Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 1175



பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்
குறள் - 1175

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

விளக்கம் :- காமநோயை உண்டாக்கிய என் கண்கள் இன்று கடலும் சிறிதாகும்படி கண்ணுறங்க முடியாமல் துன்புற்று வருந்துகின்றன.

காதலர் ஒருவரை ஒருவர் பெற விழைந்த வேட்கையில் உள்ள தூய்மையைக் காட்டுவதே கனவியலில் திருவள்ளுவர் நோக்கம்.

காதலர் ஒருவர்க்கு ஒருவர் இன்றியமையாதவராய் அன்பால் பிணைப்புண்டு இருத்தலை விளக்குவதே கற்பியலில் வள்ளுவரின் நோக்கம். அதனால் களவியலில் குறிஞ்சித் திணைகூறுகின்றார். கற்பியலில் பெரும்பாலும் பாலைத் திணைகூறுகின்றார்.

தலைவனைக் காணாத கண்கள் கண்ணுறங்காது துயருறுகின்றன.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


அது கொல் தோழி காமநோயே
வதி குருகு உறங்கும் இன்னிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே.

_ குறுந்தொகை - நரிவெரூஉத் தலையார்.

இனிய நீர்ப் பரப்பை உடைய கடல் சார்ந்த கடற்கரைக்குத் தலைவன் என்னைப் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை போலும் மைதீட்டிய என் கண்கள் இமை பொருந்தி உறங்க இயலாதனவாயின. தோழி, காம நோய் என்பது இதுதானோ?

தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ் பூஞ்சேக்கை மேவாது கழிய
துணைபுணர் அன்னத் தூவியிற் செறிந்த
இணை அணை மேம்படத் திருந்து
துயில் பெறாஅது ...

- சிலப்பதிகாரம் _ இளங்கோவடிகள்.

தலைவனைப் பிரிந்த மகளிர் செங்கழுநீர் பூக்களும், குவளை மலர்களும் ஒருசேரத் தூவி மென்மலர் விரித்த பூம்பஞ்சணையிலும் படுக்கை நிலை கொள்ளாது, அன்னத்தின் தூவியினைச் செறிந்த பஞ்சணையின் மீது படுத்தும் உறக்கம் வராமல் துடிதுடித்தனர்.

துணைபுனர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும்
துஞ்சாக்கண்ணள் துயர் அடச்சாஅய்
நம்வயின் வருந்தும்.

- நற்றிணை - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்.

துணையைப் பிரிந்து அன்றில் பறவை துயரக் குரலெடுத்துக் கத்துவதைக் கேட்டு , என் தலைவி எனை நினைந்து கண்ணுறங்காது வருந்தித் துடிப்பாளே என்று என் தலைவன் என்ன எண்ணிப் பார்ப்பாரோ தெரியவில்லையே என்கிறாள்.

மையிட்ட கண்ணருவி வார வளை சோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தித்
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்.

- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.

நளனை நினைந்து தமயந்தியின் மை தீட்டப்பெற்ற கண்களில் இருந்து அருவி போல நீர் பெருகி வந்தது. உடல் மெலிந்ததால் கைவளையல்கள் கழன்றன.தவம் செய்வார் தீயினிடையே கண்ணீர் பெருகி வணங்கி நிற்பர். அதுபோல மாரனுடைய மலரம்புகளாகிய தீயினிடை இருந்து துன்பத்தால் கண்ணீர் சொரிந்து நளனையே நினைந்து தவம் செய்வாள் போலிருந்தாள் தமயந்தி,

மாக் கடல் சேர் தண் பரப்பன்
மார்பு அணங்கா மாக் கடலே
என் போலத் துஞ்சாய் இது செய்தார்யார் _ உரையாய்
என் போலும் துன்பம் நினக்கு?

- திணைமாலை நூற்றைம்பது _ கணிமேதாவியார்.

பெருங்கடல் அலைகளால் திரண்ட மணலையும் சேர்த்து வைத்திருக்கும் கடற்கரைச்சோலையை அலைகள் வந்து மோதுகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த தலைவனின் மார்பை எண்ணி கலங்கத் தேவையில்லாத பெருங்கடலே, என்னைப் போல் நீயும் உறங்காது இரவெல்லாம் அலை வீசுகின்றாய். எனக்கு துன்பம் தந்தவரைப் போல உனக்குத் துன்பம் தந்தது யாரென்று சொல் என்கிறாள் தலைவி.
என் போலத் துஞ்சாய் - என்று கடலை நோக்கி தலைவி கூறுவது அழகிய கற்பனை.

தலைவனை நினைந்து உறங்க முடியாமல் துன்புறுகின்றன தலைவியின் கண்களும் மனமும்.

கானுறங்க காற்றுறங்க
கடலலைகள் தானுறங்க
மானுறங்க மீனுறங்க
மயிலினமும் விழியுறங்க
வானுறங்க நிலவுறங்க
வனக்கிளிகள் தானுறங்க செடியுறங்க கொடியுறங்க
சேற்றுவயல் நாற்றுறங்க
நாளுறங்க பொழுதுறங்க
நானொருத்தி யுறங்காமல்
இரவுக்குத் துணையாக
எத்தனைநாள் விழித்திருப்பேன்!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...