பால் - இன்பத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்.
குறள் - 1084.
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
விளக்கம் :- பெண்மை நலனும், பேதைமையும் உடைய இப் பெண்ணின் கண்கள், கண்டவரின் உயிரை உண்ணுவதற்குப் பொருத்தமான தோற்றத்துடன் அமைந்துள்ளன.
ஒத்த உருவும், திருவும், பருவமும், பண்புமுடைய ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கண்டு மயங்குகின்றனர். அவளின் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணக்கூடிய தன்மை பெற்றிருக்கின்றன என்கின்றான் தலைவன்.
கண்நோக்கும் நோக்கில்தான் காதல் புலனாகும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
கண்ணிரண்டும் ஆளைவிழுங்கும்
அதிசயத்தைக் கூறுவனோ?
மீளவிழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லிலகப் படுமோ?
- குயில்பாட்டு - பாரதியார்.
கண்கள் ஆளை விழுங்கக் கூடியதாக இருக்கிறது என்றும், கண் பேசும் கவிதைகள் சொல்லில் அகப்படுமோ என்றும் பாரதி தன் குயில் பாட்டில் கூறுகின்றார்.
காதலில் கண்களுக்குத் தானே முதலிடம், சிறப்பிடம் எல்லாமே .
காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பார்வையால்.
_ பாரதியார்.
" நிலவூறித் ததும்பும் விழிகளும் "
- நிலவு ஊறித் ததும்பும் விழிகள் என்று தனது கண்ணம்மா பாட்டில் சொல்கிறார்.
அஞ்சியே கயல் கெடக்கூடலிற் பொருதுசென்(று)
அணிநடைக் குழையிலே விழ அடர்த்(து) எறிதலால்
வஞ்சி மானதன் விடும் படையினில்
கொடிய கண்மட நலீர்.
- கலிங்கத்துப்பரணி -சயங்கொண்டார்.
மெல்லியலாரின் கடைக்கண்கள் தலைவனோடு கூடுங்காலத்தில் கெண்டை மீன்கள் பயந்து தோற்று ஓடுவது போல ஒன்றோடு ஒன்று பிறழ்ந்து போரிட்டு வெல்லும். அழகிய காதணிகளில் அவை மோதி விழும்படி ஒளி வீசும். அவ்விழிகள் வஞ்சிப்பூ மாலையணிந்த குலோத்துங்கன் ஏவிய வேற்படையை ஒத்திருந்தது.
அறுமுக ஒருவன் ஓர் பெருமுறை இன்றியும்
இருமுறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடுவேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக்கண் இரண்டா ஈத்தது!
- சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.
ஆறுமுகங்களையுடைய முருகப்பெருமான், என்னுடன் போரிடப் பெறுவதற்கு ஒரு முறைமை இல்லை என்ற போதிலும், யான் நெஞ்சழிந்து போகும் நிலையினைக் காணும் இயல்பினால் அல்லவோ, தன் அழகிய சுடரையுடைய நெடியவேல் ஒன்றையே நின் முகத்துச் சிவந்த கடையினையுடைய குளிர்ச்சி பொருந்திய இரண்டு கண்களாகத் தந்திருக்கின்றனன் என்று கண்ணகியின் நலம் பாராட்டுகின்றான் கோவலன்.
தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேல் கால்வளைத்து வார்புருவ மென்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து.
- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.
நளனுக்கும் தமயந்திக்கும் நேர்ந்த ஊடலில் நளனை விட்டுத் தனியாகப் பக்கத்திலிருந்த தமயந்தியின் முகம் என்னும் நடன அரங்கில் அழகிய விழிகள் என்னும் கூர்மை பொருந்திய வாளின்மீது நெடிய புருவங்கள் என்னும் நடனப்பெண்கள், தங்கள் நுனியாகிய கால்களை வளைத்துச் சிறந்த நடனம் ஆடுவதை நளன் கண்டான்.
தலைவனை வருத்தும் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணக்கூடிய தன்மை பெற்றவை. எதிரே நின்று என்னை நோக்குவது வருத்தத்தை வளர்க்கிறது. அந்த வருத்தம் உயிருண்ணும் கூற்றுவன் செயல் போல் உள்ளது.
நஞ்சு கூடத்
தின்றால் தான்
உயிரைத் தின்னும்.
வஞ்சியின் பார்வையோ
கண்டார் உயிருண்ணும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment