Thursday, March 7, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 1005














பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 101 - நன்றியில் செல்வம்.
குறள் - 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.


விளக்கம் :-பிறருக்குக் கொடுத்தலும், தாம் உண்டு நுகர்ந்து மகிழ்தலும் இல்லாதவருக்கு, பல கோடிப்பொருள் உண்டானாலும் ஒரு பயனும் இல்லை.

வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியவைகளையே மக்கள் தேடிச் சேர்க்கத் தொடங்கினார்கள். அப்படிச் சேர்த்து வைத்தவைகளுக்கே பொருள் என்றும், செல்வம் என்றும் பெயர் கொடுத்து வழங்கினார்கள். அவ்வாறு செல்வத்தைச் சேர்த்தவர்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகும் என்று கூறி, அத்தகைய செல்வத்தை நன்றியில் செல்வம் (நன்மையற்ற செல்வம்) என்று கடிகின்றார் நம் ஐயன் .பயன்படுத்தாத செல்வம் உடையவர்களையே உலோபிகள் என்றும் கடிந்துரைக்கின்றார்.

பொருளால் அடையத்தக்க பயன் என்ன ?
பிறருக்குக் கொடுத்து அன்பைப் பெறலாம். தான் அனுபவித்து இன்பத்தைப் பெறலாம். இந்த இரண்டும் பெற முடியாதபோது பொருள் இருந்தும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஆகையால் பிறருக்குக் கொடுப்பதும், தான் அனுபவிப்பதும் ஆகிய இரண்டும் இல்லாதவர்களுக்குப் பல கோடிப்பொருள் இருந்தாலும் பயன் இல்லை.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


தானமது விரும்பு.
- ஆத்திசூடி - ஒளவையார்.

மற்றவர்களுக்குக் கொடுப்பதை மனமுவந்து விரும்பி செய்.

தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்.
தருமத்தை யொருநாளும் மறக்கவேண்டாம்.

- உலகநீதி - உலகநாதர்.

பொருளை வருந்தித் தேடி அனுபவிக்காமல் புதைத்து வைக்காதே.
தருமம் செய்வதை ஒருபொழுதும் மறக்காதே.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
- நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.

பொருள் படைத்தவர்களுக்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற போது அவர்களுக்கு உதவி, அவர்களைத் தாங்குதலாகும்.

பூததயை இல்லாத லோபியரிடத்திலே
பொருளை யருளிச் செய்தனை!

_ அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர்.

கருணையும், தயாள குணமும் இல்லாத உலோபியரிடத்திலே பொருளை நிறைய படைத்துள்ளதை நிந்திக்கிறார்.

பாடுபட்டுத் தேடிப்பணத்தை புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் !

- நல்வழி - ஒளவையார்.

பணத்தினை வருந்திச் சேர்த்து, அதனைத் தானும் உண்ணாமல், மற்றவர்களுக்கும் கொடுக்காமல் புதைத்து வைத்து, நன்மைகளை இழந்த மனிதர்களே! கேளுங்கள். உடலை விட்டு உயிர் பிரிந்த பின்பு அந்தப் பணத்தை யார்தான் அநுபவிப்பார்? இருக்கும் போதே நீங்களும் நுகருங்கள். மற்றவர்களுக்கும் ஈந்து மகிழுங்கள்.

ஒன்றாக நல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல் என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து.

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

அறங்களுள் சிறந்தது பிற உயிர்களைப் பாதுகாத்தலும், மற்றவர்களுக்குக் கொடுத்து உண்ணுதலுமாகும். இவ்விரு அரிய செயல்களைச் செய்து புகழ் பெற்றவனை மேலுலகம் வருகவென்று வாயில் திறந்து வரவேற்கும்.

பெருக்கமொடு சுருக்கம் பெற்றபொருட் கேற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர்.

- நன்னெறி – சிவப்பிரகாசர்.

உதவும் குணம் கொண்ட பெரியோர்கள் வளர்தலையும், குறைதலையும் பொருந்திய செல்வத்தை விருப்பத்துடன் அன்போடு கொடுத்து மகிழ்வர்.
ஒன்றும் கொடாது இருக்க மாட்டார்கள்.

பொருள் படைத்தவர்கள் தானும் துய்க்க வேண்டும். மற்றவர்களுக்கும் மனமுவந்து கொடுத்து மகிழ வேண்டும்.உலோபியாக வாழ்ந்தால் கோடி கோடியாகப் பொருள் கொட்டிக் கிடந்தாலும் ஒரு பயனும் இல்லை.



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...