பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 36- மெய்யுணர்தல்
குறள் - 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
விளக்கம் - எப்பொருள் எத்தன்மை கொண்டு புறத்தே தோன்றினாலும் அப்பொருளின் உண்மையான இயல்பினைக் கண்டு உணர்வதே மெய்யுணர்வாகும்.
வாழ்க்கையில் அறியாமையும், எல்லாம் அறிந்தது போல் காட்டிக் கொள்ளும் போலியறிவும் உள்ளவரையிலும், இல்லாத துன்பமெலாம் இருப்பதாகக் கொண்டு கவலையும், அச்சமும் மிகுந்து துயருற நேர்கின்றது. உற்ற துயரைப் போக்கிக் கொள்ள வழியறியாது திகைக்கவும் நேர்கின்றது. ஆகவே நலவாழ்விற்கு மயக்க உணர்வு நீங்கி மெய்யுணர்வு ஓங்க வேண்டும்.
மெய்ப்பொருள் அல்லாதவற்றையெல்லாம் மெய்ப்பொருள் என்று நினைப்பதே மயக்க உணர்வு. அந்த மயக்க உணர்வால்தான் துன்பமான பிறவியும், துன்பமான வாழ்க்கையும் ஏற்படுகிறது.
எதுவாயினும் உண்மை இயல்பினை உணர்ந்து நடக்கும் மெய்யறிவு பெற்றால் எப்போதும் துன்பமில்லை.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
கற்றுத்துறை போய காதலற்கு கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்தவெலாம் துன்பமலா தில்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
கற்க வேண்டியவற்றைக் கற்று அதன்படி நடக்கும் கணவனுக்கு கற்புள்ள மனைவி பெற்றுக் கொடுத்த தலைமகனைப் போல், இருவகைப் பற்றினையும் அறவே ஒழித்த ஞானிகளுக்கு மெய்யுணர்வில் தோன்றும் இன்பமே மிகுந்த இன்பம் தருவதாகும்.
பொய்ப்புலன் களைந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் _ துப்பிற்
சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் றுரும்பு.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.
சுழற்காற்றானது சிறிய துரும்பை சுழற்றும். அதுதன் வலிமையால் கல் துணை சுழற்றியடிக்காது. அதுபோல பொய்யாகிய ஐம்புலன்களும் இதன் தன்மை இத்தகையது என்றுணர்ந்த மெய்யுணர்வாளர்களை துன்பப்படுத்தாது.
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
-நல்வழி _ ஒளவையார்.
ஆராய்ந்து பார்க்கின் இவ்வுடம்பு புழுக்களும், பிணிகளும் நிறைந்த புல்லிய குடிசை என்பதை மெய்யறிவாளர்கள் அறிந்திருப்பர். ஆதலால் தாமரை இலை தண்ணீர் போல் எதிலும் ஒட்டாது பற்றற்றிருப்பார்கள்.
பட்டைக்கிழித்து பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து
முட்டச் சுருட்டியென் மொய்குழலால்கையில் முன்கொடுத்துக்
கட்டியிருந்த கனமாயக் காரிதன்காம மெல்லாம்
விட்டுப்பிரிய என்றோ இங்ஙனேசிவன் மீண்டதுவே.
- பட்டினத்தார்.
பட்டுத்துணி கிழித்து பருத்த ஓர் ஊசியுள் அதை வைத்துச் சுருட்டி அடர்ந்த கூந்தலையுடைய மனைவியின் கையில் கொடுத்தருளி, என்னைப் பற்றிய மாயையின் ஆசைகள் என்னை விட்டோடின என்று இப்பிறவியில் உண்மை தெரிந்து உணரும் படிக்கே கையில் காதற்ற ஊசியைக் கொடுத்து விட்டார்.
பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற் றுழி .
_ நாலடியார் -சமண முனிவர்கள்.
உடலாகிய பொருளின் இழிவை அறியாமல், பூசப்பட்ட சந்தனத்தையும் மாலையையும் பார்த்து மயங்கி, அவ்வுடம்பைக் கொண்டாடுபவர்கள், முடை நாற்றம் வீசும் இவ்வுடலாகிய வண்டி, உயிராகிய அச்சுமரம் முறிந்த இடத்து, அதனைக் கழுகுகள் நெருங்கி குத்தித் தின்னுதலைப் பார்த்திருக்க மாட்டார்களோ?
புறத்தன்மையை வைத்து மதிப்பிடாமல் உண்மை இயல்பினை உணரும் அறிவே மெய்யறிவாகும்.
போலியைக் கண்டு மயங்கி
புத்தியை இழப்பது புல்லறிவு.
உண்மை நிலையினை உணர்ந்து
உணர்வில் தோன்றுவதே மெய்யறிவு !
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment