர்களுக்கும் உன்னத இடம் அளிக்கப்பட வேண்டும். தவறினால் நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம், 
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பது நம் ஐயனின் திருவாக்கு.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

நெற்பயிர் விளை
பூமி திருத்தியுண்.

_ ஆத்திசூடி _ ஒளவையார்.

நெற்பயிரை விளையச் செய்.

விளை நிலத்தை சீர்திருத்தி பயிர் செய்து உண்ணு.

தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

ஒருவரை கைகட்டி சேவித்து உண்ணும் உணவை விட உழுது பயிர் செய்து உண்ணும் உணவு இன்பம் தருவதாகும்.

உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல் .

வித்து மேரு முளவா யிருப்ப
எய்த்தங் கிருக்கு மேழையும் பதரே.

- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

உழவர்கட்கு அழகாவது உழுது விளைவித்து உண்டு வாழ்தலாகும்.

விதையும் , ஏரும் இருந்தும் உழுது பயிரிடாமல் சோம்பியிருக்கும் வேளாளன் பதரேயாவான்.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே _ ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு .

- நல்வழி - ஒளவையார்.

ஆற்றங்கரையிலுள்ள பெரிய மரமும், அரசன் அறிய பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் அழிந்து விடக் கூடியதே. உழுதுண்டு வாழும் வாழ்க்கையே பழுதில்லாதது ஆகும்.

நன்புலத் துவையடக்கி நாளுமாடோ போற்றிப்
புன்கலத்தைச் செய்தெரும் போற்றியபின் - இன்புலத்தின்
புன்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன்
நுண்கலப்பை நூலோது வார்.

- சிறுபஞ்ச மூலம் _ காரியாசான் .

வைக்கோலைச் சேர்த்து, அதனால் உழவெருதுகளைப் போற்றி, புன்செய்யை எருவிட்டு, நன்செய்யாகத் திருத்தி பண்படுத்தி உழுபவனே உழவுத் தொழிலில் சிறந்தவனாவான்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"
-மகாகவி பாரதியார்.

ஒப்பிலா உயர்ந்த உன்னதத் தொழிலான உழவுத் தொழிலையும், உழவர்களையும் போற்றுவோம். செயற்கை உணவுகளைத் தவிர்த்து உழவர்கள் விளைவித்துத் தரும் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாய், ஆனந்தமாய் உழவர்களை ஆதரித்து வாழ்வோம்.

உழவையும், உழவர்களையும் போற்றுவோம்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...