பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 39 - இறைமாட்சி.
குறள் - 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
விளக்கம் :- அறநூல்களும், நீதி நூல்களும் சொல்லும் நெறிப்படி முறை செய்து மக்களைப் பாதுகாத்து வரும் அரசன் மக்களுக்கெல்லாம் இறைவன் என்று சிறப்பாக மதிக்கப்படுவான்.
இப்போது மன்னராட்சி இல்லை. நாம் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தலைமைகள், அதிகாரப் பொறுப்பில் உள்ள தலைமைகள், நிறுவனப் பொறுப்பில் உள்ள தலைமைகள் என பொதுவாகவே எடுத்துக் கொள்ளலாம்.
பொது வாழ்வின் நன்மையைக் கருதி , தவறு செய்பவர்களைத் தண்டித்தல் தலைவனின் கடமை. ஆனால் அவனே தன் கடமைகளையும், பொறுப்பையும் மறந்து தனது அதிகாரத்தையும், ஆற்றலையும் நீதியற்ற, முறையற்ற வழியில் செலுத்தி நிர்வகித்தால் அது கொடுங்கோல் ஆட்சியே ஆகும்.
மக்களை வருத்தப்பட வைக்காமல் முறையாக நீதி தவறாமல் நல்லாட்சி நடத்துபவனே இறைவனுக்கு சமமானவன் ஆவான்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவன் கல்வி கேள்விகளில் மட்டுமன்றி பண்பிலும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்.
சர்வாதிகாரம் செய்பவனாக அல்லாமல் சாந்தகுணம் உடையவனாக இருக்க வேண்டும்.
வருத்தி எடுப்பவனாக இல்லாமல் அனைவரும் வாயார வாழ்த்தும்படி நடப்பவனாக இருத்தல் வேண்டும்.
ஈகை, கருணை, எளிமை, நீதி தவறாமை, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவனாக இருத்தல் வேண்டும்.
தலைவன் என்ற ஆணவத்தையும், அதிகாரத்தையும் மறந்து கடை நிலை ஊழியனையும் காப்பவனாக இருக்க வேண்டும்.
கொற்றவனறிதல் உற்றிடத் துதவி.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
அரசனானவன் அறிதல் ஒருவனுக்கு உரிய நேரத்தில் உதவி செய்தல் ஆகும்.
வணங்கி வழியொழுகி மாண்டார் சொற்கொண்டு
நுணங்கிய நூனோக்கி நுழையா - விணங்கிய
பானோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூனோக்கி வாழ்வான் நுனித்து.
- ஏலாதி - கணிமேதையார்
பிறர்க்குப் பணிந்து வணங்கி நடக்கக்கூடியவனாய், போற்றத்தக்க செந்நெறியிலே நடந்து, சான்றோர்களின் அறிவுரைகளை மேற்கொண்டு, மதிநுட்பமும் அறிவும் ஒழுக்கமும் உடைய நூல்களை ஆராய்ந்து, அந் நூல்களில் கூறியபடி வாழ்பவன் பழியற்ற தலைவனாய் பெருவாழ்வு வாழ்வான்.
வையம் இன்புறின் மன்னன் இன்புறும்
வெய்யது ஒன்றிறின் தானும் வெய்துறும் .
- சூளாமணி - தோலாமொழித் தேவர்.
தன் குடிமக்கள் மகிழ்ந்தால் தலைவன் தானும் மகிழ்வான். மக்கள் துயருற்றால் மன்னனும் துயருறுவான்.
கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே.
நீதியற்ற கொடுங்கோலன் வாழ்கின்ற நாட்டைக் காட்டிலும், கொடிய புலி வாழ்கின்ற காடே நல்லது.
குடியலைத் திரந்து வெங்கோலொடு நின்ற
முடியுடை யிறைவனா மூர்க்கனும் பதரே.
- நறுந்தொகை .
குடிகளை வருத்திப் பொருள் வாங்கும் தீய கொடுங்கோலரசன் பதரேயாவான்.
பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.
- பாஞ்சாலி சபதம் - பாரதியார்.
இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப_ இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
நீர் செல்லும் வழியே செல்லும் தெப்பம் .அதுபோல அரசனது ஆணை வழியே குடிகள் ஒழுகுவர்.
குடி படையில பிமானம்
மந்திரா லோசனை
குறிப்பறிதல் சத்ய வசனம்
கொடைநித்தம் அவரவர்க்கேற்ற மரியாதை ...
- குமரேச சதகம் -குருபாததாசர்.
குடிமக்கள் மீது அபிமானம் உள்ளவனாகவும், மதிநுட்பமுள்ளவனாகவும், குறிப்பறிந்து நடக்கவல்லவனாகவும், உண்மையே பேசுபவனாகவும், கொடையுள்ளம் கொண்டவனாகவும், அவரவர் திறமைக்கும், தகுதிக்கும் மதிப்பளிப்பவனாகவும் இருக்க வேண்டும்.
ஆளும் தலைவனுக்குரிய இயல்புகள் பல. அறநெறி தவறாது ஒழுக வேண்டும். தீநெறிகளை அறவே விலக்க வேண்டும். ஆளும் தலைவன் வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.
எல்லோரும் தன்னையே துதிபாட வேண்டும் என்று எண்ணுபவனாக இருத்தல் கூடாது. இட்டதே சட்டம் என்று இறுமாந்திருப்பவனாக இருத்தல் கூடாது. எளிமையும், இன்சொல்லும் கொண்டு அன்பு வழியிலும், அறவழியிலும் நடப்பவனாக இருத்தல் வேண்டும்.
தன்னைக் குறை கூறினால் பொறுத்து தன் மக்களையும், நாட்டையும் குறை கூறினால் புறக்கணிக்காத மானம் உடையவனாயிருத்தல் வேண்டும்.
அப்படிப்பட்ட தலைவனே கண்கண்ட கடவுள்.
அல்லல்பட வைக்காத
அறநெறி தவறாத
ஆட்சியாளர்களைத் தான்
அகிலமே எதிர்பார்க்கிறது அன்றும் இன்றும் என்றும்!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment