Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 226




பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 23 ஈகை 
குறள் - 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.


விளக்கம் :- வறியவரின் கடும்பசியைத் தீர்த்தலே சிறந்த அறமாகும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை பிற்காலத்தில் தனக்குப் பயன்படுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

ஈவதில் ஒரு தனி இன்பம் உண்டு. அன்புடை நெஞ்சம் கொண்டவரால் பிறருடைய வறுமைத் துன்பத்தைக் கண்டு வாளா இருக்க முடியாது. வெறும் பேச்சும் எண்ணமும் பிறர் துன்பத்தை தீர்க்காது. தம்மால் ஆன உதவியைச் செய்து வறுமைத் துயரைத் துடைப்பதே ஈந்து மகிழ்வோரின் முதற்கடமையாகும். 

பொருள் உடையவருக்கு பெருமைக்காக தரப்படுவது ஈகையன்று. இல்லாத வறியவருக்குக் கொடுத்து அவரின் இன்பம் கண்டு மகிழ்வதே ஈகையாகும். அதுவே பின்பு தனக்கு வேண்டி தம் பொருளை சேர்த்து வைக்கும் இடமாகும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

அறம் செய விரும்பு
தானமது விரும்பு
ஈவது விலக்கேல்

- ஆத்திசூடி - ஒளவையார்.

ஈந்து மகிழ வேண்டும் என்பதை உணர்த்தும் ஒளவையின் அமுத மொழிகள் இவை.

ஈ.யார் தேட்டைத் தீயார் கொள்வர்._ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

வறியவர்கட்குக் கொடாத உலோபிகளின் பொருளை தீயோர் அபகரித்துச் செல்வர்.

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்.

தருமம் செய்வதை எப்பொழுதும் மறக்காதே..

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
- நல்வழி _ ஒளவையார்.

இவ்வுலகில் வறியவர்களுக்கு ஈந்து மகிழ்பவர் உயர்ந்த குலம்.
கொடாத உலோபிகள் இழிகுலத்தார் ஆவார்.

என்று முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்றுபொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் ! பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

அழகிய கையானது தன்னைப் புகழ்தல் கருதியோ நாவினுக்குச் சுவைமிகுந்த உணவை ஊட்டுகிறது? அதுபோல ஈகைக் குணம் கொண்ட பெரியோர்கள் தமக்கு உபச்சார வார்த்தைகள் சொல்லாதவரிடத்தும் தாமே வலியச் சென்று உதவுவார்கள்.

வாங்குங் கவளத்து ஒருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா _ ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று.

_ நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

யானை சாப்பிடும் போது வாயினின்று தவறிய சிறிதளவு உணவுக்காக அது கவலை கொள்ளாது. ஆனால் சிந்திய உணவை ஒரு கோடி எறும்புகள் உண்டு உயிர் வாழும். அதுபோல பெருஞ்செல்வமுடையவர் தன் செல்வத்தில ஒரு பகுதியை வறியவர்கட்கு ஈந்து மகிழ்ந்தால் அதனால் எத்தனையோ உயிர்கள் பிழைக்கும் .

பயன்நோக்காது ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப
கூலிக்குச் செய்துண்ணு மாறு.

- பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

அலைகள் ஆரவாரத்துடன் பாய்ந்து வருகின்ற குளிர்ந்த கரைகளையுடைய தலைவனே, பகுத்தறிவு ஒன்றும் இல்லாமல் புகழ் ஒன்றையே கருத்தாகக் கொண்டு ஈகின்றவர்களின் கொடையானது கூலிக்கு வேலை செய்து உண்ணுவது போலாகும்.

இறப்ப சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க -முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.

- நாலடியார் -சமண முனிவர்கள்.

ஒருவன் தமக்குள்ள பொருள் சிறியது என்று எண்ணாமலும், வறியவர்க்கு இல்லையென்று சொல்லாமலும் அறமாகிய பயனை எப்பொழுதும் ஏற்போர் எல்லோரிடத்தும் செய்து வர வேண்டும். அப்படிச் செய்து வந்தால், முறையாக வீடுகளின் வாயிலில் பிச்சைக்கு நுழைகின்ற சந்நியாசிகளின் பிச்சைப் பாத்திரத்தைப் போல, மெல்ல மெல்ல அறத்தின் பயனைப் பூரணமாக்கும்.

உண்டி கொடுத்து
உறுபொருள் கொடுத்து
வறியோர் தம்
பசிப்பிணி போக்கு _ உனை
வாயார வாழ்த்தும்
அவர்தம் வாக்கு
வழங்கிடும் உனக்கு
சகல செல்வாக்கு!




வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...