பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 34 - நிலையாமை
குறள் - 339
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
விளக்கம் :- இறப்பு என்பது உறங்குவதைப் போன்றதாகும். பிறத்தல் என்பது உறக்கத்திலிருந்து கண் விழிப்பது போன்றதாகும்.
வாழும் உலகம் இத்தன்மையது, உடல் இத்தன்மையது, உயிர் இத்தன்மையது செல்வம் இத்தன்மையது என்று முன்னமே அவற்றின் நிலையாமை அறிந்து கொண்டால் பிரிவோ இழப்போ, மாறுதலோ நேர்ந்தபோது மனங்கலங்கி வருந்திச் சோர்வடைய நேராது.
நிலையாமையை உணர்தல் அஞ்சி ஒடுங்குவதற்காக அன்று, வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து, அஞ்சாமல் நின்று சோர்வற்று வாழ்வை நடத்திச் செல்வதற்கே ஆகும்.
பிறப்பும், இறப்பும் விழிப்பதும், உறங்குவதும் போன்றனவே.விழிப்பு உள்ள போதே கடமைகளைச் செய்து முடிப்பது போல, நம் வாழ்வு உள்ளபோதே அறத்தைப் பின்பற்றி உயர வேண்டும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
Death is certain to all.All shall die.
- Shakespeare .
இருப்பது பொய் போவது மெய்யென் றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே.
- பட்டினத்தார்.
பிறந்தவர் அனைவரும் கண்டிப்பாக போகத்தான் போகிறோம். நிலையாக இருக்கப்போவதில்லை என்று உடலின் நிலையாமையை உணர்ந்து ஒருவருக்கும் தீங்கு நினையாதே மனமே என்கிறார் பட்டினத்தடிகள்.
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி
இன்னினிய செய்க அறவினை - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்
- நாலடியார்_சமண முனிவர்கள்
இப்பொழுதே, இப்பொழுதே ஒருவன் நின்றான், உட்கார்ந்தான், படுத்தான், தன் சுற்றத்தார் அலற இறந்தான் என்று சொல்லப்படுதலால், புல்லினது நுனியிலுள்ள நீரைப் போல உடல் நிலையில்லாதது என்று உணர்ந்து, உயிர் உடலோடு கூடி இருக்கின்ற போதே ஒவ்வொருவரும் அறச் செயலை செய்க.
நல்லது நாடுமின்
உள்ளது கொடுமின்
வழாஅல் இன்பமும் புணர்மின்
_ ஆசிரிய மாலை .
நல்லவற்றைச் செய்து உள்ளவற்றைக் கொடுத்து இன்பம் அடையுங்கள்.
ஒருவன் இறப்பிற்குப் பின்னரும் பேசப்பட வேண்டும். பூத உடல் மறைந்தாலும் புகழ் அழியக்கூடாது. அதுதான் நிலையானது,
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் வயதும் இன்னே மேல்வரு மூப்புமாகி
நாளும்நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னே?
-குண்டலகேசி -நாதகுத்தனார்.
கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்
சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.
குண்டலகேசியும், சிலம்பும் யாக்கை நிலையாமையை தெற்றென பகர்கின்றன.
மணவணி யணிந்த மகளி ராங்கே
பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ
உடுத்த வாடை கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
- நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.
மணக் கோலம் பூண்ட மகளிர் அவ்விடத்தே கணவனை இழந்ததால் பிணத்தைத் தழுவி உடுத்த கூறையே கோடியாக , பூவுடன் முடித்த கூந்தலை விரித்து அழுவர் என்று வாழ்வு நிலையாமையை உணர்த்துகிறது.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போ மளவும்
எமக்கென் னென்றிட் டுண்டிரும்.
- நல்வழி - ஒளவையார்.
மிகப் பெரிய பரந்த இப்பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டாண்டு தோறும் புரண்டு கதறினாலும் இறந்தவர் திரும்பி வருவதோ? அது இயலாது. ஆதலினால் நமக்கும் அதுவே வழியென்று உணர்ந்து நம்முடைய இறுதி நாளளவும் மற்றவர்களுக்குக் கொடுத்து நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.
இந்த உயிரும் உடலும் காலம் வந்தபோது பிரிந்து விடும். இதன் நிலையாமையை உணர்ந்து நல்லதையே நினைந்து நல்லதையே செய்து நிலையாக நிற்போம் அனைவரது நெஞ்சங்களிலும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
No comments:
Post a Comment