Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 653



பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 66. - வினைத்தூய்மை
குறள் - 653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

விளக்கம் :-மேன்மேலும் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள், தம் மதிப்பு கெடுதற்குக் காரணமான தகாதசெயல்கள் செய்தலை தவிர்க்க வேண்டும்.

சில நேரங்களில் நல்ல நோக்கத்திற்காக சிறு தவறுகள் செய்ய நேர்தல் உண்டு. அப்போது விளையும் நன்மையைக் கருதி அதைச் செய்வது நல்லதா? அல்லது குற்றத்தைக் கருதிக்கை விடுவது நன்றா? என்று வெவ்வேறு வகையாகக் கருதுபவர்கள் உண்டு.
திருவள்ளுவரின் கருத்து தெளிவானது.
தன் மதிப்பு கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்தல் கூடாது. அது நம் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குலைக்க வல்லது. அத்தகு தகாதசெயல்களை செய்யாது தவிர்த்தல் வேண்டும் என்கிறார்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

தூக்கி வினை செய்.
_ ஆத்திசூடி - ஒளவையார்.

நல்ல செயலை சீர்தூக்கி முடிக்கும் உபாயத்தை அறிந்து செய்ய வேண்டும்.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

ஒரு செயலின் விளைவில் இருந்தே ஒருவர் செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.

பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம்.
_ உலகநீதி - உலகநாதர்.

புகழ் அடைவதற்குக் காரணமான நல்ல செயல்களைச் செய்யாது விலக்க வேண்டாம்.

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துத் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பல புள்ளிகளையுடைய, சிவந்த கண்களையுடைய புலி ஏறானது மிகுந்த பசி கொண்டும் பசுங்கொல்லைகளில் உள்ள பசிய பயிர்களைத் தின்னாது. அதுபோல நன்னெறி ஒழுகுதலில் உறுதியாக நின்றவர்கள் வறுமையுற்றாலும் முறையல்லாதவற்றைச் செய்வதற்கு மனங்கொள்ள மாட்டார்கள்.


நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லோரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமற் றதுவே.
- புறநானூறு - நரிவெரூஉத்தலையார்.

நல்ல செயல்கள் செய்ய மாட்டீராயினும், தீயவற்றைச் செய்யாது விலக்குங்கள். யாவரும் புகழ்வதற்கும், நல்வழியில் செலுத்தி உய்யுமாறு செய்வதற்கும் அதுவே ஏற்ற வழியாகும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.
- கணியன் பூங்குன்றனார்.

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
-நல்வழி - ஒளவையார்.

புண்ணிய செயல்களால் இன்பமும், பாவத்தால் அழிவும் நேரும். எல்லா சமயத்தினர் சொல்வதும் இதுவன்றி வேறில்லை. எனவே தீயவற்றைச் செய்யாது நன்மையே செய்தல் வேண்டும்.

இசைகுன்றா வினைபுரிந்து 
வசைநீங்கி வாழ்க!

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...