பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 15-பிறனில் விழையாமை.
குறள் - 142.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
விளக்கம் :- அறத்தின் எல்லையைத் தாண்டி பாவ வழியில் செல்லும் கயவர் பலருள்ளும் பிறன்மனைவியை விரும்பி அவர் கடைவாயிலில் நிற்பாரைப் போல அறிவிலி யாரும் இல்லை.
அறத்தின் அடிப்படை எது?
பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழும் நல்லியல்பே ஆகும். பிறருடைய உரிமையில் தலையிடுதலும் பிறருக்குத் தீங்கு செய்தலே ஆகும். அதனால் பிறன்மனைவியை விரும்பாமை அறவோரின் கடமை ஆகின்றது.
அறநெறி பிறழ்ந்து வாழ்வோர் பலவகைப்படுவர். அவர்களுள் பிறன்மனைவியை இச்சித்து பிறன் வாயிலில் நிற்பவர்களே கீழ்ப்பட்டவர்கள். அவர்களைப் போல் பேதைகள் எவரும் இல்லை.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
மெல்லினல்லாள் தோள்சேர்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியோடு சேர்ந்து வாழு.
பிறன்மனை புகாமை யறமெனத் தகும்.
_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.
பிறன் மனைவியை விரும்பாதிருத்தலே சிறந்த அறம் என்று சொல்லத்தக்கதாகும்.
தன்மனையாளைத் தனிமனை யிருத்திப்
பிறன்மனைக் கேகும் பேதையும் பதரே.
- நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்
தன் மனைவியை வீட்டில் தனியே வருத்தமுறச் செய்து பிறன்மனைவியை விரும்பி, பிறன்மனை செல்லும் அறிவிலி பதரேயாவான்.
பெண் விழைவார்க்கில்லை பெருந் தூய்மை
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
பிற மகளிரை இச்சிப்போரிடத்து உளத்தூய்மை இல்லை.
பிறன்மனை பின்னோக்கா பீடினிது.
_இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.
பிறன்மனைவியைத் திரும்பிப் பார்க்காத பெருமைக்குரிய குணம் இனிமை தருவதாகும்.
பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா .
- இன்னா நாற்பது - கபிலர்
பிறன்மனைவியை விரும்பிப் பார்க்கும் அறிவின்மை துன்பம் தருவதாகும்.
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
- நல்வழி - ஒளவையார்.
நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் தாம் அழிவை அடையும் காலத்திலே, கொண்ட கருக்களை ஈனும் தன்மை போல, ஞானமும், செல்வமும், கல்வியும் அழிய வரும் காலத்திலே பிறன்மனைவி மேல் ஆசை வைப்பார்கள்.
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தம் என்றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்த மிலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறியாதவர் காலற்ற வாறே.
- திருமந்திரம் - திருமூலர்.
அன்புக்குரிய மனைவி வீட்டில் இருக்க அவளை விட்டு விட்டு, பிறன்மனைவியை நினைக்கும் அறமற்ற செயல் எதுபோல் என்றால், வீட்டுத் தோட்டத்தில் காய்த்து முதிர்ந்த பலாவை சுவைக்க விரும்பாமல் ஈச்சம் பழத்தை பறிக்கப் போய் முள்ளால் குத்தப்பட்டு துன்புற்ற அறிவற்ற செயலை ஒக்கும்.
மயிலுடைச் சாயலளாம் சீதையை
எயிலுடை இலங்கை நாதன்
இதயமாம் சிறையில் வைத்தான்.
- கம்பராமாயணம் .
இராமகாதை உணர்த்தும் முதல் நீதியே,
பிறன்வரையாள் பெண்மை நயவாமை வேண்டும் - என்பதே.
இராவணேசுவரன் என்ற பெயரோடு சதுரங்கப் படையோடு இலங்கையை ஆண்டு வந்த இராவணனின் இழிவுக்கும், அழிவுக்கும் காரணம் பிறன்மனைவியை இச்சித்த இழி செயல் தானே!
சொற்றேன் முந்துற அன்னசொல் கொளாய்
அற்றான் அன்னது செய்கலான் என
உற்றாய் உம்பியை ஊழி காணுநீ
இற்றாய் யானுனை என்று காண்கெனோ?
- கம்பராமாயணம் _ தாரை புலம்புறுபடலம்.
யுக முடிவு காலம் வரை வாழ வேண்டிய நீ அடாதது செய்து அழிந்தாயே என்று வாலிக்காக அழுது புலம்புகின்றாள் அவன் மனைவி தாரை .
குரக்கரசன் வாலியின் அழிவுக்கும் காரணம் பிறன்மனை விழைந்ததுதான்.
பிறன்மனைவியை காமத்தோடு நோக்காமல் இருப்பதே ஒரு நல்ல ஆண்மகனுக்குரிய பேராண்மையாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே உயர்ந்த நெறியாகும்.
கற்புநிலை என்று சொல்ல வந்தாலிரு
கட்சிக்கு மதனைப் பொதுவில் வைப்போம் !
- மகாகவி பாரதியார்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment