Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 728




பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 73 - அவை அஞ்சாமை 
குறள் - 728 

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.


விளக்கம் :- கற்றறிந்த சான்றோர்கள் கூடியிருக்கும் அவையில் தான் கற்றுணர்ந்தவற்றை பிறர் மனங்கொள்ளுமாறு எடுத்ததுரைக்க மாட்டாதவர்கள் நூல் பல கற்றறிந்தும் பயனில்லாதவர்களே ஆவர்.

கற்றோர் நிறைந்திருக்கும் மன்றத்திலும், மற்ற கூட்டங்களிலும் அச்சப்படாமல் பேசுவது ஒரு தனித்திறமையாகும். போர்க்களத்தில் அஞ்சாது போர் புரியும் திறமையை விட அவைக்களத்தில் அஞ்சாமல் பேசும் திறமை மிகவும் சிறந்தது.

நன்மை தரக்கூடிய ஒரு பொருளை எடுத்துச் சொல்வதானால் கேட்பவர் ஆர்வத்தோடு கேட்கும்படி, அவரது மனதில் பதியும்படி சொல்ல வேண்டும். அவ்வாறு அழகுற எடுத்துரைக்கும் ஆற்றலின்றி அவைக்கு அஞ்சுபவர் பல நூல்கள் கற்றிருந்தாலும் ஒரு பயனும் இல்லை.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் _சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.

- மூதுரை - ஒளவையார்.

கிளைகளும், கொம்புகளும் உடையனவாகி காட்டினுள்ளே தழைத்து நிற்கின்ற மரங்கள் நல்ல மரங்களாகா. கற்றோர் நிறைந்த சபைக்கு அஞ்சி வாசிக்க மாட்டாமல் நின்றவனும், குறிப்பறியமாட்டாதவனும் நல்ல மரங்களாம்.

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் _ நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

கற்றோர் அவைக்கு அஞ்சி உடல் நடுங்குவோருடைய கல்வியறிவும், கல்வியறிவில்லாதவரின் அவைக்கு அஞ்சாத ஆரவாரச் சொற்களும், கொடுத்துண்ணாதார் செல்வமும் , வறியவர்களுடைய ஈகை முதலான இனிய தன்மைகளும் தோன்றாதிருத்தலே ஒன்று.
கற்றோர் அவைக்கு அஞ்சும் கல்வி பயன்படாது.

கண்ணுக் கினிய சபைக்குமணி கற்றோனே.
விண்ணுக் கினியமணி வெய்யோனே.

- நீதிவெண்பா

வானிற்கு நல்ல மணி கதிரவனே. அதுபோல கண்ணுக்கினிய கற்றறிந்தார் அவைக்கு சிறந்த மணி போன்றவன் கற்றறிந்து அவைநடுவே சொல்லவல்லவனே.

தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும்
திரிகடுகம்-நல்லாதனார்.

பல்வகை நூலோரும் கூடியிருக்கும் நல்ல அவையிடத்தே எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துகளால் தாமாகவே பெருமை விளங்கும்.

புத்தகமே சாலத் தொகுத்தும் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறேபொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

_ நாலடியார் -சமண முனிவர்கள்.

நூல்களையே மிகச் சேர்த்தும் அவற்றின் பொருளை உணராதவர், அவற்றைக் கொண்டு வீடு முழுவதும் நிறைத்தாலும் , அந்நூல்களைப் பாதுகாக்கும் புலவர்களும் வேறே. அவற்றின் பொருளை ஆராய்ந்தறிந்து பிறர்க்கு அறிவுறுத்துகின்ற புலவரும் வேறேயாவர்.

கற்றறிந்தார் அவையில் மனங்கொள்ளுமாறு சொல்ல மாட்டாதவர் எவ்வளவு நூல்களைக் கற்றிருந்தாலும் பயனிலரேயாவர்.

ஆயிரம் கற்றறிந்தும்
அவையில் எடுத்து
அழகுறச் சொல்லாதார்
அறிவினால் ஆவதுண்டோ?
நாறா மலரென்று
நம்ஐயனே வைதிட்டார்
நல்லவற்றை நலமாய்
நல்லவையுள் எடுத்துரைத்து
நறுமண மலராவீர்!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

1 comment:

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...