Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 1124



பால் - இன்பத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் - 113 - காதற் சிறப்புரைத்தல்
குறள் - 1124

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.

விளக்கம் :- ஆராய்ந்து அணிந்த அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்து வாழ்தல் என்பது உயிர் உடலோடு சேர்ந்து இன்பத்தை நுகர்வது போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல் என்பது உயிர் பிரிந்து சாதலைப் போல துன்பத்தை அநுபவிப்பதாகும்.

அன்பை அடிப்படையாகக் கொண்ட உறவையே காதலரிடையே காண்கிறோம்.. தலைவனும் தலைவியும் தன் காதல் மிகுதி கூறுதலாகும்.

இன்றைய காதலர்கள் வசதியாக வாழ்வதும், விதவிதமாக உணவு வகைகளை உண்பதும், வாகனங்களில் ஊர் சுற்றுவதுமே காதல் என்று நினைக்கின்றனர்.

உயிர்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காதல். காதலின் சிறப்புக்குக் காரணம் புரிதலும், முழு மன உணர்வுமேயாகும். காதலர் கருத்தொருமித்து உளம் மாறிப் புகுந்து கூடுவதே முழு மன இன்பமாகும். அதில் பிரிவு என்பது முழு மனத் துன்பமாகும்.. நம் ஐயன் வள்ளுவர் கூடும் இன்பத்தை களவியலிலும், பிரிவுத் துன்பத்தைக் கற்பியலிலும் புலப்படுத்துகிறார்.

உயிரும் உள்ளமும் கலந்து ஒருவர்க்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுக்கும் மனநிலையும் கொண்டு இயைந்து வாழ்ந்தால் உயரிய அறங்கள் பிறக்கும் இடமாகக் குடும்பங்கள் திகழும்.

உயிரிலும், உள்ளத்திலும் கலந்த மனதிற்கினிய பெண்ணின் உறவு தான் உயிருக்கு வாழ்வு போன்றது. அவளின் பிரிவு உயிருக்கு இறுதி போன்றது.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


செம்புலப் பெயல்நீர் போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே .
- குறுந்தொகை - செம்புலப் பெயனீரார்.

ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் செம்மண் நிலத்துப் பெய்த மழைபோல இரண்டற நெஞ்சங் கலந்திருப்பர்.

மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடற்(கு) உயிர் ஒன்(று) ஆயினார்.

- கம்பராமாயணம் .

இராமபிரானும், சீதாதேவியும் பார்த்த மாத்திரத்திலேயே உயிரும் உணர்வும் ஒன்றாயினர்.

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சு நேர்பவளே.

_ குறுந்தொகை - அம்மூவனார்.

இப்பிறப்பு நீங்கி மறுபிறவி வருமாயினும் நீயே என் கணவனாகுக. யானே உனது நெஞ்சுக்கு உகந்தவளாக ஆகுக என்று தலைவி எண்ணுகிறாள்

புலம்பு கொண்டு உறையும் புண்கண் வாழ்க்கை.
_ நற்றிணை -மோசிகண்ணத்தனார்.

பொருள் காரணமாக பிரிய நேர்ந்தாலும் அப்பிரிவு துயர்மிகு வாழ்க்கையாகும்.சிறுuரிவாயினும் அன்றிற் பறவை போல் அல்லல்படும்.

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.

- கலித்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ.

இல்லறத்தில் பொருளால் வறுமை ஏற்பட்டு ஒரே ஆடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்தும் நிலைவரினும் வாழ்நாள் முழுதும் இணைந்து வாழும் வாழ்க்கையே இனிமை பயப்பது.

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர்சாலாவே.

- குறுந்தொகை - பரூஉ மோவாய்ப்பதுமன் .

விரிந்த கடலையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகமும், பெறுதற்கரிய சிறப்பினை உடைய தேவருலகம் ஆகிய இரண்டனையும் ஒருங்கு சேர்த்து தராசில் வைத்து சீர்தூக்கிப் பார்த்தால் அவ்விரு உலகங்களும் என் தலைவியோடு கூடி இன்புற்ற இன்பத்திற்கு ஈடாகாது என்கிறான்.

எல்லாம் எவனோ பதடி வைகல்
அரிவைத் தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.

- குறுந்தொகை - பதடி வைகலார்.

எம் தலைவியின் தோள் இணையைத் தழுவி உறங்கிக் கழிந்த நாட்களே வாழ்ந்த நாட்களாகும். பிற எல்லாம் என்ன பயனுடையன? அவை வாழாநாட்களே.

மணம் கமழ் கானல் இயைந்தநம் கேண்மை
ஒருநாள் பிரியினும் உய்வு அரிது.

- நற்றிணை - உலோச்சனார்.

ஒருநாள் பிரிந்தாலும் பிரிவுத் துன்பமானது உயிர் பிரியக் கூடிய அளவு தாங்கொணா துன்பம் தருவதாகும்.

காலங்கள் கடந்தும் உணர்வு ஒன்றாமல் வாழ்வதல்ல வாழ்க்கை.
எண்ணங்களால் கலந்து
கருத்தொருமித்து
நீயின்றி நானில்லை - என்ற
நினைவு மேலோங்கி
காலங் காலமாய்
நிலைத்து வாழ்வதே
உண்மைக் காதல்!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...