பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 98 - பெருமை
குறள் - 980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
விளக்கம் :- பெருமை மிக்க குணமானது பிறருடைய குறைகளை மறைக்கும்.சிறுமைப் பண்பு பிறருடைய குணத்தை மறைத்து குற்றத்தையே பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
பிறப்பால் பெருமை சிறுமை இல்லை. செய்கின்ற தொழில்களிலும் பெருமை சிறுமை என்பதில்லை.
வசதி வாய்ப்புகளை வைத்தும் பெருமை அளந்தறியப்படுவதில்லை.
பெருமைக்குரிய நல்லியல்புகளான அன்பு, கருணை, ஈகை, விட்டுக் கொடுத்தல் , பணிவு, பொறுமை, முதலான பெருந்தன்மையான குணங்கள் வாய்த்தவரே பெருமைக்குணம் உடையவர் ஆவார்.அத்தகு சான்றோர்கள் மற்றவர்களின் நன்மையைப் பாராட்டி குற்றங் குறைகளை மறைப்பார்கள்.
இந்த நற்குணங்கள் எதுவுமே இல்லாத சிறுமதி படைத்தவர்கள் மற்றவர்களின் நன்மைகளை திரையிட்டு மறைத்து சிறு குறைகளைக் கூட பெரிதாக்கி பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
- நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.
உருவத்தால் பெரியவர் எல்லோரும் பெருமை உடையவர் ஆகார் . உருவத்தால் சிறியவர் எல்லோரும் சிறுமையுடையவர் ஆகார் .
அறிவிலும், அருள் குணத்திலும் பெரியவரே பெருமைக்குரியவர் ஆவர்.
பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் .
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
சிறுமைக்குணம் கொண்ட கீழ் மக்களிடத்தில் சிறந்த ஒழுக்கம் காணப்படுவதில்லை.
பீடு பெற நில்.
- ஆத்திசூடி -
பெருமை தரும் படியான நல்ல வழியிலே நடப்பாயாக.
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்மகட்கு
கல்லினும் வல்லெனும் நெஞ்சு.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
எவ்வளவு தான் நன்வழிகளைக் கேட்டாலும் கீழ்மக்கள் நெஞ்சில் நல்லறங்கள் புகாது. அவர்களின் மனம் கல்லை விட வலியதாகவே இருக்கும்.
சிறுமை தன்னை வானளாவ புகழ்ந்து கொள்ளும். தன் துதிபாடும். தன் குற்றங்களை மறைத்து அயலாரின் சிறுகுறைகளைக் கூட ஊதிப் பெரிதாக்கி பலர் முன் அவமானப்படுத்தும்.
ஆனால் பெருமைக்குணம் பெரிய தவறுகளையும் மன்னித்து, மற்றவர் அறியாமல் மறைக்கும்.
பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர் பிறர்
சீரெல்லாந் தூற்றி சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.
_ நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
மற்றவர் தம்மை மதிப்பதற்கான நன்மதிப்பை விரும்புபவன் மறவாமல் செய்யத்தக்கது என்னவென்றால், பிறருடைய பெருமைகளையெல்லாம் மற்றவர் அறியுமாறு வெளியே பரப்பி, அவர் தம் தீமைகளை வெளியே பரப்பாமல் காத்து வணக்கமான மொழிகளையே பேசி வருதலாகும்.
தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியனுலகின் வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்.
- பழமொழி நானூறு _ முன்றுறையரையனார்.
தம்பால் அமைந்திருக்கும் சிறுமை குணங்களை நீக்காதவராகிய ஒருவர், பிறர் குறைகளைச் சுட்ட முனைந்து இடைபுகுதல் பொருந்தாததாகும். வெள்ளாடானது தனது வாத நோயைப் போக்கிக் கொள்ளாது. பிறரது வாத நோயைத் தீர்க்க உதவும்.
தன் குறைகளை நீக்காத ஒருவர் மற்றவர் குறைகளை நீக்க முயலுதல் பொருந்தாது என்பது கருத்து .
இசைந்த சிறுமை யியல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
- நல்வழி- சமண முனிவர்கள்.
கீழ்மைக் குணம் பொருந்திய நற்குணம் இல்லாதவரிடத்து, நட்புக் கொண்ட அளவும் துன்பமேயாம்.
நடுங்குவதற்குக் காரணமாகிய தீச்செயல்களை விளையாட்டாகவும் பிறருக்குச் செய்ய விரும்பாத பெருமைக்குணம் கொண்ட பெரியோரிடத்துக் கொண்ட பகையும் பெருமையடையும்.
நல்லார் இடத்தும்
குறை யொன்றே
காணும் சிறுமை.
அல்லார் இடத்தும்
நிறை யொன்றே
காணும் பெருமை!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment